Showing posts with label பொருளுளாதாரம். Show all posts
Showing posts with label பொருளுளாதாரம். Show all posts

Friday, December 19, 2008

ஒருவேளை ஒபாமாவும்?

தோல்வியின் விளிம்பில் நிற்கும் ஜி.எம் மோட்டர்ஸ்,ஃபோர்ட் மற்றும் க்ரைஸ்லர் தொழிற்சாலைகளுக்கு, 17.4 பில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்கப்போவதாக புஷ் அரசு தீர்மானித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை புஷ் வீணடிப்பது இது முதல் முறையல்ல, வழக்கமாக செய்வது தான், இதில் வியப்படைய ஒன்றுமே இல்லை. ஈராக் பத்திரிக்கையாளர் செய்ததைப்போல எத்தனை செருப்பு பறந்தாலும் அதைப்பற்றி எல்லாம் புஷ் கவலைப்படவும் போவதில்லை. ஏற்கெனெவே சிலரது பேராசையால் திவால் ஆக இருந்த வால்ஸ்ட்ரீட்டை கைத்தூக்கி விட்டவர் தான் இவர். இப்படி ஏராளமான நிதி உதவியை பெறப்போகும் கார் தொழிற்சாலைகள், எப்படியும் தாக்குபிடிக்கப்போவதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளில் சில,

1.பெட்ரோல் கம்பனிகளின் செல்லப்பிள்ளைகளாக விரும்பிய இந்த அமரிக்க கார் தயாரிப்பாளர்கள், வேண்டுமென்றே அளவில் பெரிய, Gas guzzling வாகனங்களையே தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர். சிறிய மாடல் வாகனங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை, சுற்று சூழலை அதிகம் மாசுப்படுத்தாத ஹைப்ரிட் வகை கார்களையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. டொயோட்டா, ஹாண்டா போன்ற வெளிநாட்டு கம்பனிகளோ, அளவில் சிறிய, சிக்கனமான வாகனங்களை தயாரித்தன. பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் சிக்கனமான காரை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

2. அமரிக்க கார் உற்பத்தியாளர்களின் உதிரி பாகங்கள் கிடைப்பது அரிது, விலையும் அதிகம். மேலும் தரத்தோடு ஒப்பிட்டால் வெளிநாட்டு கார்களை விட தரத்தில் ரொம்ப குறைவு. பல வாடிக்கையாளர்கள் அமரிக்க வாகனங்களை திரும்பிக்கூடப்பார்ப்பதில்லை. உதாரணத்துக்கு, ஹாண்டா, டொயோட்டா போன்ற கார்களைத்தவிர வேறெந்த காரையும் நான் கன்சிடர் கூட பண்ணியதில்லை.

3. ஜி.எம், க்ரைஸ்லர் மற்றும் ஃபோர்ட் நிறுவனங்களின் சீஃப் எக்ஸிக்யூட்டிவ்கள், கையில் "கம்பனி திவாலாகிறது" என்ற ஒப்பாரியோடு எப்படி வந்து இறங்கினார்கள் தெரியுமா? ப்ரைவேட் ஜெட்களில்! ஊதாரித்தனத்தில் நம்ம ஊர் ஜெயலலிதாவையே மிஞ்சி விட்டார்கள். இதைப்பற்றி ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதற்கு, "தங்களுடைய ப்ரைவேட் ஜெட் உபயோகம் விவாதத்திற்கு அப்பாற்பட்டது" என்று அகங்காரத்துடன் ஒரு முதலாளி குறிப்பிட்டார். டெட்ராய்ட்டில் இருந்து வாஷிங்டன் வருவதற்கான முதல் வகுப்பு விமானக்கட்டணம்: $837, இதுவே ப்ரைவேட் ஜெட் உபயோகித்தால்: $20,000- பல மடங்கு அதிகம்! அமரிக்க மக்களிடத்தும், மீடியாக்களிடத்தும் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. "பிச்சை பாத்திரத்துடன் ப்ரைவேட் ஜெட்டில் வந்து இறங்கிய முதலாளிகள்" என்று பத்திரிக்கைகள் அடுத்த நாள் தலைப்புச்செய்தியாக வெளியிட்டனர்.

