Sunday, August 31, 2008

மரணம் வந்தால் தெரிந்துவிடும்!

மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதனென்று புரிந்துவிடும்
ஊர் சுமந்துபோகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும்!

என்பது ஒரு திரைப்படப்பாடலில் வரும் கண்ணதாசன் வரிகள் (இருவர் உள்ளம்). தன்னை மிருகமாக நினைக்கும் மனைவியிடம் தானும் மனிதந்தான் என்றும், அதை நீயும் நான் இறந்தபிறகு உணர்வாய் என்று ஒருவன் அழுதுகொண்டே சொல்லும் சூழல் அது.

மரணம் என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.

எனக்கு மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார் என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா? யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா? இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!

ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!

இந்த வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும் நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள். திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப் பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.

நீங்கள் ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம் விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு “இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!

* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.

* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.

* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.

* உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே அவர்களுக்கு “போர்” அடிக்கும்.

மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!

Friday, August 29, 2008

எனக்கும் முதல் முறைதான்!

கல்யாணம் முடிந்து முதலிரவுக்கு அடுத்தநாள் காலையில் அவளைப்பார்க்க வந்த அவள் நெருங்கியதோழி சுமதி கேட்டாள், "எப்படியிருந்தது?" என்று.

"இரண்டு பேருக்குமே முதல் அனுபவம் என்பதால் முழுவதும் வெற்றி அடையவில்லை" என்று வெட்கத்தோடு சொன்னாள் ராஜி!

"அப்படியா?! குஷ்பு தியரியை டிஸ்ப்ரூவ் பண்ணிவிடுவார் போல இருக்கு உன் கணவர்?"

"இது பரந்த உலகம், குஷ்பூ ஒரு அறியாமையில் வாழும் ஒரு அரைவேக்காடு என்கிறார், அவர்," என்றாள் ராஜி!

"சரி, சரி, இன்னும் நிறைய காலம் இருக்கு மெதுவாக வெற்றிவாகை சூடலாம்! வாழ்த்துக்கள்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள் தோழி சுமதி!

"எனக்கும் இது முதல் முறைதான்" என்று கணவன் முத்துக்குமார் அவளிடம் சொன்னவுடன், ராஜிக்கு அதிசயமாகத்தான் இருந்தது “ஆண்களில் இப்படி மக்குக்களும் உண்டா என்று”? அதே சமயத்தில் அவளுக்கு ஏதோ ஒரு அளவில்லாத சந்தோஷம். பெருமை!

தன் அனுபவமில்லாமைக்கு காரணம் அவளுக்குத்தெரியும். ராஜி வளர்ந்த விதம் வேறு. இன்று வரை ஒர் நாள் கூட அவள் தனியாக எங்கும் இரவு தங்கியதில்லை. ஏன் பகலில் கூட ஒரு மணிநேரம் தோழிகள் வீட்டில்கூட தங்கியதில்லை. பெரியவளானவுடன் அம்மா அப்பாவுடன் தவிர யாருடனும், சினிமாவுக்கோ, பீச்சுக்கு, கோயிலுக்கோ போக அனுமதி ராஜிக்குக்கிடையாது. அவள் அம்மாவுக்கு காதல் என்றால் கெட்ட வார்த்தை. வாழ்க்கைக்கு அவசியமில்லாத ஒரு இன்பம். ராஜியின் அண்ணன் பாலுகூட அவளை தொட்டுப்பேசவோ அடிக்கவோ அனுமதி கிடையாது. அப்படியிருக்கும்போது தெரியாத ஆண்கள், முறைப்பையன்கள் போன்றவர்களெல்லாம் இவள் வயதுக்கு வந்த பிறகு இவளை தனியாகப்பார்ப்பது, பேசுவது, பழகுவதெல்லாம் குதிரைக்கொம்பு. பள்ளிக்கும் கல்லூரிக்கும் போகும்போது ராஜியை அப்பா அல்லது அண்ணா வந்து சரியாக அவளை ட்ராப் பண்ணி, பிக் அப் பண்ணி விடுவார்கள். அதனால் அவளுக்கு இன்னொரு ஆணுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு ஒரு போதுமே இருந்ததில்லை. பீரியேட்ஸ் ரெகுலராக இல்லை என்றாலும் அதைப்பற்றி ராஜி கவலைப்பட்டதே இல்லை.

