Tuesday, January 6, 2009

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) – 10



பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9.

எல்லா நேரமும் என்னுடைய குடும்பத்தில் இத்தனை பிரச்சினைகள் இருந்தது என்று சொல்ல முடியாது, ஒரு சில சமயம் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டார்ளோ? என்று நான் நினைத்து சந்தோஷப்படும் அளவுக்கு ஏதாவது முன்னேற்றம் நிகழும். ஒன்று சொன்னால் எனக்கே நம்ப சிரமமாக இருக்கும், என்னுடைய பெற்றோர்களின் திருமணம் காதல் திருமணம்! 4 வருடங்கள் அம்மாவை ஒரு தலையாக(!) காதலித்து அப்பா திருமணம் செய்துக்கொண்டாராம். காதல் என்றால் வேறெதுவும் ரொமாண்ட்டிக்காக கற்பனை பண்ணிவிடாதீர்கள். அம்மாவுக்கு ஸ்கூல் முடிந்து வரும் போது பத்திரமாக வீடு வரை பின் தொடர்ந்து வந்து பாதுகாப்பு கொடுப்பது, டைப்பிங் க்ளாஸில் இருந்து பாதுகாப்பு கொடுப்பது- இப்படி தொடர்ந்து இலவச செக்யூரிட்டி சர்வீஸ் செய்து கொடுத்திருக்கிறார். இருவரும் ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொண்டதில்லையாம்(Do you hear a alarm going off in your head?)

இவர்களின் கல்யாணக்கதையைப்பற்றி பேசினால் மட்டும், இருவர் முகத்திலும் புன்சிரிப்பு அரும்புவதை பார்த்திருக்கிறேன். அப்பா,அம்மா பின்னால் சுற்றியதை நேரடியாக ஒப்புக்கொள்ளவே மாட்டார். அம்மா எங்களிடம் ஏதாவது கல்யாணக்கதை சொன்னால், "நம்பாதேமா, பாவம் ஏதோ கற்பனையில் மிதக்கிறாள்" என்றெல்லாம் இடையிடையே கமெண்ட் அடித்துக்கொண்டே இருப்பார். எனக்கே ஒரு வேளை அம்மா ரொம்ப கற்பனை பண்ணுகிறாரோ? என்று சந்தேகாமாக கூட இருந்தது, ஒரு நாள் பெரியம்மாவின்(அம்மாவின் அக்கா) பழைய திருமண ஆல்பம் பார்க்கும் வரை.

சில படங்களில் ஓரமாக ஒல்லியான உருவத்துடனும், கட்டம் போட்ட சட்டை, பெல் பாட்டம் பேண்டுடன் அசடு வழிய சுப்ரமணியபுரம் ஹீரோ மாதிரி நிற்பது அப்பாவா? அப்பாவே தான்! அம்மாவின் அக்கா கல்யாணத்துக்கு, தானே வலிய வலிய எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்திருக்கிறார், எல்லாமே அம்மாவுக்காக! அதே புகைப்படங்களில், கொஞ்சம் தள்ளி பட்டுப்பாவாடை தாவணியுடனும், முகம் முழுக்க பெருமிதத்துடனும் தேவதைப்போல அம்மா நிற்கிறார். இருவர் முகத்திலும் எத்தனையோ எதிர்பார்ப்புகள், கனவுகள்! இங்கே யார் எதிர்ப்பார்ப்பை யார் நிறைவேற்றவில்லை, ஏன் இப்படி எல்லாம் ஆக வேண்டும் என்பதெல்லாம் எனக்கு இன்னும் புரியவில்லை. புகைப்பட ஆதாரத்துடன் அம்மா மடக்கியவுடன், அப்பாவுக்கு பேச்சே வராது. சிரித்துக்கொண்டே, "உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லை" என்று ஏதோ அவசரமான வேலை இருப்பது போல எழுந்து சென்றுவிடுவார்.

