இந்த முக்கியமான பிரச்சினைக்கு அழைப்பு தேவை என்று நான் நினைக்கவில்லை. அழைப்பில்லாமலே கலந்துக்கொள்ளுகிறேன்.
1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?
ரொம்ப தெரியாது, ஈழப்பிரச்சினைகளைப்பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது, ராஜீவ் காந்தியின் படுகொலை, பின் தொடர்ந்து பத்திரிக்கைகளில் ஏறக்குறைய தினம் தினம் வந்த புலனாய்வு செய்திகள். ஒற்றைக்கண் சிவராசன், தாணு போன்ற பெயர்கள் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி இறந்த பிறகு எடுத்த புகைப்படத்தை சிறுவயதில் பத்திரிக்கையில் பார்த்து அலறி இருக்கிறேன். ரொம்ப நாள் வரை தவறு செய்தவர்கள் வெறும் புலிகள் மட்டுமே என்று நினைத்திருந்தேன். பின் பலதரப்பட்ட செய்திகளையும், கருத்துக்களையும் படித்த போது, என்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டேன்.
2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?
முழு ஆதரவும் உண்டு, நான் படித்த வரையில், ஈழத்தமிழர்களுக்கு(பெரும்பான்மை) ஈழம் தனிநாடாக அமைவது தான் விருப்பம் என்று நினைக்கிறேன். இந்தப்பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்பதால் அவர்களுக்கு எது விருப்பமோ, அதுவே என்னுடைய விருப்பமும்.
3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?
ரொம்ப ஆர்வமாக பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் படிப்பேன்.
4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?
ரொம்ப லேட்!! இந்த ஆதரவிலும் நிறைய அரசியல் கலந்திருப்பது சலிப்பைத்தருகிறது. முக்கியமாக மனிதர்களின் இறப்பை வைத்து கூட அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளின் மீது ரொம்ப எரிச்சல் வருகிறது. முக்கியமாக ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு சாக்காக வைத்து "தனி தமிழ் நாடு" கேட்கும் வீணர்கள் மீது. இதனால் இவர்கள் பலரது ஆதரவுக்குரல்களை நசுக்க கூடும். நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இவர்கள் எல்லாம் தீமை செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
இப்படி செய்பவர்கள் ஒரு புறம் என்றால், தனி ஈழம் அமைந்தால் தமிழ் நாடும் தனியாகிவிடும் என்ற ஆதாரமில்லாத புரளியை கிளப்பி விட்டு எரியும் நெருப்பில் எண்ணையை விடும் ஒரு கூட்டம் மறு புறம். பெரும்பாலான தமிழர்களுக்கு தனித்தமிழ் நாட்டில் விருப்பமில்லாத போது, இந்த paranoia பிரச்சாரம் ஏதோ சதி திட்டம் போல தோன்றுகிறது.
5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?
கண்ணீரிலும், கவலையிலும் மூழ்கி இருக்கும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஆறுதலைத்தவிர வேறெதையும் சொல்ல எனக்கு தகுதியும் இல்லை, உரிமையும் இல்லை. வரிசையாக குவிக்கப்படும் சடலங்களின் புகைப்படங்களைப்பார்க்கும் போது ரொம்ப ரொம்ப வேதனையாக இருக்கிறது. அதிலும் பிஞ்சுக்குழந்தைகளின் முகம் பார்க்கும் போது... மனிதர்களுக்கு மனிதத்தன்மையே மரித்துவிட்டதோ? சீக்கிரம் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும்.