ஆனால், தைரியமாக, தன் கணவர், முத்துகுமாரிடம் கேட்டுவிட்டாள், ராஜி! "நீங்க ஹாஸ்டலில் இருந்து படித்து இருக்கீங்க. என் அளவுக்கு கட்டுப்பாடும் உங்களுக்கு கிடையாது. அப்படி இருந்தும் உங்களுக்கும் எப்படி இது முதல் அனுபவம்?" என்று.

அவள் கணவர் சொன்னார் "ஆண்களிலும் பல வகை இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில், காதல் என்பது நம் சமுதாயத்தில் வெற்றி அடைவதைவிட தோல்வி அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் காதல், அதுனுடன் காமம் கலப்பது முட்டாள்த்தனம்- இது என்னுடைய நிலைமையில்! என் தங்கை திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நினைப்பவன் நான். இன்னொருவன் தங்கையை அல்லது இன்னொருவர் மகளை மட்டும் நான் ஏன் துச்சமாக நினைக்கனும்?. அது மட்டுமல்ல, வாழ்க்கையில், நான் படிப்பு, மார்க்ஸ், ஃப்யூட்சர் என்று போராடிக்கொண்டு இருக்கும்போது, எல்லோருக்கும் ஒரு காதலி கிடைப்பதில்லை. மேலும் அழகான பெண்கள் வந்து என்னை “ஃபோர்ஸ்” பண்ணி என்னைக்காதலிக்கும் அளவுக்கு நான் பெரிய மன்மதனும் இல்லை என்று"

"என்னைப்போல் பல ஆண்கள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். விபச்சாரியிடம் காமம் கற்றுக்கொள்வதெல்லாம் அவமானமாக, அசிங்கமாக, அருவருப்பாக நினைப்பவன் நான். அதுவும் எயிட்ஸ் நமது நாட்டில் இப்படி பரவிக்கொண்டு இருக்கும்போது, ஏன் வம்பை நான் விலைகொடுத்து வாங்கனும், ராஜி?" என்று முடித்தார் அவள் கணவர், முத்துக்குமார்.

Monday, August 25, 2008

காதல் கல்வெட்டு-10

வருண், நேராக தன் காரில் ஏறி வீட்டை நோக்கி போகும்போது கயலைப்பற்றி யோசித்துக்கொண்டே போனான். அவனுக்கு கயலின் கோபம் புரிந்த மாதிரியும் இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது. ஒன்று மட்டும் தெரிந்தது, இரண்டு மூன்று சந்திப்பிலேயே கயலுக்கு அவனிடம் எந்தவிதமான பயமோ, தயக்கமோ இல்லை. தன் மனதில் தோன்றியதை அப்படியே வெளிப்படையாக அவனிடம் சொல்லிவிடுகிறாள். வருணைப்பொறுத்தவரையில் அவளை கஷ்டப்படுத்த நிச்சயம் இந்த ஆலோசனை அவன் கொடுக்கவில்லை. அவனுக்கு உண்மையிலேயே தோன்றியதைத்தான் சொன்னான். வருணுக்கு ஒரு சிலரைத்தான் பிடிக்கும். பிடித்துவிட்டால் அவர்கள் நலம்விரும்பியாகி விடுவான். கயல், தவறான யாரிடமும் மாட்டிக்கக்கூடாது என்று நினைத்தான் அவன். கயல், இவனிடம் எதையுமே மறைப்பதில்லை. ஆனால், வருண், அவளிடம் அப்படியொன்றும் திறந்த புத்தகமாக இல்லை என்று அவனுக்குத்தெரியும். மேலும் கயல், ரொம்ப "நோஸி" டைப் கிடையாது. தேவையில்லாத கேள்விகள் கேட்கமாட்டாள். இது அவளுடைய இயற்கையான குணம். ஜோக் என்ற பெயரில் மற்றவர்களை புண்படுத்துவது போல் ஒருபோதும் அவள் பேசி இன்னும் அவன் பார்க்கவில்லை. எவ்வளவுதான் யோசித்தாலும் அவனால் அவளிடம் எந்த குறையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. இன்றுவரை தான்தான் ரொம்ப நேர்மையானவன் என்று கிணற்றுத்தவளையாக வாழ்ந்தது போல் தோன்றியது. கயலிடம் பழகியபிறகு, அவனுடைய பார்வையில், கயல், அவனைவிட எல்லா வகையிலும் ஒரு படி மேலேயே இருப்பதுபோல் தோன்றியது. She really challenged him without her knowledge.