பெப்சி உமாவுக்குப்பிறகு வேறொரு பெண்ணும் அப்பாவின் கருத்தைக்கவர்ந்தார், வேறு யாரும் இல்லை, சிம்ரன்! ஒரு நாள் டிவியில் "மனம் விரும்புதே" பாட்டுக்கு சிம்ரன் ஆடுவாரே, அந்தப்பாடல் வந்தது, அப்பா உடனே, “யாருமா இந்த பொண்ணு?” என்று ஆர்வமாக கேட்டுத்தெரிந்துக்கொண்டார். அதற்குப்பிறகு எல்லாம் சிம்ரன் மயம். சிம்ரன் படம் என்றால் அது எத்தனை கேவலமான படமாக இருந்தாலும் குடும்பதோடு கிளம்பிவிடுவார். அம்மாவுக்கு ரொம்ப எரிச்சல் வரும், “இவள் ஒரு அழகா? பல்லிக்கு பாவாடை சட்டை போட்ட மாதிரி” என்று திட்டிக்கொண்டே கிளம்புவார்.

“ஓவர் வெயிட்டாக இருப்பதால் அப்பாவுக்கு பிடிக்காமல் போய்விட்டதோ” என்ற சந்தேகம் அம்மாவுக்கு வந்துவிட, அதற்கு பிறகு இரவு நேரத்தில் சாப்பிடாமல் டயட் பண்ண துவங்கினார். இரண்டு நாள் பேசாமல் இருந்த அப்பா, மூன்றாவது நாள் “ஏன் அம்மா சாப்பிடாமல் இருக்கிறாள்” என்று கேட்க, நான் உடனே “சிம்ரன் மாதிரி இளைக்க டயட் பண்றாங்க” என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான் க்ளாசிக்! “உங்க அம்மா தான் எனக்கு சிம்ரன்! அந்தப்பொண்ணு எல்லாம் என்ன அழகு, சும்மா பல்லிக்கு பாவாடை சட்டை போட்டது மாதிரி” என்று அம்மாவின் டயலாக்கை குறும்பாக அவரிடமே திரும்ப சொல்ல, அம்மாவுக்கு ஒரே பூரிப்பு. அதில் இருந்து அம்மாவை கிண்டல் பண்ண “அம்மா” என்று அழைக்காமல், “சிம்ரன்” என்று கூப்பிடுவோம், காலப்போக்கில் அது “சிம்” என்று உருமாறியது. இங்கே கூட பல முறை “சிம்” என்று எழுதி விட்டு பிறகு அம்மா என்று திருத்தி இருக்கிறேன்.

இப்படி ஒரு சில மணி நேரம் இரண்டு பேரும் பழைய ரொமாண்டிக் கனவுகளில் மூழ்குவார்கள், வீடு கொஞ்சம் கலகலப்படையும். ஆனால் அந்த மகிழ்ச்சி எல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது, மீண்டும் வேதாளம் முருங்க மரம் ஏறிவிடும். இந்த உலகத்திலேயே ரொம்ப அசிங்கமான சண்டையாக நான் கருதுவது என்ன தெரியுமா? கணவன் –மனைவியிடையே நடக்கும் பொருளாதாரம் சம்மந்தமான சண்டைகள்! அப்பாவின் வரவு- செலவு கணக்குகளில் அம்மாவுக்கு ரொம்ப சந்தேகம். முக்கியமாக பொங்கல், தீபாவளி போனஸ் சமயங்களில் சண்டை ரொம்ப தீவிரமடையும்.

சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சரியாக கணக்கு காட்டாமல் மறைக்கிறார் என்பது அம்மாவின் ஆதங்கம். “அதென்ன ஆச்சு, இதென்ன ஆச்சு” என்று தொடர்ந்து அப்பாவை நச்சரிப்பார்(எனக்கு அப்போது அது நச்சரிப்பாக தோன்றியது). ஒரிரண்டு முறை பொறுமையாக பதில் சொல்லும் அப்பா, மூன்றாவது முறை பொறுமை இழப்பார். அவருக்கு கோபம் வந்தால் ரொம்ப அதிகமாக கோபம் வரும், அன்பும் அப்படியே. “ஆமாம் எல்லா பணத்தையும் தே---------- கொடுத்துட்டு வந்தேன், என்ன செய்யனுமோ செய்” என்று பதிலுக்கு இவர் கத்த, அப்புறம் ஒரே கூச்சல், சண்டை, அழுகை. இதுவே ஒரு தொடர்கதையாகப்போனது. அப்போது நான் முடிவு செய்தது தான், “அன்புக்குரியவர்களிடம் பணம் காரணமாக என்றுமே சண்டை போட மாட்டேன்” என்பது.