விரைவில் சுதாரித்த எக்ஸிக்யூட்டிவ்கள், ஜெயலலிதா ஸ்டைலில் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதாவது, அமரிக்க அரசு பண உதவி செய்தால் இவர்கள் "ஒரு டாலர்" மட்டும் பெற்றுக்கொண்டு வேலை செய்வதாக. இது ஒரு கேலிக்கூத்து, ஏனென்றால் இவர்களுடைய ஊதியம், சும்மா பெயருக்கு தான். இவர்களுடைய பெரும்பான்மையான வருமானம் ஸ்டாக் ஆப்ஷன் மற்றும் இன்ன பிற வழிகளில் இருந்து வருபவை, எனவே 1 டாலர் சம்பளம் வாங்கினாலும் இவர்கள் பில்லியனர்களாகத்தான் இருப்பார்கள். இவர்களுடைய தொழிலாளர்களும் யூனியன்களின் துணையோடு மற்ற கார் தொழிலாளிகளை விட அளவுக்கதிகமான ஊதியம் பெறுகிறார்கள். இவர்கள் எதில் செலவைக்குறைக்கப்போகிறார்கள் என்பது அனைவர் மனதிலும் எழும் நியாயமான கேள்வி.

4. ஒருவேளை எட்டாவது அதிசயமாக எப்படியோ அமரிக்க கார் தொழிற்சாலைகளை பிழைக்க வைத்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் இவர்கள் வாகனங்களை யார் வாங்குவார்கள்? மக்கள் வாங்காமல் இருப்பதற்கு தரம் மட்டும் காரணமல்ல, வரலாறு காணாத அமரிக்க பொருளாதார பின்னடைவும் காரணம். அமரிக்க மக்கள் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பரிசுகள் வாங்கவே ரொம்ப யோசிக்கிறார்களாம், இந்த அழகில் கார் எப்படி? காருக்கு பெட்ரோல்? விந்தையாக இருக்கிறது!

இதைப்படிப்பவர்களுக்கு, அமரிக்க அரசு இந்தப்பணத்தை ஏன் மக்களுக்கு வழங்கக்கூடாது என்ற கேள்வி எழலாம். மக்களுக்கு கொடுத்தால் அவர்கள் கார் வாங்குவார்கள், வீடு வாங்குவார்கள். இது முதலாளிகளுக்கு லாபம் தானே? அது மட்டும் நிச்சயம் நடக்காது, எந்தக்காரணம் கொண்டும் அமரிக்கா "முதலாளித்துவத்தை" விட்டுக்கொடுக்காது, ஆனால் இந்த முதலாளித்துவம் ரொம்ப நாள் நிலைக்காது என்பது மட்டும் உறுதி. அமரிக்காவில் "கம்ப்யூனிசம்" என்பது ஏதோ ஒரு கெட்டவார்த்தையாகவே பாவிக்கப்படுகிறது, நடப்பைப்பார்த்தால் அமரிக்காவும் அதே பாதையில் போவதை தவிர வேறு வழி இருக்காது என்று நினைக்கிறேன்.

5. "அமரிக்க கம்பனிகள் திவாலாகுவதே நியாயமானது" என்று சில பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மற்ற வெளிநாட்டு கம்பனிகள் விரிவடைந்து, வேலை இழந்தவர்களுக்கு வேலை திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது, அதுவரை இருக்கவே இருக்கிறது "அன் எம்ப்ளாய்மெண்ட்". இத்தனை காலம் அவுட்சோர்சிங்குக்கு பெருமாதரவு கொடுத்து வந்த அமரிக்க முதலாளிகள், இன்று தங்களுக்கு ஆபத்து என்று வரும் போது திடீரென்று தேசப்பற்றாளர் வேடம் அணிந்து அமரிக்க மக்களிடத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். அமரிக்க அரசும் மக்களை விட "யாரோ சிலரை" திருப்திப்படுத்தவே அதிகம் முனைகிறது. பேசாமல் "Of the people, for the people and by the people" என்பதை "Of the rich, for the rich and by the rich" என் மாற்றிவிட்டால் சரியாக இருக்கும்.

இதில் வியப்பளிப்பது என்னவென்றால், சமீபத்தில் தேர்தலில் வென்ற வருங்கால அமரிக்க ஜனாதிபதியான ஒபாமாவும் ஆரம்பத்திலிருந்தே இந்த "பெயிலவுட்" திட்டத்தை ஆதரித்து வருவதேயாகும். உருப்படாமல் போகும் என்று தெரிந்தே உதவி செய்வதை ஒபாமாவும் ஆதரிப்பது ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. மெத்தப்படித்த புத்திசாலியான ஒபாமாவுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை! ஒபாமாவும் விலைபோய்விட்டால் அவருக்கு ஓட்டுப்போட்டவர்கள் வருத்தப்படப்போவது உறுதி. வழக்கமாக இப்படி நினைப்பதில்லை, ஆனால் இந்தமுறை என்னுடைய மேற்கண்ட கருத்துக்கள் தவறாக இருக்க வேண்டும் என ரொம்ப ரொம்ப விரும்புகிறேன்.