Tuesday, December 30, 2014

கே பாலசந்தர்! பிடித்ததும் பிடிக்காததும்

என்னைப் பொருத்தவரையில் பாலசந்தரின் மறைவு, அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகத்துக்கும் பெரிய இழப்புதான். அவருடைய படைப்புகளுக்கு கடந்த இருபது  வருடங்களாக அவ்வளவு வரவேற்பு இல்லை என்றாலும் அப்பப்போ அவர் விழாக்களில், நேர்முக ஒளிபரப்புகளில் கலந்து கொண்டுதான் இருந்தார்.

ரஜனிகாந்த் என்கிற நடிகனை கண்டெடுத்து உலகுக்கு காட்டியவர் மட்டுமல்ல, அந்தப் பெயரையே சூட்டியவர் பாலசந்தர்தான்.

கமலஹாசன்,  பாலசந்தர் திரையுலகிற்கு வருமுன்பே திரையுலகில் சிறுவராக நடித்துவிட்டார். இருந்தாலும், கமலை சரியான தருணத்தில் மேலே ஏற்றிவிட்ட பெருமையும் இவரையே சேரும்.

 



 ***********************************

 மீள் பதிவு ஒன்று

பாலசந்தர்-ரஜினி (குரு-சிஷ்யன்) படங்கள்!

 


 அபூர்வ ராகங்களில் ரஜினியை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர் அவர்கள்தான். இன்றும் ரஜினி, அவரை தன் குருநாதர் என்றுதான் அழைக்கிறார். ஆனால் தமிழில் ரஜினியை வைத்து கே பி இயக்கிய படங்கள் ஆறே ஆறுதான்.

* அபூர்வ ராகங்கள் (1975)

* மூன்று முடிச்சு (1976)

* அவர்கள் (1977)

* தப்புத்தாளங்கள் (1978)

* நினைத்தாலே இனிக்கும் (1979)

* தில்லு முல்லு (1981)


இதில் முழுக்க முழுக்க ரஜினியை ஹீரோவாக வைத்து எடுத்த படங்கள் இரண்டே இரண்டு. * தப்புத்தாளங்கள், * தில்லு முல்லு இரண்டிலும்தான் ஹீரோ. ஒரு 6 வருடகாலத்தில், 1981 லயே குரு சிஷ்யன் "எரா" முடிந்தது.

பிறகு, கவிதாலயா தயாரிப்பில் ரஜினியை ஹீரோவாக வைத்து மற்றவர்களை வைத்து இயக்க வைத்தார் கே பி. இதில் முக்கியமானவர் எஸ் பி எம். இவர் கவிதாலயா ரஜினியை வைத்து தயாரித்த படங்களில் 4 அவுட் ஆஃப் 8 படங்களை இயக்கியுள்ளார். அமீர்ஜான், சுரேஷ் கிருஷ்ணா, கே எஸ் ரவிக்குமார், பி வாசு தலா ஒரு படம் இயக்கியுள்ளார்கள்.

கே பி தயாரிப்பில் ரஜினி நடித்த படங்கள்

* நெற்றிக்கண் (எஸ் பி எம், 1981)

* புதுக்கவிதை (எஸ் பி எம், 1982)

* நான் மஹான் அல்ல (எஸ் பி எம், 1984)

* வேலைக்காரன் (எஸ் பி எம், 1987)

* சிவா (அமீர்ஜான், 1989)

* அண்ணாமலை (சுரேஷ் கிருஷ்ணா, 1992)

* முத்து (கே எஸ் ரவிக்குமார், 1995)

* குசேலன் (பி வாசு, 2008).


 

*************************************

 மீள் பதிவு ரெண்டு

கமல்-பாலசந்தர் உறவு!




ஏக் துஜே கேலியே

 


கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படத்துல அறிமுகமானார்னு உலகத்துக்கே தெரியும். கமல், படித்துக்கொண்டே பகுதி நேரம் ல தொடர்ந்து நடித்ததாக தெரியவில்லை. இளவயதிலேயே படிப்பை ஒரேயடியாக தலைமுழுகிட்டு சினிமாவைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்.

குழந்தை நட்சத்திரத்திலிருந்து வளர்ந்த ஹீரோவாக வயது வேணுமில்லையா? பெரிய நட்சத்திரமாகுமுன்னர் பதின்ம வயதிலே அவர் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்து இருக்கிறார். காதல் இளவரசனாகுமுன்னே "நான் ஏன் பிறந்தேன்" போன்ற படங்கள் ல எல்லாம் டான்ஸ் மாஸ்டராக வேலை செய்து இருக்கிறார் கமலஹாசன்.