நான் கொஞ்சம் வளர்ந்து, வரவு செலவு கணக்குகள் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டவுடன், ஒரு முறை அப்பா அக்கவுண்டுகளை சரி பார்த்தபோது ஒன்றை கண்டுபிடித்தேன். நிச்சயமாக கணக்கு சரியாக இல்லை. அம்மா எல்லாவற்றுக்கும் அழுது சண்டை போடுவாரே தவிர, என்னை மாதிரி ஆதாரம் எல்லாம் கண்டுபிடிக்கத்தெரியாத அப்பாவி அவர். எல்லாவற்றுக்கும் ஒழுங்காக கணக்கு எழுதி வைக்கும் பழக்கமுடைய அப்பா, சில செலவு கணக்குகளை எழுதாமல் மறந்திருப்பார் என்பதை நான் நம்பவில்லை. ஏதோ நடந்திருக்கிறது அல்லது நடந்துக்கொண்டு இருக்கிறது. இதை வெளியே சொல்ல எனக்கு பைத்தியமா? அம்மாவிடம் இன்று வரை இதைப்பற்றி மூச்சுவிட்டதில்லை.

- நினைவுகள் தொடரும்

34 comments:

  1. தொடர் நன்றாக போகிறது, ஒளிவு மறைவின்றி எழுதி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  2. வாங்க தமிழ் ப்ளாகர்ஸ் யூனிட்?

    ReplyDelete
  3. வாங்க கோவிக்கண்ணன். என்னுடைய பதிவுக்கு முதல் முறை கமெண்ட் எழுதி இருக்கீங்க, ரொம்ப நன்றி :)

    ReplyDelete
  4. யதார்த்தம் நிரம்பிய தொடர்...இயல்பான வசன் நடை...தொடருங்கள்....

    ReplyDelete
  5. வாங்க கமல். முதல் வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  6. கோவி சொன்னது போல், ஒளிவு மறைவில்லாமல் எழுதுற கயல்! அதுதான் உன்னோட ஸ்பெஷாலிட்டி!

    நிறைய தடவை இதை சொல்லியாச்சு!

    Men always "lie" about few things but it may not be "bad things" sometimes :) It may be hard to explain. Why should not they have someting "private" on their own ?

    ReplyDelete
  7. என்னது கணக்கு வழக்க மறைச்சிட்டாரா?
    சும்மா கொஞ்சம் ஜாலியா செலவு பண்ணிருப்பாருங்க, அத சொன்னாலும் சண்டை வரும் அதுனால சொல்லாமா இருப்பாங்க.

    ReplyDelete
  8. //Men always "lie" about few things but it may not be "bad things" sometimes :) It may be hard to explain. Why should not they have someting "private" on their own ?//

    இருக்கலாம் வருண், தப்பே இல்லை.
    அம்மாவுக்கு அப்பாவுக்கு தெரியாமல் புடவை, ஜுவல்லரி எல்லாம் வாங்குவார். அப்பா அதை எல்லாம் கேட்பது இல்லை.

    இங்கே பிரச்சினை முக்கியமாக பணம் என்பதை விட ஜெலஸி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். எங்கே அவர் நிம்மி போன்ற பெண்களின் மேல் செலவு செய்கிறாரோ என்பது தான் அம்மாவின் முக்கியமான கன்சர்ன் என்று நினைக்கிறேன்.

    மேலும் ஆண்களுக்கு ரொம்ப நாள் அகப்படாமல் தவறு செய்யும் திறமை இல்லை என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம் :) :)

    Thanks for your comment, that's very sweet of you

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி குடுகுடுப்பை. :)

    உங்க கமெண்டுக்கு வருணுக்கு கொடுத்த பதிலை பார்க்கவும்.

