Friday, May 30, 2008

அமரிக்காவில் பொருளாதார பின்னடைவு?

அமரிக்காவில் சமீபகாலமாக தீவிரவாதிகள் பயத்தையும் பின் தள்ளிவிட்டு, வேறொரு பயம் முக்கியமாக மக்களின் மனதை ஆக்கிரமித்திருக்கிறது, அது ரிசெஷன்(Recession) எனப்படும் பொருளாதார பின்னடைவு. முன்பு வெறும் ஏழை மக்களால் மட்டுமே உணரப்பட்ட இந்த பொருளாதார இழுபறி, தற்போது மத்தியதர குடும்பங்களையும் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது.

ரிசெஷன் என்றால் என்ன? : ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் பொருளாதார பின்னடைவு. அத்தியாவசியப்பொருட்களான பெட்ரோல், கோதுமை, அரிசி, முட்டை பால் போன்ற பொருட்கள் விலையேற்றம், கூடவே வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, மக்களின் வருட வருமானம் அதிகரிக்காமல் இருப்பது, ரியல் எஸ்டேட் விலை சரிவு போன்றவை பொருளாதார பின்னடைவுக்கு காரணங்களாக குறிப்பிடப்படுகிறது.

எதனால் ரிசெஷன் வந்தது?: இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நிச்சயமாக புஷ் உளறுவதை போல, இந்தியர்களும் சீனர்களும் அதிகம் சாப்பிட ஆரம்பித்தது காரணம் அல்ல. :)

முதல் மற்றும் முக்கியமான காரணம், அஃப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் அமரிக்கபடைகளினால் ஆகும் செலவு ஒரு நாளைக்கு சராசரியாக 255 மில்லியன் டாலர்கள். இந்த அளவுக்கு செலவாகிறது என்று ஒப்புக்கொள்ள கூட புஷ் அரசு மறுக்கிறது. உலக கவனத்தை திசை திருப்ப தான் இந்த "இந்தியர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள்" கதை.

இரண்டாவது காரணமாக உயர்ந்து வரும் பால், முட்டை, அரிசி, கோதுமை, பெட்ரோல் போன்ற காரணங்கள் சொல்லப்படுகிறது. இதில் பெட்ரோல் விலை உயர்வு உலகமெங்கும் பெரிய மிரட்டலாக இருக்கிறது, அதற்கு அமரிக்காவும் விதிவிலக்கல்ல. இந்த வாரம் ஒரு கேலன் பெட்ரோல் 4 டாலருக்கு விற்றது. பெருகி வரும் பெட்ரோல் விலையேற்றத்தால் கார் சேல்ஸ் பெருமளவு குறைந்திருக்கிறது, முக்கியமாக பெரிய வாகனங்களான எஸ்யூவி போன்ற வாகனங்கள் ஷோ ரூம்களில் வாங்குவார் யாரும் இல்லாமல் அநாதையாக நிற்கிறது. சிறிய, விலை குறைந்த, அதிக மைலேஜ் தரும் வாகனங்களான கியா, ஹாண்டா, டொயோட்டா போன்ற கார்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனையாகிறது. முட்டை பால் விலையேற்றத்துக்கு ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட திடீர் பருவநிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு, க்ளொபல் வார்மிங் போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது. இத்தகைய விலையேற்றம், எதிர்காலத்தில் குறையாது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. போரில் மில்லியன் மில்லியனாக கொட்டும் புஷ் அரசு, மாற்று எரிபொருள் ஆராய்ச்சிக்காகவும், மாற்று எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்காகவும் ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை. பெட்ரோல் கம்பனிகள் கொடுக்கும் பில்லியன் கணக்கான 'லாபி' என்று நாகரீகமாக அழைக்கப்படும், அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கிடைக்கும் லஞ்சம் தான் இந்த பாராமுகத்துக்கு காரணம்.