பிறகு, பாலச்சந்தர்தான் கமலுக்கு நிறையப்படங்களில் சரியான வாய்ப்புக் கொடுத்து கமல் திறமையை வெளிக்கொண்டு வந்தார். முதலில், அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற பாலசந்தர் படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிக்க ஆரம்பித்தார், கமல். அந்த சமயத்தில் பாலசந்தர் படத்தில் பொதுவா பல முக்கிய பாத்திரங்களைச் சுற்றி கதை இருக்கும். அதில் கமல் திறமையை வெளிக்கொண்டு வரும் ஒரு சில நல்ல ரோல்கள் இவருக்கு கொடுக்கப்பட்டதால் கமலுக்கு நிறைய புகழை அள்ளித்தந்தது.


கமல், பாலசந்தர் இயக்கத்தில் நடித்த தமிழ்ப் படங்கள். (ஒரு சில படங்களை விடுபட்டு இருக்கலாம்! )

* சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)

* அரங்கேற்றம் (1973)

* அபூர்வ ராகங்கள் (1975)

* மூன்றுமுடிச்சு (1976)

* மன்மதலீலை (1976)

* அவர்கள் (1977)

* அவள் ஒரு தொடர்கதை (1978)

* நிழல் நிஜமாகிறது (1978)

* நினைத்தாலே இனிக்கும் (1979)

* வறுமையின் நிறம் சிகப்பு (1980)

* புன்னகை மன்னன் (1986)

* உன்னால் முடியும் தம்பி (1988)



பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த பிற மொழிப்படங்களில் சூப்பர் ஹிட் ஆன படங்கள் இரண்டை கட்டாயம் சொல்லியாகனும்.

* மரோச்சரித்ரா (தெலுகு, 1978)

* ஏக் துஜே கே லியே (ஹிந்தி, 1981)


இயக்குனர்கள் எல்லாம் பள்ளி வாத்தியார்கள் போலதான். இன்று கமலுக்கு உள்ள பெயர், ஸ்டார் வால்யூ எல்லாம் இவரை மேலே கொண்டுவந்த பாலசந்தர் பாரதிராஜாவுக்கு கிடையாது என்பது கசப்பான உண்மை. இன்று பாலசந்தருக்கு வய்து 79 ஆகிவிட்டதாம். தமிழ் திரையுலகில் பாலசந்தர் ஏற்படுத்திய மாற்றம் கமல் மற்றும் ரஜினியின் பங்கைவிட பன்மடங்கு உயர்ந்தது. வாழ்க அவர் இன்னும் நூறு ஆண்டுகள்!

 **************************

 பாலசந்தர் படங்கள் எல்லாவற்றையும் நான் பார்த்ததில்லை. பார்த்த படங்களை லிஸ்ட் பண்ண முயல்கிறேன்.

* எதிரொலி - சிவாஜி, கே ஆர் விஜயா, மேஜர் சுந்தர் ராஜன் நடித்த பழைய படம்

* எதிர் நீச்சல்  (நாகேஷ், ஸ்ரீகாந்த், செளகார், மேஜர் சுந்தர் ராஜன்)

*  இரு கோடுகள் (ஜெமினி செளகார் ஜானகி, ஜெயந்தி ? )

* அனுபவி ராஜா அனுபவி (நாகேஷ், மனோரமா?)

* அபூர்வ ராகங்கள் (கமல், ஸ்ரீவித்யா, ரஜினி அறிமுகம்)

* அவள் ஒரு தொடர்கதை (சுஜாதா, கமல், ஜெய்கணேஷ்)

* அவர்கள் (சுஜாதா, ரஜினி, கமல், ரவிகுமார்)

* மூன்று முடிச்சு (ஸ்ரீதேவி, ரஜினி, கமல்)

* அரங்கேற்றம் (சுமித்ரா, கமல், சிவகுமார்? )

* மன்மதலீலை (கமல், ஆலம், ஒய் விஜயா)

* சொல்லத்தான் நினைக்கிறேன் ( சிவகுமார், கமல்)

* நிழல் நிஜமாகிறது (ஷோபா, கமல்)

* தப்புத் தாளங்கள்( சரிதா, ரஜினி)

* தில்லு முல்லு (ரஜினி, தேங்காய் ஸ்ரீனிவாசன், செளகார் ஜானகி, மாதவி)

* நினைத்தாலே இனிக்கும் (கமல், ஜெயப்ரதா, ரஜினி)

* ஏக் துஜே கேலியே (கமல், ரதி)

* தண்ணீர் தண்ணீர் 

* அக்னி சாட்சி

* சிந்து பைரவி (சிவ குமார், சுஹாஷினி, சுலக்ஷனா)

* வானமே எல்லை

* புது புது அர்த்தங்கள் (ரகுமான், சித்தாரா)

* புன்னகை மன்னன் (கமல், ரேவதி, ரேகா)

* மனதில் உறுதி வேண்டும் (சுஹாஷினி)

* பார்த்தாலே பரவசம் (ஸ்னேஹா)


*****************************

பாலசந்தரையும் அவர் படங்களையும் நான் புகழ வேண்டியதில்லை! உலகமே அதை செய்து கொண்டு இருக்கிறது.

பாலசந்தர் படங்களில் குறை கண்டு பிடிக்க முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. பாலசந்தர் படங்கள் எதார்த்தமா ரியலிஸ்டிக்கா இருக்கும் என்றெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன். இவர் படங்களும் "சினிமாட்டிக்கா" மேலும்  "நாடக பாணியில்" வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான்  இருக்கும்.

மேலும் இவர் படங்களில் முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு "அடல்ட்டரி" மற்றும் "தகாத உறவுகள்" போன்றவை நெறையவே இருக்கும். அதனால் இவருடைய பல படங்கள் குழந்தைகளுக்கு உதவாத  "எ" சான்றிதழ்கள் பெற்றவை. ஆக, இவர் படங்களை சமுதாயத்தை சீரழிக்கும் படங்கள் என்று குதர்க்கமாகவும் விமர்சிக்கலாம்.

நாளைய உலக சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் அமரர் பாலசந்தர் பலவாறு புகழ்ந்து பேசப்படுவார். அப்போது அவர் ஒரு தமிழர் என்கிற அடையாளம் சொல்லாமல் சொல்லப்படும். அந்த வகையில் ஒவ்வொரு தமிழருக்கும் பாலசந்தர் பெருமை சேர்த்து தந்தவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

8 comments:

விசு said...

வருண் ,

நல்ல பதிவு ! KBன் இறப்பால் ஒரு சகாப்தம் முடிந்தது என்று நானும் ஓர் பதிவிட்டேன். நல்ல இயக்குனர். ஒரு வெற்றியான வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்டு வயதானபின் இறந்துள்ளார். இவரால் இன்னும் திரை உலகிற்கு ஏதாவது செய்து இருக்க முடியுமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்!
என்ன? நீங்கள் பாமா விஜயம் பார்க்கவில்லையா? நண்பரே, யாம் அறிந்த KB படத்தினிலே "பாமா விஜயம்" போல் அறிந்ததில்லை. youtube ல் ullathu, நேரம் கிடைத்தால் பாருங்கள் .

வருண் said...

விசு: பாமா விஜயம் டி வி ல பார்த்ததா கொஞ்சம் ஞாபகம் இருக்கு! Not sure though!

I missed out iru kOdugaL too. Just added now! :)

காரிகன் said...

வருண்,

கே பி யைப் பற்றிய மிகச் சரியான பதிவு. பாராட்டுக்கள்.

கமல் ரஜினி என்ற எண்பதுகளை ஆட்சி செய்த ஆளுமைகளை உருவாக்கியவர் கே பி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. இருந்தும் கே பி இல்லாவிட்டாலும் கமல் ரஜினி இந்த அளவுக்கு வந்திருப்பார்கள் என்று சிலர் சொல்வதைத்தான் ஏற்கமுடியவில்லை. அவருடைய நூல்வேலி படத்தை பார்த்திருக்கா விட்டால் பார்க்கவும். பாலச்சந்தரிடம் எனக்குப் பிடித்த ஒரு அம்சம் அவர் தனது படங்களுக்கு வைக்கும் கவிதைத்தனமான தலைப்புகள். அவை என்றுமே சோடை போனதில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தாமரை நெஞ்சம் அருமையான மறக்கமுடியாத படம்
புன்னகை, அனுபவி ராஜா அனுபவி,பாமா விஜயம்,வெள்ளி விழா,நூல் வேலிமிரு கோடுகள், அச்ச மில்லை அச்சமில்லை,தண்ணீர் தண்ணீர் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்
கங்கை நதியை சொம்புக்குள் அடக்கிடமுடியுமா?

மகிழ்நிறை said...

நிறைய சொல்லணும் இந்த பதிவு பத்தி. அப்புறம் வரேன்:)

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பதிவு வருண்! பாலசந்தர் நல்ல டைரக்டர் என்பது மறுக்க முடியாதுதான். ஆனாலும் நீங்கள் சொல்லியது போல் ட்ரமாட்டிக்காக இருக்கும்...வசனங்களும்.....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடனும் நட்புடனும்

துளசிதரன், கீதா

நண்பா said...

நல்ல பதிவு..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே..

வருண் said...

Thanks for sharing your thoughts

@ Karigan

@ TVR sir,

@ Mythily

@ Thulasitharan and Geeta madam

@ NaNbaa!

Wish you all a Happy New Year! :)