    ReplyDelete
  10. நன்றாக எழுதுகிறீர்கள், வாழ்த்துகள். இது வரையில் உங்கள் தளம் வந்தது இல்லை. 360 நல்ல ஓட்டம் இருந்தாலும் கதை செல்லும் பாதை மிகவும் கோனல் மானலாக நெளிந்துள்ளது. நன்றாக தொகுத்து எழுதவும். கருத்து எல்லாம் சொல்லப்போவது இல்லை, முடிந்தால் 360 முடிவில் தெரிவிக்கிறேன்.

    பனிமலர்.

    ReplyDelete
  11. பனி மலர்

    முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. இது வெறும் கதையல்ல,பல அனுபவங்களின் தொகுப்பு. இதின் பாகங்களை மாற்றி மாற்றி எழுதவும் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. சில விஷயங்களை என்னால் தொடர்ந்து எழுத முடியாது, எழுதவே முடியாத வண்ணம் பழைய கசப்பான நினைவுகள் அழுத்தும். அதற்காகவே நடு நடுவே வேறு அனுபவங்களையும் கலந்து எழுதுகிறேன்.

    I am just trying to make it easy on myself, sorry about the confusion:)

    ReplyDelete
  12. ***மேலும் ஆண்களுக்கு ரொம்ப நாள் அகப்படாமல் தவறு செய்யும் திறமை இல்லை என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம் :) :)***

    Well, there must be plenty of men who never get caught! :) There are few who got caught! :)

    Trust me, when it comes to cheating men beat women fair and square!

    ***Thanks for your comment, that's very sweet of you. ***

    It is my responsiblity to speak for "poor men", Kayal :)

    ReplyDelete
  13. கயல்,

    உங்களது உணர்வுகள் புரியாமல் இல்லை, இந்த வருத்ததிலும் உறுதியோடு நீங்கள் எழுதுவதே பெரிய செயல், நீங்களே சொல்வது போல் கொஞ்சம் நிதானமாக எழுதுங்கள் ஓட்டம் உங்களுக்கே தெரியும். மற்றபடி எழுத்து அசத்துகிறீர்கள், தொடர்ந்து படிப்பேன் செய்திக்காக அல்ல உங்களது எழுத்து நடைக்காக....

    பனிமலர்.

    ReplyDelete
  14. //Well, there must be plenty of men who never get caught! :) There are few who got caught! :)

    Trust me, when it comes to cheating men beat women fair and square!//

    இப்படி ஒரு கோணம் இருக்குமோ? ஒரு வேளை என்னுடைய அப்பா தான் அசடு மாதிரி மாட்டிக்கொள்வார் போல. LOL

    //It is my responsiblity to speak for "poor men", Kayal :)//

    poor men? நல்லா இருக்கு உங்க கதை! :) :)

    ReplyDelete
  15. //கயல்,

    உங்களது உணர்வுகள் புரியாமல் இல்லை, இந்த வருத்ததிலும் உறுதியோடு நீங்கள் எழுதுவதே பெரிய செயல், நீங்களே சொல்வது போல் கொஞ்சம் நிதானமாக எழுதுங்கள் ஓட்டம் உங்களுக்கே தெரியும். மற்றபடி எழுத்து அசத்துகிறீர்கள், தொடர்ந்து படிப்பேன் செய்திக்காக அல்ல உங்களது எழுத்து நடைக்காக....

    பனிமலர்.//

    பனிமலர்

    உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி :) எல்லா பாகத்திலும் "கற்பு நெறி" என்று சொல்லப்படும் கான்செப்டின் முரண்பாடுகள் இருக்கும். எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது, நேர் கோடு போல இல்லாமல் ஒரு வட்டம் மாதிரி. எனவே இந்த 360 டிகிரி :)

    ReplyDelete
  16. //
    எல்லா நேரமும் என்னுடைய குடும்பத்தில் இத்தனை பிரச்சினைகள் இருந்தது என்று சொல்ல முடியாது,
    //

    Life is a sine wave...மேல போன எல்லாம் கீழ வரும்...கீழ இருக்க எல்லான் என்னிக்காவது மேல வரும்....நான் மார்க்கெட் பத்தி சொல்லவில்லை :0))