மூன்றாவது காரணமாக, ரியல் எஸ்டேட் விலை சரிவு. "Flexible mortgage" என்ற கடனால் வந்த வினை. இதை நம்பி நிறைய பேர் வீடு வாங்கினார்கள், ஆரம்பத்தில் குறைவாக இருந்த மாத வீட்டுத்தவணை, ஐந்து வருடம் போன பிறகு தாறுமாறாக எகிறத்தொடங்கியது. சமாளிக்க முடியாத சில அமரிக்க மக்களால் மாத தவணை வங்கிக்கு செலுத்த முடியவில்லை. சில முறை எச்சரிக்கை செய்யும் வங்கி, தொடர்ந்து இதே நிலை நீடித்தால், வீட்டை அதற்கு பதிலாக வங்கி சொத்தாக அறிவித்து, வீட்டு உரிமையாளர்களை குறிப்பிட்ட காலத்துக்குள் வெளியேற்றிவிடுகிறது. பிறகு வங்கியே ஒரு விலையை நிர்ணயித்து, மீண்டும் மார்கெட்டில் குறைந்த விலைக்கே அந்த வீட்டை விற்றுவிடுகிறது. பேங்க் ஃபோர்க்ளோஸ்ட் வீடுகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 2002 ஆம் வருடம் 1.25 மில்லியன் டாலர்களுக்கு மதிப்பிடப்பட்ட வீடு, இந்த வருடம் 950,000 டாலர்களுக்கு விற்றது. அடுத்த வருடம் அமரிக்காவில் அனைத்து மாநிலங்களிலும் ரியல் எஸ்டேட் மேலும் 10-30 சதம் நிச்சயம் வீழ்ச்சியடையும் என்று வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள்.

மேலே இருக்கும் காரணங்கள் இருந்தால் போதாதா, வேலை இல்லா திண்டாட்டம் அதுவாகவே அதிகரிக்க? தற்போது அமரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் 5%. போன வருடம் 4.5 சதம். எனவே .5% தான் அதிகரித்து இருக்கிறது, இது பரவாயில்லை என்பது அரசின் சமாதானம். பொருளாதார வல்லுநர்கள் அரசு தரும் இந்த கணக்கை ஒப்புக்கொள்ளவில்லை. அமரிக்க அரசு கடந்த 4 வாரங்களாக வேலை தேடுபவர்களை கணக்கெடுத்து 5% என்று அறிவித்து இருக்கிறது. ஆனால், நம்பிக்கை எல்லாம் விட்டு போய் "இனிமேல் வேலை கிடைக்காது" என்று 4.5% மக்கள் சோர்வடைந்து வேலையே தேடாமல் இருக்கிறார்கள், அவர்களையும் சேர்த்து கணக்கிட்டால் வேலை இல்லாதவர்கள் மொத்தமாக 9.5% என்ற அதிர்ச்சி தகவலை அரசு சாராத வல்லுநர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். 2009 வருடத்தில் இது மேலும் 10% வரையிலும் அதிகரிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த மாதிரி பொருளாதார பின்னடைவு அமரிக்காவுக்கு புதிதல்ல, 1970களில் வியட்நாம் போரினால் இதே போல பெரிய அளவில் பொருளாதார பின்னடைவை அமரிக்கா சந்தித்தது. பிறகு எப்படியோ சமாளித்து எழுந்தது, பழைய சம்பவங்கள் மக்களுக்கு மறந்து போய்விட்ட நிலையில். தற்போது மீண்டும் போர் என்ற புதைகுழியில் வீழ்ந்து விட்டது. ஹில்லரியோ அல்லது ஒபாமாவோ தான் மீட்க வேண்டும். அமரிக்கா இனிமேலாவது திருந்துமா???

காதல் கல்வெட்டு -1

இது நான் எழுதிய கதை என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன், சொல்லவும் முடியாது(ஏனென்றால் வருண் படிப்பாரே :)). இது வருண் எழுதிய கதை. வலைப்பூ எழுத ஆரம்பித்தவுடன் முதல் வேலையாக இதை போஸ்ட் பண்ண வேண்டும் என்பது ஐயாவின் அன்பு உத்தரவு :) - கயல்

கயல்விழி வரும் நேரமென்று வருண் தயாராகி அவள் வருகைகாக காத்திருந்தான். அவனுக்கு அவள் ஒரு அற்புதமான பெண். வாழ்க்கையில் அவளை சந்தித்ததில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம். காலிங் பெல் சத்தம் கேட்டவுடன் வருண் கதவை திறந்தான். வெளியே கயல் ஆலீவ் க்ரீன் கலரில் சேலை கட்டி நின்றிருந்தாள். அதற்கு மேட்சிங்காக ஆலிவ் க்ரீனில் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் போட்டிருந்தாள். அவள் சேலையில் மிகவும் கவர்ச்சியாக தெரிந்தாள். அவளுடைய மார்பகங்கள் எடுப்பாகவும் கவர்ச்சியாகவும் இருந்ததை வருணால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை . "ஹாய் கயல் , உள்ளே வாங்க!" என்றான். கயல் உள்ளே வந்தவுடன், அவளுடைய காலணிகளை கழட்டினாள். காலணிகளை கழட்ட அவள் குனியும்போது அவள் பின்னழகுகளை பார்த்து ரசித்து மனதுக்குள் பாராட்டினான். அவள் அவனுக்கு கொள்ளை அழகாக தோன்றினாள். "இந்த சாண்டல்ஸ் போட்டு நடப்பதே ரொம்ப கஷ்டமாக இருக்கு வருண், கால் லேசாக பிசகிவிட்டது" என்றாள். கவலைப்படாதே கயல், லாப் டாண்ஸ் எல்லாம் ஆட சொல்லி வற்புறுத்த மாட்டேன்! அதற்காகத்தானே இந்த லேம் எக்ஸ்க்யூஸ் எல்லாம்" என்றான் அவளை குறும்பாக பார்த்தப்படி.

"அதெல்லாம் இல்லை, உங்க முன்னாலே ஆட எனக்கொண்ணும் பயமில்லை, உங்களுக்குத்தான் பயம் போல தோன்றுகிறது" என்றாள் கயல்!
"எனக்கென்ன பயம்?" என்று கேள்வியுடன் பார்த்தவனை நோக்கி, "என் டாண்ஸ் பார்த்து மயங்கி விழுந்துவிடுவீங்களோனு பயமோ என்னவோ" என்று கவர்ச்சியாக சிரித்தாள். அவள் சொல்வதில் உண்மையிருக்கத்தான் செய்தது. அவன் உண்மையிலேயே அவள் அழகில் மயங்கிப்போய்தான் இருந்தான். அவளை சேலையில் பார்த்ததில் இருந்து அவனுக்கு என்னென்னவோ தோன்றியது.

"என்ன யோசனை"? என்றாள் கயல், அவள் அழகான உதடுகளை விரித்து. "சேலையில் நீ ரொம்ப அழகாயிருக்கிறாய், கயல்" என்று மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லியே விட்டான், மரியாதையை வார்த்தையில் தவிர்த்து. "நன்றி வருண்" என்று சொல்லும்போது வெட்கத்தால் கயலின் முகம் சிவந்தது. வருண் அவளை புகழ்வது, அவனின் நேர்மை , அவளிடம் காட்டும் அன்பு எல்லாமே அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவன் கேலி செய்யும்போதுகூட அதில் அர்த்தம் நிறைந்து இருக்கும்.

வருணை அவள் சந்தித்தவிதமே வித்தியாசமானது. முதலில் அவன் பேசுவது கேலியா உண்மையா, உண்மை கலந்த கேலியா என்று அவளுக்கு புதிராக இருந்தது. பழக பழக அவன் இனிமையாகவும் இருந்தான். கயல் அவனை அளவுக்கதிகமாக நம்பினாள். தன்னைப்பற்றி அவன் பேசுவதை வைத்து அவன் கேரக்டரை புரிந்துக்கொள்ள முயற்சித்தாள். வருண் ஒரு எமோசனல் கேரக்டர், கோபம் அதிகமாக வரும் அவனுக்கு. ஆனால், அவளிடம் மிகவும் அன்பாக இருப்பான். அவள் நட்பை மதிப்பான், அவள் உணர்ச்சிகளை புரிந்துகொள்வான்.

"மயங்கி விழ மாட்டேன், ஆனா உன்னை ஏதாவது செய்துவிடுவேனோ" என்ற பயம்தான், என்றான். அவள் லேசாக சிரித்த மாதிரி இருந்தது. "சரி, நான் உனக்காக, சுமாரான டீ போட்டு வைத்திருக்கேன், எவ்வளவு சுகர் போடனும்" என்று கேட்டான் உபசரிப்புடன். "எனக்குத்தான் இனிப்புனா ரொம்ப பிடிக்குமே, இரண்டு ஸ்பூன் போடுங்க" என்றாள் கயல். டீயை எடுத்து கொண்டுவந்து சோஃபாவில் அமர்ந்திருந்த அவள் கையில் கொடுத்தான். அவள் பருகிக்கொண்டு இருக்கையில் மறுபடியும் அவள் கால்களை வலியுடன் அசைத்தாள். இதை கவனித்த வருண், அவள் கால்கள் அருகில் ஒரு சின்ன ஹர்ட்வுட் தரையில் அமர்ந்து, "சரி, நான் உன் கால்வலியை சரி செய்கிறேன்" என்று அவள் வலது காலை கைய்யில் எடுத்தான்.

"நீங்க என்ன பெரிய ஃபிசிக்கல் தெரப்பிஸ்டா" என்றாள் கயல், கேலியாக. அவள் காலை அவன் கைகளில் எடுத்து, அவள் விரல்களை, மெதுவாக பிரித்தான். அவள் பாதத்தை லேசாக தடவி விட்டான். அவனுடைய ஸ்பரிசம் அவளுக்கு இதமாக இருந்தது. அவளுடைய நிலைமை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மோசமாகிக்கொண்டு இருந்தது. அவன் தெரிந்தே தான் செய்கிறானா என்று அவளால் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் சென்று, அவள் தனது இன்னொரு காலைக்கொடுத்தாள். "இந்த காலுமா பிசகிவிட்டது?" என்றான் அவன். "இல்லை, அந்த கால்லதான். இப்போ சரியான மாதிரி இருக்கு" என்றாள். "அப்போ எதுக்கு இந்த கால்" என்று அவள் காலை ஆசையுடன் கைய்யில் எடுத்துக்கொண்டு, அவள் விரல்களில் சொடக்குப்போட்டு விட்டான்! அவள் பாதத்தை இதமாக தடவி விட்டான்.

திடீரெனெ ஏதோ ஞாபகம் வந்தவனாக எழுந்து போய், "உனக்கு ஒண்ணு ஸ்பெசலா வைத்திருக்கேன்" என்று வேகமாக உள்ளே சென்றான். திரும்பியவன் கையில் ஒரு சின்ன மல்லிகை சரத்துடன் வந்தான். உனக்காக என் தோட்டத்தில் பூத்ததை கோர்த்து வைத்திருக்கேன், என்றான், அன்புடன். "நீங்களே என் தலையில் வைத்து விடுங்களேன்" என்று எழுந்து அவனுக்கு முதுகைக்காட்டி நின்றாள். அவள் தலை பின்னவில்லை. லேசாக கூந்தலை விரித்துவிட்டு கட்டியிருந்தாள், அவளுக்கு அடர்த்தியான கூந்தல். வருண், அவள் கூந்தலில் மல்லிச்சரத்தை வைத்தான். அவனால் அவள் கூந்தல் இடையில் விரலைவிட்டு கோதிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. தலையில் வைத்துவிட்டு அதை முகர்ந்து பார்த்தான். அவளுடைய சங்கு கழுத்தை பார்த்தான். அவனையே அறியாமல், அவள் கழுத்தில் அவன் உதடுகளைப்பதித்தான். கயல், சிலையாக நின்றாள். அவனுடைய முத்தத்தால், அவள் கால்கள் பலவீனமாகி, அவன் மார்பில் லேசாக சாய்ந்தாள். அவன் கைகள் அவள் இடையை மெதுவாக பிடித்திருந்தன. இன்னும் கொஞ்ச நேர்ம் போயிருந்தால் என்ன நடந்திருக்குமோ. திடீரென்று கயலின் செல்ஃபோன் ஒலித்தது. இருவருமே மீண்டும் இவ்வுலகத்துக்கு வந்தார்கள். கயலின் தங்கை கால் பண்ணி இருந்தாள். "என்ன இன்னும் வரக்க்காணோம்? எனக்கு ஹோம்வொர்க் ஹெல்ப் வேணும்" என்றாள். "இதோ வந்துவிட்டேன்" என்று புறப்பட்டாள், கயல்! "சாரி வருண், ஐ ஹேவ் காட் டு கோ", என்று கிளம்பினாள். போகும்போது, "தாங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்", என்று ஒரு புன்னகயுடன் சென்றாள். அந்த புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன!

வணக்கம்: கயல்விழி

இது என்னுடைய முதல் அறிமுகப்பதிவு. வருணும், நானும் உயிருக்கு உயிரான(வழக்கமாக எல்லா காதலர்களும் இதையே தான் சொல்வார்கள் இல்லையா? :)) காதலர்கள். இரண்டு பேருக்குமே நிறைய பொதுவான இண்ட்ரெஸ்ட்ஸ் உண்டு. அதில் ஒன்று, எங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த இப்படி இணையதளத்தில் எழுதுவது. இங்கே எங்களின் காதல் நிகழ்வுகள், எண்ணங்கள், கருத்துக்கள் போன்றவற்றை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம். வருண் தற்போது ஊரில் இல்லாததால், திரும்பியப்பிறகு எழுதத்துவங்குவார். என்னை விட வருணின் பதிவுகள் சுவாரஸ்யமாக இருக்கும், அவர் இயல்பிலேயே ரொம்ப சுவாரஸ்யமான மனிதர். வேலைகளும், பொறுப்புகளும் மட்டும் தடுக்கவில்லை என்றால் இருபத்தி நாலு மணி நேரமும் இவருடன் பேசிக்கொண்டே இருப்பேன். ஆனால் என்ன செய்ய, நேரம் தான் எனக்கு எதிரியே.
- கயல்