டிஸ்கி: எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்பதால், என்னுடைய கருத்துக்கள் ஒரு பக்க சார்புடையதாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன், மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்கிறேன். 
புகைக்கும் எனக்கும் சிறுவயதில் இருந்தே ஒத்துவரவில்லை, எல்லாம் புகைப்பவர்கள் மேல் இருந்து வரும் அந்த பயங்கரமான வாடையே காரணம். என்னுடைய சிறு வயதில் அப்பாவுக்கு இந்த புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது, ஆனால் வீட்டுக்குள் இல்லை. அவர் வேலையில் இருந்து வரும் போதே நான் ஓடிப்போய் வரவேற்பது வழக்கம், அப்போதெல்லாம் 'குப்'பென்ற நெடி எனக்கு வயிற்றை புரட்டும். அப்பா என் எதிரில் புகைப்பதில்லை என்பதால் அது என்னவென்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் போகப்போக அவர் புகைகிறார், அவர் மேலிருந்து வருவது சிகரெட் நாற்றம் என்பது புரிந்துவிட்டது. அவரிடம் ஒரு நாள் "நீங்கள் இனிமேல் சிகரெட் பிடித்தீர்கள் என்றால் இனிமேல் உங்க மடியில் அல்லது பக்கத்தில் கூட உட்கார மாட்டேன்" என்று திட்டவட்டமாக அறிவித்துவிட, அதோடு புகைப்பழக்கத்தை அடியோடு அவர் நிறுத்தி 20 வருடம் ஆகிறது.
அதற்கு பிறகு புகைப்பிடித்தலைப்பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை, 'நாற்றம் பிடிக்கவில்லை' என்பதைத்தவிர புகைப்பழக்கத்தைப்பற்றி கம்ப்ளெயிண்ட் பண்ண எனக்கு வேறெதுவும் இல்லை. பின்னர் வளர்ந்த பிறகு ஒரு நாள் ஒரு அமரிக்க மருத்துவ வார இதழில், செக்கண்ட் ஹாண்ட் ஸ்மோக்கிங் பற்றிய ஒரு கட்டுரையைப்படித்து விழிப்புணர்வு ஏற்பட்டது. "நாம் புகைப்பிடிக்கவில்லை என்றால் கூட நமக்கு ஆபத்தா?" வியப்பாக இருந்தது. மேலும் சில புத்தகங்களை படித்ததில் அதிர்ச்சி ரக தகவல்கள்!
ஆதி கால மனிதர்களுக்கு தற்செயலாக புகையிலைச்செடிகளைப்பற்றிய விவரம் தெரியவந்தது. செடியில் பச்சையாக இருப்பதை விட, காய வைத்து எரிக்கும் போது நிக்கோட்டின் தரும் போதை பல மடங்கு அதிகரிப்பதை கண்டுபிடித்தார்கள். நாகரீகம் அடைந்தவுடன் பைப் வழியாக புகைக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது.அப்படி பரவியது புகையிலை மட்டுமல்ல, கஞ்சா போன்ற போதை செடிகளும் தான். மற்ற போதை பொருட்களுக்கும் புகையிலைக்கும் ஒரு அடிப்படை வித்யாசம் என்னவென்றால், மற்ற போதைப்பொருட்கள் போல செயல் திறனை புகையிலை வெளிப்படையாக பாதிக்கவில்லை.