    ReplyDelete
  17. //
    ஒரு நாள் டிவியில் "மனம் விரும்புதே" பாட்டுக்கு சிம்ரன் ஆடுவாரே, அந்தப்பாடல் வந்தது, அப்பா உடனே, “யாருமா இந்த பொண்ணு?” என்று ஆர்வமாக கேட்டுத்தெரிந்துக்கொண்டார்
    //

    அந்த பாட்டு நல்லாருக்கும்....இப்பிடி நல்லா பாடுதே யார் இந்த பொண்ணுன்னு தெரிஞ்சிக்கத் தான் :0))

    ReplyDelete
  18. //
    “உங்க அம்மா தான் எனக்கு சிம்ரன்! அந்தப்பொண்ணு எல்லாம் என்ன அழகு, சும்மா பல்லிக்கு பாவாடை சட்டை போட்டது மாதிரி” என்று அம்மாவின் டயலாக்கை குறும்பாக அவரிடமே திரும்ப சொல்ல, அம்மாவுக்கு ஒரே பூரிப்பு
    //

    U-turn அடிக்கிறதுக்கெல்லாம் நாங்க சின்ன வயசிலருந்தே பிராக்டிஸ் பண்றது உண்டு..இல்லாட்டி சமாளிக்க முடியுமா :0)))

    ReplyDelete
  19. //
    சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சரியாக கணக்கு காட்டாமல் மறைக்கிறார் என்பது அம்மாவின் ஆதங்கம்.
    //

    கணக்கு கேட்டு தாங்க ஒரு கட்சியே ரெண்டா ஒடஞ்சிது...ஆம்பளைங்களுக்கு முக்கியமா பிடிக்காதது ரெண்டு...ஒண்ணு அவங்கள்ட்ட யாராவது கணக்கு கேக்குறது...இன்னொன்னு அவங்களை வேற யார் கூடயாவது கம்பேர் பண்றது...

    ReplyDelete
  20. //
    ஒரு முறை அப்பா அக்கவுண்டுகளை சரி பார்த்தபோது ஒன்றை கண்டுபிடித்தேன். நிச்சயமாக கணக்கு சரியாக இல்லை.
    //

    பாவங்க உங்க அப்பா....எத்தனை பேரு அவர் கணக்க சரி பார்க்கறாங்க :0))

    கூட்டிக் கழிச்சி பாருங்க...கணக்கு சரியா வரும் :)))

    ReplyDelete
  21. //
    குடுகுடுப்பை said...
    என்னது கணக்கு வழக்க மறைச்சிட்டாரா?
    சும்மா கொஞ்சம் ஜாலியா செலவு பண்ணிருப்பாருங்க, அத சொன்னாலும் சண்டை வரும் அதுனால சொல்லாமா இருப்பாங்க.
    7 January, 2009 10:39 AM
    //

    இதை நான் வழி மொழிகிறேன்...

    அந்த அம்பது ரூபா ஒரு குவாட்டர் வாங்கிட்டேன்...இதை சொன்னாலும் சண்டை...சொல்லாட்டாலும் சண்டை...

    சண்டை எப்படியோ நிச்சயம்...அப்புறம் எதுக்கு சொல்லிக்கிட்டு?

    ReplyDelete
  22. //
    மேலும் ஆண்களுக்கு ரொம்ப நாள் அகப்படாமல் தவறு செய்யும் திறமை இல்லை என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம் :) :)
    //

    நீங்க இந்த மெஸேஜை எல்லா பெண்களுக்கும் சொல்லணும்...

    அடடா.....எல்லாப் பெண்களும் இப்படி நினைச்சா வாழ்க்கை எவ்வளவு நல்லா இருக்கும்....ம்ம்ம்ம்...எங்க நடக்க மாட்டேங்குதே :0))

    ReplyDelete
  23. //நான் மார்க்கெட் பத்தி சொல்லவில்லை :0))//

    இப்படி வேற உங்களுக்கு ஒரு கனவு இருக்கா? பகல் கனவு காண வேண்டாம் :) JK

    ReplyDelete
  24. //அந்த பாட்டு நல்லாருக்கும்....இப்பிடி நல்லா பாடுதே யார் இந்த பொண்ணுன்னு தெரிஞ்சிக்கத் தான் :0))//