வீடு வந்ததும், காரை பார்க் பண்ணிவிட்டு அப்பார்ட்மெண்ட் உள்ளே சென்றான். வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஃபோன் மணி அடித்தது. ரிசீவரை எடுத்தான். இன்னொரு முனையில் அவன் அமெரிக்க நண்பன் ஸ்டீவன்!

"What's up, Steven?"

"Hey! There is a change of plan. I am going out for dinner in the evening and I don't know what time I will come back. Can we talk some other time?"

"Sure, Steven!"

"BTW, How did it go with Kayal?"

"It went on fine but I think I sort of made her upset by suggesting something stupid. I enjoy being around her and talking to her. Found a sensible girl who challenges me, Steven"

"Jeez, you like her THAT MUCH?!"

"Yes, I do! I dont see why not? She is beautiful, honest and very intelligent and speaks thamizh and of course has a nice "you know what"

" I never heard you complimenting any girl like that"

"She is exceptional I suppose"

"Talk to you later. bye"

"Bye!"

வருண், ஒரு கேன்சர் "ரிசேர்ச் காண்ஃபரன்ஸ்" போய்விட்டு ஒரு வாரம் சென்றுதான் வந்தான். வந்ததும் நிறைய வேலைகள், அடுத்த ஒரு வாரமும் வேலை வேலை என்று போய்விட்டது. கயலிடம் கால் பண்ணி பேசனும்போல இருந்தது, சும்மா, "எப்படி இருக்கிறாள்" என்று குசலம் விசாரிக்கலாம் என்று நினைத்தான். ஆனால் அவளைக் கூப்பிட ஏதோ தயக்கமாக இருந்தது. அப்பொழுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது இன்றுவரை அவளை அவனாக ஃபோனில் கூப்பிட்டதில்லை என்று. இப்படியே வாரங்கள், மாதங்கள் கடந்தன. அவன் கயலை அதற்குப்பிறகு கூப்பிடவோ பார்க்கவோ இல்லை.

பல மாதங்களுக்குப்பிறகு ஒரு நாள் இரவு, ஜென்னிஃபருடன் ஃபோனில் பேசிக்கொண்டு இருக்கும்போது, ஜென்னி,

"How is your Tamil friend?" என்று கேட்டாள்.

"You mean Kayal?"

"Yeah, How is she?"

"I have not talked with her for months, Jenny! May be I should call her sometime" என்று சொல்லிவிட்டு, கயலைப்பற்றி நினைத்துக்கொண்டே இரவு படுக்கையில் படுத்தான், வருண். கனவில் கயல் வந்து தூங்கவிடாமல் தொந்தரவு செய்தாள்.

வருண் நூலகத்தில் ஒரு புத்தகத்தை செக்கவுட் பண்ண லைனில் நிற்கும்போது, அவனுக்கு முன்னால் கயல் நின்று ஒரு புத்தகம் செக்கவுட் பண்ணிக்கொண்டு இருந்தாள். செக் அவுட் பண்ணிவிட்டு அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு அவள் திரும்பும்போது வருண் பின்னால் லைனில் நிற்பதை நன்கு கவனித்தும் அவனிடம் ஒரு வார்த்தைகூட பேசவே இல்லை. மேலும் அவனை கவனித்தவுடன் வேகமாக நூலகத்துக்கு வெளியே நடந்தாள், கயல். இவனிடம் இருந்து அவள் விலகி ஓடுவதுபோல் இருந்தது. வருண், லைனிலிருந்து வெளியில் வந்து தான் எடுத்துப்போக வந்த புத்தகத்தை அங்கேயே ஒரு டேபிலில் போட்டு விட்டு, வேகமாக அவளை தொடர்ந்து வெளியே போனான்.