இது போதாதா? புகைக்கும் வழக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதிலும் தற்போது கிடைக்கும் மார்டன் சிகரெட்டுகள் கிடைக்கத்தொடங்கியதும், காட்டுத்தீ போல இந்த புகைப்பழக்கம் பரவத்தொடங்கியது. ஐரோப்பியர்களிடம், சீனர்களிடமும் இன்றளவும் புகைக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. "பெண்கள் புகைத்தால் உடல் இளைக்கலாம்" என்ற புரளியை சிகரெட் கம்பனிகள் கிளப்பிவிட்டு விட, பெண்களையும் இந்த தீயப்பழக்கம் தொற்றிக்கொண்டது."வெர்ஜினியா ஸ்லிம்ஸ்" போன்ற பெண்களுக்கான சிகரெட்டுகள் 1960துகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போதும் கூட சில சிகரெட் விளம்பரங்களில் ஒரு அழகான பெண் மாடல் ஸ்டைலாக புகைபிடிப்பது போல இருக்கும் படத்தை சிலர் பார்த்திருக்கலாம். புகைக்கும் பெண்கள் செக்ஸியாக கருத்தப்பட்டார்கள். புகைப்பழக்கத்துக்கு செக்ஸ் மற்றும் ஸ்டைல் வர்ணம் பூசப்பட்டது. சிகரெட் கம்பனிகள் பணத்தில் பல்விளக்கி, பணத்திலேயே குளித்தார்கள். இந்தியாவில் திரைப்பட நடிகர் நடிகைகள், மக்களிடையே புகைப்பழக்கத்தை ஸ்டைலாக பரப்பி புண்ணியம் தேடிக்கொண்டார்கள். முக்கியமாக ஒரு குறிப்பிட்ட நடிகர் சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பது 80களில் ரொம்ப பாப்புலராக இருந்த ஸ்டைல்.
சிகரெட் கம்பனிகள் அடிவாங்கத்துவங்கியது, கடந்த 30 வருடங்களில் தான். நுரையீரல் புற்று நோய் மற்றும் இதயநோய்களுக்கும் புகைப்பழக்கத்துக்கும் நேரடியான தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளிலும் சிகரெட் விளம்பரம் மற்றும் சிகரெட் பெட்டிகள் ஏதாவது ஒரு ஹெல்த் வார்னிங்கோடு மட்டுமே வெளியிடப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சிகரெட் பெட்டிகளின் மேல் இந்த எச்சரிக்கை செய்திகளை பார்த்தும் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களை என்ன சொல்லி நொந்துக்கொள்வது?
நுரையீரல் புற்றுநோயாளிகளில் பத்தில் ஒன்பது பேர் புகைப்பிடிப்பவர்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது. அது மட்டுமல்ல, புகைப்பிடிப்பவர்களில் ஐந்தில் நான்கு பேர் புகைப்பிடித்தல் சம்மந்தமான நோய்களில் இறக்கிறார்களாம். இறந்துவிடுவது எத்தனையோ மேல், ஆனால் புகைப்பிடிப்பவர்கள் உயிரோடு இருக்கும் போதே சித்திரவதை அனுபவிக்கிறார்கள். சிகரெட் புகைப்பதால் உடலுக்குள் போகும் நச்சுப்பொருட்கள், தொண்டை மற்றும் நுரையீரல் போன்ற முக்கியமான உடலுறுப்புகளை பாதித்து, "புகைப்பிடிப்பவர்களின் இருமல்(Smoker's cough)" வந்து அவதிப்படுகிறார்கள். மேலும் பசியின்மை, உணவின் சுவை தெரியாமல் போகுதல், கைகால் மரத்துப்போதல் மற்றும் சில்லிடுதல், தோல் மற்றும் பற்களின் நிறம் மாறுதல், ஆண்மைக்குறைவு போன்றவை ஏற்படுகின்றன. ஆண்களை விட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மலட்டுத்தன்மை, பிரசவத்தில் பல சிக்கல்கள், எடை குறைவான குழந்தைகள் போன்ற பல பிரச்சினைகள் பெண்களை தாக்குகின்றன.
இத்தனை பிரச்சினைகள் வந்தும் இவர்கள் மட்டும் புகைப்பிடித்து அழிந்துப்போவதோடு மட்டுமில்லாமல் சுற்றி இருப்பவர்களையும் அழிப்பதே இங்கே முக்கியமான பிரச்சினை. புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் நச்சுப்புகையினால் புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதயநோய்கள் 30% சதம் வரையிலும் அதிகரிக்கிறதாம். முக்கியமாக இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதை அறிந்துதான் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பலர் வீட்டில் புகைப்பதில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதும் ஆகக்கூடாது ஆனால் ஊர் மக்கள் எப்படி வேண்டுமானாலும் தொலையட்டும் என்று நினைப்பது என்ன லாஜிக்?
அமரிக்காவில் சில மாநிலங்களில் பொது இடங்களில் புகைப்பது தடை செய்யப்படவில்லை என்றாலும், நிறைய பேர் புகைக்க மாட்டார்கள். அப்படி புகைத்தே தீர வேண்டும் என்ற அடிக்ஷன் இருப்பவர்களுக்கு தனியாக புகைக்கும் ஏரியாக்கள் உண்டு. மேலும் நிலப்பரப்பு அதிகமாக இருக்கும் ஒரு இடத்தில் ஒருவர் புகைக்கும் போது நமக்கு ஆகவில்லை என்றால் எங்கேயாவது தூர ஓடி தப்பித்துவிடலாம். இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த நாட்டில் மக்களுக்கு நகர இடமில்லை, ஏற்கெனெவே வாகனப்புகையால் மூச்சு விடுவதே சிரமமாக இருக்கிறது. இதில் புகைப்பிடிப்பவர்களின் நியூசன்ஸ் வேறு!
பொது இடங்களில் புகைப்பிடித்தலை தடை செய்வது தனிநபர் சுதந்திர அத்துமீறலாக சிலரால் சித்தரிக்கப்படுகிறது. உங்களுடைய தனி மனித சுதந்திரம் மற்றவர்களை எப்போது பாதிக்க ஆரம்பிக்கிறதோ, அப்போதே அத்துமீறலாகிவிடுகிறது. "Your freedom ends where my nose starts" என்ற சொற்றொடரை கேள்விப்பட்டிருப்பீர்கள். வாகனப்புகையையும், சிகரெட் புகையையும் ஒப்பிடுவது சரி இல்லை, ஏனென்றால் சிகரெட் புகை வாகனப்புகையை விட கேடு விளைவிக்க கூடியது. வாகனங்களாவது போக்குவரத்துக்கு பயன்படுகிறது, சிகரெட் புகைப்பதால் யாருக்கு என்ன பயன்? இது எப்படி இருக்கிறதென்றால் ஒருவரைப்பார்த்து, "ஏன் திருடுகிறாய், அது சட்டப்படி குற்றம்" என்றால் உடனே அவர் "பக்கத்தில் இருப்பவர்கள் கொலையே செய்யும் போது நான் திருடுவதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேட்பது எவ்வளவு அபத்தமானதோ அத்தனை அபத்தமானது.
இந்த கட்டுரையின் நோக்கம், புகைப்பிடிப்பவர்களை திட்டவோ அல்லது அவமானப்படுத்தவோ அல்ல. பொது இடங்களில் புகைப்பது தடை செய்யப்பட்டிருக்கும் சட்டத்தை எதிர்த்து புலம்புவதை விட, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி இந்த தீய பழக்கத்தை அடியோடு விட்டுவிடலாமே? மேலும் சிகரெட் புகைக்காததால் பணமும் மிச்சமாகும். சிகரெட் கம்பனிகள் மேல் விதிக்கப்படும் அதிகபட்ச வரிகளை எங்கே இருந்து திரும்ப எடுக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? புகைப்பிடிக்கும் உங்களிடமிருந்து தான்!
பணத்தை விடுங்கள், உடல் நலம் ரொம்ப முக்கியம். புகைப்பதை விட்ட ஒரு வாரத்தில் உடல் நிலை வியப்படைய வைக்கும் அளவுக்கு முன்னேறுகிறதாம். மூச்சு விடுவது சுலபமாவதில் ஆரம்பித்து, தோலின் நிறம் சீரடைவது, சுவை மீண்டும் உணர ஆரம்பிப்பது போன்ற நல்ல மாற்றங்களை உடனடியாக உணர முடியும். புகைப்பிடித்தால் வரும் பின்விளைவுகளும்(withdrawal effects) 10 நாட்களுக்குள் மறைந்துவிடுவதாக தெரிவிக்கிறார்கள். நீண்டகால முன்னேற்றமாக, புகைப்பதை விட்ட அடுத்த ஐந்து வருடத்தில் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய்கள், இதய நோய்கள் போன்ற பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறதாம். புகைப்பிடிப்பவர்கள் தங்களுக்காக இல்லை என்றாலும் மற்றவர்களுக்காகவாவது இந்த பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள்.