    ஆமாம், சிம்ரன் அழகுத்தமிழில் பாட்டுப்பாடுவதைக்கேட்க இரண்டு காது போதாது :) :)

    ReplyDelete
  25. //U-turn அடிக்கிறதுக்கெல்லாம் நாங்க சின்ன வயசிலருந்தே பிராக்டிஸ் பண்றது உண்டு..இல்லாட்டி சமாளிக்க முடியுமா :0)))//

    தெரியுமே, அதுவும் கல்யாணம் ஆனவர்கள் அதில் எக்ஸ்பர்ட்ஸ்

    ReplyDelete
  26. //கணக்கு கேட்டு தாங்க ஒரு கட்சியே ரெண்டா ஒடஞ்சிது...ஆம்பளைங்களுக்கு முக்கியமா பிடிக்காதது ரெண்டு...ஒண்ணு அவங்கள்ட்ட யாராவது கணக்கு கேக்குறது...இன்னொன்னு அவங்களை வேற யார் கூடயாவது கம்பேர் பண்றது...//

    அப்புறம் நச்சரிக்க கூடாது, அப்புறம் அவங்க டிவி பார்க்கும் போது ரிமோட் கேட்க கூடாது, அப்புறம் அவங்க ப்ரெண்டுகளைப்பத்தி தப்பா பேசக்கூடாது, இப்படி நிறைய அப்புறம் எழுதிக்கொண்டே போகலாம் :) :)

    ReplyDelete
  27. //கூட்டிக் கழிச்சி பாருங்க...கணக்கு சரியா வரும் :)))//

    எப்படிப்பார்த்தாலும் கணக்கு சரியா வரல :)

    ReplyDelete
  28. //நீங்க இந்த மெஸேஜை எல்லா பெண்களுக்கும் சொல்லணும்...

    அடடா.....எல்லாப் பெண்களும் இப்படி நினைச்சா வாழ்க்கை எவ்வளவு நல்லா இருக்கும்....ம்ம்ம்ம்...எங்க நடக்க மாட்டேங்குதே :0))//

    வருணும் இதையே தான் எழுதினார். எல்லாரும் சேர்ந்து ஏதோ மெகா மோசடி பண்ணுவீங்க போல, கவனமா இருக்கனும். :) JK

    ReplyDelete
  29. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி அதுசரி :)

    ReplyDelete
  30. ****** அப்புறம் நச்சரிக்க கூடாது, அப்புறம் அவங்க டிவி பார்க்கும் போது ரிமோட் கேட்க கூடாது, அப்புறம் அவங்க ப்ரெண்டுகளைப்பத்தி தப்பா பேசக்கூடாது, இப்படி நிறைய அப்புறம் எழுதிக்கொண்டே போகலாம் *****

    நச்சரிக்கறது, ப்ரெண்டுகளைப்பத்தி தப்பா பேசறது எல்லாம் என்ன ஏக போக உரிமையா பெண்களுக்கு ?

    ReplyDelete
  31. கயல், எந்த அளவுக்கு உங்கள் எழுத்து நட அசத்தலாக இருக்கோ அதே அளவுக்கு நீங்கள் தரும் மறுமொழி அருமை..இதற்காகவே தொடரை தொடர்ந்து வருகிறேன் :-)

    ReplyDelete
  32. கயல்,
    அருமையா எழுதியிருக்கீங்க.
    உங்க பதிவுகளப் படிச்சு நெம்ப நாளாயிருச்சு.(உங்க பதிவு இல்ல, இப்ப எல்லாம் பதிவுகளே படிக்க முடியல).

    ஆம்பளைக்களுக்கு நெம்ப நாள் மாட்டிக்காம தப்பு செய்யவே தெரியாது. இது 100 % உண்மையிங்கோ.

    ReplyDelete
  33. சந்தோஷமான தருணங்களை ரொம்ப இயல்பா சொல்லியிருகீங்க. பிரச்சினைகளை முதன்மையாக சொல்வதால் dysfunctional family என்ற தப்பர்த்தம் ஏற்படாமல் இருக்கவும், உங்கள் அனுபவங்களை இயல்பாய் relate பண்ணவும் ஏதுவாய் இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete