உலகில் எதுவுமே "ஃப்ரீ" கெடையாது. இந்த விருதும்தான். விருதைக் கொடுத்த கையோடு எனக்கு இப்போ ஒரு வேலையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நானும் ஒரு நல்ல பத்துப் பதிவர்களுக்கு இந்த விருதைக் கொடுக்கணும் என்று வேண்டப்பட்டுள்ளது. என்ன என்ன? நீயா? அவார்ட் கொடுக்கப் போறியா? சும்மா இருங்கப்பா!னு நீங்க மனதுக்குள்ளேயே பேசுவது புரிகிறது.
சரி, என்னைப்போல் ஆட்களுக்கெல்லாம் விருது கொடுக்கும் தகுதி இல்லைனு வச்சுக்கிட்டு ஒரு சாதாரண பதிவுலக வாசகனாக பத்து நல்ல பதிவர்களை செலக்ட் செய்து இவ்விருது பெற தகுதி பெற்றவர்கள் என்று உலகிற்கு பரிந்துரைக்கலாம்னு வச்சுக்குவோமா?
![]() |
| பரிந்துரை |
ஆயிரக்கணக்கான பதிவர்கள் எழுதும் தமிழ்ப் பதிவுலகில் ஒரு பத்துப் பேரை மட்டும் செலக்ட் செய்வது ரொம்ப கஷ்டம்தான். இருந்தாலும் முயல்கிறேன்.
நல்ல நண்பர்கள், பல ஆண்டுகளாக எழுதுபவர்கள், மிக உயர்தரத்தில் எழுதுவதால் பரிந்துரைக்க வேண்டிய அவசியமே இல்லாதவர்கள், "தகுதியே இல்லாத வருண் என்ன என்னைப் பரிந்துரைப்பது?" னு எண்ணும் சில பதிவர்கள் ..போன்றவர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு பத்துப் பதிவர்களை பரிந்துரைப்போமா?
நிற்க!
நான் பரித்துரைப்பவர்களுடன் எனக்கு கருத்து வேறுபாடுகளும் நிறையவே உண்டு! அவர்களுக்கு என் எழுத்துப் பிடிக்கணும்னும் அவசியமும் இல்லை! நமக்குப் பிடித்தவர்களுக்கு நம் எழுத்துப் பிடிக்கணும்னும் ஒண்ணும் இல்லையே?! ஒரு சாதாரண பதிவனாக நான் படித்த பதிவுகளில் இருந்து நான் அறிந்த இவர்களை பரிதுரைக்கிறேன். அவ்ளோதான்.
சரி தொடருங்கள்..
* ஜி எம் பாலசுப்பிரமணியன் அவர்கள் தனது 74 வயதில் பதிவுலகில் தன் கருத்துக்களை மிகுந்த ஈடுபாடுடன் பகிர்ந்து கொள்கிறார். என்ன வயதாக இருந்தாலும் ஒருவர் பதிவராக பதிவுலகில் நுழைந்துவிட்டால் அறியாத பலருடன் வாதம், விவாதம், கருத்து வேறுபாடெல்லாம் வராமல் இருக்காது. அப்படி இவர் தளத்திலும் இவர் கருத்துக்கு எதிர் கருத்து, விவாதம்னு வரத்தான் செய்யுது. அதையும் சமாளித்து மிகுந்த ஈடுபாடுடன் தொடர்ந்து அதிக நேரம் செலவழித்து எழுதுகிறார். இவரை இந்த விருதுக்குத் தகுதியானவர் என்று பரிந்துரைக்கிறேன்.
* சமீபத்தில் எழுத ஆரம்பித்த சாமானியன் சாம் அவர்கள்! ஃப்ரான்சில் இருந்து எழுதுகிறார். நல்ல எழுத்து. அனைத்தும் "அரசியல் கலக்காத" இதயத்தில் இருந்து வரும் கருத்துக்கள். நல்ல நடையுடன் அவர் அனுபவங்களை அழகாகப் பகிர்ந்து கொள்ளுகிறார்.
* உஷா அன்பரசு! ஏற்கனவே பல பத்திரிக்கைகளில் இவர் கதைகள் வெளிவந்துள்ளன. அதனால் நான் பரித்துரைத்து இவர் தரத்தை இன்னும் மேலே உயர்த்துவது கஷ்டம்தான். ஆறுமாதகாலமாக சொந்த வேலைகள் காரணமாகவோ என்னவோ காணாமல்ப்போன இவரை இப்படி ஒரு பரிந்துரை செய்து பதிவுலகை ஞாபகப்படுத்தலாமே என்று ஒரு சின்ன ஆசை..இவரின் சிறப்பு என்னனா, இவர் ஒரு ஆத்திக நம்பிக்கை உள்ளவர், இவர் கணவர், அப்படி இல்லை என்கிறார். அப்படி ஒரு சூழலில் இவர் இருப்பதால், இவர் கருத்துக்கள் நாத்திக ஆத்திக இருபக்கங்களையும் புரிந்து ஒரு "பாலண்ஸ்டா"க இருப்பது போலிருக்கும். இதெல்லாம் எல்லாராலும் முடியாது!
* சின்ன சின்ன சிதறல்கள் அகிலா! இவரைப் பதிவுலகில் ஒரு தலை சிறந்த பெண்ணியவாதினுகூட சொல்லலாம். ஆண்களை, அவர்களின் அருவருப்பான பகுதியையும் சேர்த்து நல்லாவே புரிந்து வைத்துள்ளார். புரிந்து வைத்தால் மட்டும் போதுமா? போதாது! அப்பப்போ ஆண்களின் முகத்திரையை கிழித்து, "உள்ளே இருக்கது யாருனு பாரு!" னு சொல்வது போலிருக்கும் அகிலாவின் எழுத்து. எத்தனை பேருக்கு வரும் இந்தத் துணிவு ?
* கெளசல்யா ராஜ்: பல ஆண்டுகளாக தன் மனதோடு மட்டும் தளத்தில் தன் கருத்துக்களை தைரியமாகவும், தெளிவாகவும் பகிர்ந்துகொள்ளுவார். பொதுவாக நம் கலாச்சாரத்தில் இருந்து வரும் பெண்கள் தனக்குத் தோன்றும் அருமையான கருத்துக்களை அளவுக்கு அதிகமாகவே "சென்சார்" செய்துவிட்டு, மேலோட்டமாக அக்கருத்தை சொல்லாமல் சொல்வதுதான்னு இயல்பு. இதனால் பெண்களின் உள்ளுணர்வுகள் பெண்களால் சொல்லப்படாமல், பெண்களைப் புரிந்து கொண்டதாக நம்பும், நடிக்கும் ஆண் மேதாவிகள்தான் "பெண் மனம்" "பெண்ணியம்" பற்றியெல்லாம் பேசுகிறார்கள். பல ஆண்கள் பெண்ணியம் பேசுவது "பெரிய மனுஷன்" என்கிற பட்டம் பெறுவதற்காகவும், இவர்கள் தரத்தை "உயர் தரமாக" ஆக்கிக்கொள்ளச் செய்யும் கீழ்த்தரமான அரசியல். இவர்கள் கருத்துக்கள் பல நேரங்களில் உள்ளப்பூர்வமாக வருவதில்லை. பெண்கள், பெண்ணியம் பேசும்போதுதான உள்ளப்பூர்வமான உண்மையான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்பது என் எண்ணம்..ஒரு வேளை ஜீன்ஸ் போட்ட பெண்கள்தான் பெண்ணியம் எல்லாம் பேசவாங்கனு தவறான எண்ணத்தில் நீங்க இருந்தா திருமதி ராஜ் பதிவுகளைப் படிச்சுப் பாருங்க!
* முகுந்த் அம்மா: பொதுவாக அதிகமாகப் படித்தவர்கள் தன் படிப்புக்கு ஒத்தவர்களிடம் தான் தன் கருத்துக்களை முக்கியமாக ஆங்கிலத்தில் பரிமாறிக் கொள்வார்கள். "தமிழ் என் தாய்மொழி" என்று சொல்வதற்கு மட்டும்தான் தமிழ்!! பதிவர் முகுந்த் அம்மா இதில் விதிவிலக்கு. உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். ஆகையால் இவர் பதிவில் சொல்லும் கருத்துக்கள் "அறிவியல் பூர்வமாக" இருக்கும். தன் அனுபவத்தையும், முக்கியமாக வாழ்க்கையில் நடந்த சில சோகங்களையும், இவர் நேரம் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்ளுகிறார். இவர் ஒரு தனித்துவமான பதிவர் என்பது என் தாழ்மையான கருத்து.
*விசுAWESOME: இவ்வளவு நாள் எங்கே இருந்தாருனு தெரியலை. நல்ல வேளை பதிவுலகம் பத்தி இவருக்கு யாரோ எடுத்துச் சொல்லி அழச்சுட்டு வந்தாங்க. அதோட தமிழ் மணத்திலும் இவரை சேர்த்துக்கொண்டார்கள்! பதிவெழுதுவது ஒரு கஷ்டமான வேலை! யாருக்கு? என்னைப்போல் சிந்திக்கத் தெரியாதவர்களுக்கு, மற்றும் தன் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளத் தெரியாதவர்களுக்குத்தான் அந்தப் பிரச்சினை! நிச்சயம் நம்ம விசு போன்ற பதிவர்களுக்கு அப்பிரச்சினை கெடையாது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வாழும் ஒரு சீனியர் தமிழர் இவர். தன்னுடைய எல்லாவிதமான அனுபவங்களையும் அவருடைய பாணியில் என்னமா எழுதுறாரு!!! இவருக்கு மட்டும் ஒரு அஞ்சாறு "versatile blogger award" விருது நானே கொடுக்கலாம்! :) Because he is the real "versatile blogger'! Literally he matches the qualifications too! :)
* நண்பர் கிரி, நான் பதிவுலகம் வருமுன்பே கிரி ப்ளாக் ல எழுதிக்கொண்டு இருக்கிறார். பதிவுலகில் கொடிகட்டிப் பறந்த பழைய பதிவர்கள் பலர் கடையை அடைத்துவிட்டு போயிட்டாங்க! நண்பர்கள் கிரி, கோவி போன்ற பதிவர்கள் இன்னும் பதிவுலகை மறக்காமல், காலவெள்ளத்தில் காணாமல்ப் போகாமல் இன்னும் தம்மால் முடிந்தவரை பதிவெழுதிக்கொண்டு இருக்காங்க. கிரி, தன்னை ஒரு ரஜினி ரசிகர்னு தயங்காமல் சொல்கிற பதிவர்களில் ஒருவர். சினிமா மட்டுமன்றி, கணிணி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றியும். அதற்கு தீர்வு என்ன? என்றும் எழுதுவார். தன் வாழ்க்கை பற்றிய அனுபவம்னு பல விசயங்களை ஆடம்பரப்படுத்தாமல் தன்மையாகப் பகிர்ந்துகொள்ளுவார். கிரி ப்ளாக் "ப்ளாக்ஸ்பாட்" இருந்து மாறிய பிறகு இவர் தளத்தில் பின்னூட்டமிட சில பிரச்சினைகள் வருவதால் என்னால் பல கருத்துக்களை அவரிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை! இருந்தாலும், தொடர்கிறேன் என்று சொல்லாமல் நான் தொடரும் தளம் இவர் தளம். பதிவுலகில் இன்னும் நெறையா எழுதச் சொல்லி இவரை ஊக்குவிக்க, இவருக்கு இந்த விருதை நான் பரிந்துரைக்கிறேன்.
* காலம் தளத்தில் எழுதும் நண்பர், கோவி கண்ணன் இவரும், நான் எழுத ஆரம்பிப்பதற்கு பல ஆண்டுகள் முன்பே எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு மூத்த பதிவர். முகநூல் ட்விட்டர் என்று காலம் மாறிக்கொண்டு போனாலும், இவர் காலம் (இவர் தளம்) எப்போதுமே நிகழ்காலம்தான். பதிவுலகை இன்றும் என்றும் மறக்காமல் இன்னும் தொடர்ந்து பதிவுலகில் எழுதிக்கொண்டு இருக்கிறார். நான் எழுத ஆரம்பித்து நெறைய பதிவுகள் எழுதிக்கொண்டு இருந்த காலகட்டத்தில், நான் எழுதிய அதே கருத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே கோவி சொல்லியிருக்கிறார் என்று அவர் பதிவின் தொடுப்பைப் பின்னூட்டத்தில் கொடுப்பார். இதுபோல் என்னுடைய பல பதிவுகளில் உள்ள சாரம் எனக்கு முன்னாலேயே என் அலை வரிசையில் சிந்தித்து எழுதியவர் அவர் என்பதால் என்னுடைய "முன்னோடி"னு கூட "கோவி"யைச் சொல்லலாம். இருந்தபோதிலும் எங்களுக்குள் கருத்து வேறுபாடு, எதிர்ப் பதிவு தாக்குதல் போன்றவையும் நெறையவே இருந்தும் இருக்கிறது . தமிழ்மணம், சினிமாப் பகுதியை தமிழ்மணத்திலிருந்து தனியாகப் பிரிக்கும்போது, அதற்கு சரியான பெயர் சூட்ட "திரைமணம்" என்கிற பெயரை தேர்ந்தெடுத்து பரிந்துரைத்தவர் கோவி என்பது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. காலம் மாறிக்கொண்டு போனாலும் அவர் "காலம்" எப்பொழுதுமே மாறுவது இல்லை! கோவியையும் பதிவுலகில் இன்னும் நெறையா எழுதச் சொல்லி ஊக்குவிக்க, இவருக்கு இந்த விருதை நான் பரிந்துரைக்கிறேன்.
* கடைசியாக ஈழப் பதிவர் வியாசன், சமீபத்தில் பதிவுலகில் தமிழகத் தமிழர்களையும், இந்தியாவையும் நன்றாகவே விமர்சிக்கிறார் வியாசன். இவருடைய பதிவுகளால் ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் உள்ள புரிதல்கள், மற்றும் புரியாமை எந்த ஒரு நிலையில் இருக்கிறது என்பது தெளிவுபடுகிறது. எனக்குத் தெரிய தமிழ்நாட்டுத் தமிழர்களை இவ்வளவு உரிமையுடன் எந்த ஈழத்தமிழரும் தொடர்ந்து விமர்சிச்சதில்லை! அப்பெருமை நம்ம நாம் தமிழர் சீமான் அண்ணனின் உடன்பிறவா சகோதரன் வியாசனுக்கே சேரும். இவர் தொடர்ந்து தமிழகத் தமிழர்களின் கையாலாகாததனத்தை விமர்சிக்கணும்னு சொல்லி இவரை ஊக்குவிக்க, வியாசன் அண்ணாச்சிக்கு நான் இவ்விருதை பரிந்துரைக்கிறேன். :)
****************************
விருது கொடுக்கிறேன்னு கொடுத்துட்டு அதோட சேர்த்து இவ்வளவு வேலைகளையும் கொடுத்து இப்பதிவை எழுதச் செய்த மைதிலிக்கு நன்றி, நன்றி நன்றி! :)))
அப்புறம் இன்னொன்னு, நான் பரிந்துரை செய்த பதிவர்கள் யாரும் தொடர்ந்து இன்னும் பத்துப் பேரை பரிந்துரை செய்ய வேண்டியதில்லை என்கிற மகிழ்ச்சியான செய்தியை சொல்லி முடிக்கிறேன். ஏன் என்றால் ஏற்கனெவே 10 விருது, நூறாகி, நூறு ஆயிரமாகி, ஆயிரம் பத்தாயிரமாகி நிற்கிறது ..அதனால் இந்த விருதை திரும்பத் திரும்ப ஒரே பதிவருக்கு கொடுக்கும் சூழ்நிலையில் வந்து நிற்கிறது. இதை சரி செய்ய ஒரு சின்ன முயற்சிதான் இது. யான் பெற்ற இன்பம் இப்பதிவுலகம் ஏற்கனவே பெற்று விட்டது என்பதால்தான் இந்த பொது நலம்! :)