கயல், வெளியில் வந்தவுடன் பார்க்கிங் லாட்டில் உள்ள அவள் காரை நோக்கிப்போனாள். வருண் வேகமாக பின்னால் சென்று,

"கயல்!" என்று சற்றே சத்தமாக கூப்பிட்டான்.

அவள், வருணை நோக்கி ஒரு வினாடி திரும்பினாள், பிறகு கவனிக்காத மாதிரி காருக்கு சென்று அவள் கார் கதவைத் திறந்து காரில் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்தாள். கதவை அடைக்கவில்லை! பேசாமல் அமர்ந்து இருந்தாள்.

வருண், அவள் காருக்கு அருகில் சென்று மூடாமல் இருந்த அவள் கார் டோருக்கும் அவளுக்கும் இடையில் போய் நின்றான்.


வருண், அவள் முகத்தை நோக்கிக்குனிந்து, "என்ன கயல் ஏன் இப்படி ஒரு ஹாய் கூட சொல்லாமல் போகிறாய்?" என்றான் கனிவுடன்.

"நீங்க யாருனே தெரியலை எனக்கு" என்றாள் கயல், அவன் முகத்தைப் பார்க்காமல். அவள் குரலில், இன்னதென்றே புரியாத உணர்வுக்கலவைகள்!

அவள் கன்னத்தை தன் வலது கரத்தால் பிடித்து அவள் முகத்தை தன்னை நோக்கித் திருப்பினான், வருண். "நிஜம்மா என்னைத் தெரியவில்லை, கயல்?" என்றான் அழுத்தமான குரலில் அவள் கண்களைப்பார்த்து. அவள் கண்கள் கலங்கி இருந்தன

அடுத்த வினாடி, அவள் அழகான உதடுகளில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான், வருண்.

கண் விழித்தான் வருண்!!!

கடிகாரத்தில் நேரம் பார்த்தான். அதிகாலை 1 மணி! எழுந்துபோய் தண்ணீர் ஒரு தம்ளரில் பிடித்துக்குடித்துவிட்டு மறுபடி படுக்கையில் படுத்தான். "ஏன் கயல் பற்றி இப்படியெல்லாம் கனவு வருகிறது?" என்று யோசித்தான். இது வெறும் உடல் கவர்ச்சி மட்டும் தானா இல்லை அதையும் மீறி?

இதற்கிடையில், கயல், இந்த சில மாதங்களில் வேரொருவரை டேட் பண்ணிக்கொண்டிருந்தாள். அவரும், ஒரு தமிழர்தான், இவளுடன் வேலை பார்ப்பவர். இவள் கம்பெணியில் வேறொரு டிப்பார்ட்மெண்டில் இருப்பதால் அவரை இவள் பார்த்ததில்லை. இவளை எப்படியோ விசாரித்து தெரிந்துகொண்டு திடீர்னு ஒரு நாள், ஒரு ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரண்டில் லன்ச் சாப்பிடும்போது தன்னை அறிமுகம் செய்துகொண்டார். பெயர், ராமகிருஷ்ணன், மதுரையை சேர்ந்தவர் என்றும் இங்குதான் வேலை செய்வதாகவும். ஹாண்ட்சம் ஆகவே இருந்தார். மிகவும் நாகரீகமாக கவனமாகவே பழகினார் என்றே சொல்ல வேண்டும். முதலில் ஒரு லன்ச் டேட்டுக்கு அழைத்தார். வேலையில் இருந்து அப்படியே போய் வந்தாள் கயல். பிறகு தொடர்ந்து அவருடன் இரண்டு மூன்று டேட்ஸ் தொடர்ந்து போய் வந்தாள். அவர் அடுத்த கட்டத்துக்கு போவதற்காக இவள் குடும்பத்தைப்பற்றியெல்லாம் விசாரித்தார்.

அன்று ராமுடன் ஒரு ஹாலிவுட் படம் பார்க்க போயிருந்தாள். வீடு வந்த பிறகு அவரைப்பற்றி அசைபோட்டுக்கொண்டே படுத்திருந்தாள் கயல். ராமை அவள் காதலிக்கிறாளா என்று அவளையே கேட்டுக்கொண்டாள். அதற்கு பதில் இல்லை என்றுதான் வந்தது. ஒவ்வொரு சமயம், அவருடன் இருக்கும்போது, வருண் இப்போ இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பாள். அவளுக்கு அந்த மாதிரி நினைவு வரும்போது ரொம்பவே கில்ட்டியாக இருக்கும்! ஏன் இப்படி ராமோட இருக்கும்போதும் வருண் ஞாபகம் வருகிறது? மறுபடியும் முன்பு ராம்ஜியுடன் இருக்கும்போது தோன்றிய அதே நினைவுகள், என்ன இது இனிமேல் நான் யாரையும் டேட் பண்ணக்கூடாதோ? என்று குழம்பினாள். சரி, நான்தான் இந்த வருணையே நினைத்து உருகுகிறேன். ஆனால் அவர்? அவரை சந்தித்து எத்தனை நாளாச்சு? ஒரு கால் பண்ணி உயிரோடு இருக்கிறேனா என்று கேட்டால், குறைந்தா போய்விடுவார்? இந்த முறை கூப்பிடவேண்டியது நிச்சயம் அவருடைய டேர்ன் தான். அவர்தான் என்னைக்கூப்பிட்டு பேசி இருக்கனும் என்று பிடிவாதமாக நம்பினாள்.

அப்பொழுது அவள் செல்பேசி அலறியது!

"ஹாய், நான் வருண் பேசுறேன். என்னை நினைவிருக்கா கயல்?"

"எப்படி இருக்கீங்க, வருண்?"

"நல்லா இருக்க்கேன் கயல். நீங்க?"

"என் மேல் எதுவும் கோபமா, வருண்?"

"சே சே ஏன் கயல் இப்படியெல்லாம் சொல்றீங்க"?

"இல்லை, உயிரோட இருக்கிறேனானு பார்க்க இப்போவாவது மனது வந்ததே" அவள் குரலில் கோபம் தெறித்தது!

"இல்லை, கயல், நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன். உன்னை கடைசியா பார்த்த பிறகு ஒரு காண்ஃபரன்ஸ் போய்ட்டு வந்தேன். அப்படியே வேலை வேலைனு நேரம் போயிடுத்து. ஒரு சேலஞ்சிங் ப்ராபிளத்தில் வொர்க் பண்ணிக்கொண்டு இருந்தேன்"

"அப்படியா? எப்படி திடீர்னு என் ஞாபகம் வந்தது?"

" சொன்னால் அதுக்கும் உங்களுக்கு கோபம் வரும். அதை நேரில் பார்க்கும்போது சொல்றேனே, கயல்? இந்த சனிக்கிழமை ஈவெனிங் என் வீட்டுக்கு வர்றீங்களா? சும்மா டீ க்குத்தான்"

" மன்னிக்கவும் வருண்! நான் அன்று கோயிலுக்குப்போகனுமே. நீங்களும் வர்றீங்களா என்னுடன்?"

"ஐயோ! நான் சாமியெல்லாம் கும்பிடுவதில்லையே கயல்"

"நான் மட்டும் என்னவாம்? சாமியெல்லாம் கும்பிடுவதில்லை, வருண். ஆனால் அன்று அம்மாவின் பிறந்த நாள். சும்மா அவங்க பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணனும். ஒரு மாதிரி பழகியாகிவிட்டது சிறுவயதில் இருந்து. அதனால் கோயிலுக்குப் போகனும் அம்மாவுக்காக!"

" சரி, நானும் கட்டாயம் வர்றேன் கயல்"

"அப்போ உங்களை வந்து பிக் அப் பண்ணிக்கவா ?"

"சரி அந்த ஸ்டார் பக்ஸ்லயே பிக் அப் பண்ணிக்கிறீங்களா?"

"இல்லை உங்க வீட்டுக்கே வர்றேனே. அட்ரஸ் சொல்லுங்க, வருண்."

"எழுதிக்கோங்க என்று அட்ரஸ் மற்றும் டைரக்ஷன்ஸ் சொன்னான்"

"ஷார்ப்பா 3:50 க்கு வர்றேன், வருண்"

"ஓ கே. பை கயல்!"

-தொடரும்

காதலன்/ரங்கமணி - காதலி/தங்கமணி அப்டேட் 101

மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. இந்த டிப்ஸ் உபயோகித்து காதலன்/காதலி வேண்டுமானால் பேரழிவிலிருந்து எஸ்கேப் ஆகலாம், தங்ஸ்/ரங்ஸ் என்றால் ரொம்ப சாரி(ஐயோ பாவம்!).

பெண்களுக்கு:

உங்களவருக்கு உங்க மேல இண்ட்ரெஸ்ட் போய்விட்டது என்று எப்படி தெரிந்துக்கொள்வது?


1. உங்களுடன் போனில் பேசும் போது, “ம்ம், ஆமாம், நீ சொன்னா சரிமா, அப்படியே செஞ்சுடலாம்” என்று சிங்கிள் வார்த்தைகளில் பதில் சொல்றாரா? கூடவே பேக்கிரவுண்ட்
மியுசிக்காக டிவியோ அல்லது வீடியோ கேமோ அலறுதா? ஐயா கவனிக்கப்படவேண்டியவர்!
2. நீங்க வேலையில் இருந்து வந்தவுடன், “வேலை எல்லாம் எப்படி இருந்தது?” என்று கேட்டுவிட்டு உடனே ஐபாட் சுவிச்சை ஆன் பண்ணுகிறாரா? அல்லது கார் ஸ்டீரியோ சத்தத்தை அதிகரிக்கிறாரா?
3. உங்க முக்கியமான தகவல்களை சார் மறந்துவிடுகிறார். உதாரணமா, உங்க பிறந்த நாள், உங்க பெயர் :) :)
4. ஏதாவது லைனில் நிற்கும் போது உங்களை விட இரண்டடி தள்ளியே நிற்கிறார், முக்கியமா ஏதாவது அழகான பெண்கள் கண்ணில் படும் தூரத்தில் இருந்தால்.
5. உங்க பெண் தோழிகளைப்பற்றி ரொம்ப அக்கறையா விசாரிக்கிறார், முக்கியமா அந்த தோழிகள் அழகா இருந்தால்!
6. நீங்க ஏதாவது ப்ரோக்ராம் போகலாம் என்று ப்ளான் பண்ணினால், என்ன ஆச்சர்யம்! உடனே உங்க காதலரின் மேனேஜர் போன் பண்ணி சரியா நீங்க ப்ரோக்ராம் போடும் நேரத்துக்கு வேலைக்கு வர சொல்றார்.
7. உங்களை தற்செயலா தெருவில் பார்த்தால், பார்க்காத மாதிரி ஆப்போசிட் டைரக்ஷனில் ஓடறார் நம்ம உள்ளம்கவர் கள்வன்.
8. வீட்ல இருந்தால் பழைய பனியனும், பர்மூடா ஷார்ட்ஸும், கலைந்த தலையும், ஷேவ் பண்ணாத முகமுமாக இருக்கும் நம்ம ஆள், வெளியே போவதென்றால்(அதுவும் தனியே), கேல்வின் க்ளைன் செண்டும், ரேபான் கூலிங் க்ளாஸும், இம்சை அரசன் வடிவேலு மாதிரி 2 இன்ச் பவுடரும் போட்டு கிளம்பறார்.

ஆண்களுக்கு:



உங்க உள்ளம் கவர் கள்ளிக்கு உங்க மேல இண்ட்ரெஸ்ட் போயிடுச்சா? எப்படி கண்டுபிடிக்கிறது?
1. நீங்க தொடர்ந்து ஒரே வாரத்தில் நாலாவது முறையா போன் பண்ணி வேலையில் இருந்து வர லேட்டாகும்னு சொல்றீங்க, என்ன வியப்பு? உங்க கண்மணி கொஞ்சம் கூட கோபப்படாம “அதனாலென்ன, எப்போனாலும் வாங்க(இல்லை வராமலே போங்க)”- இப்படி சிரிச்சிக்கிட்டே சொல்றாங்க.
2. அவங்களுடைய ஆத்மார்த்தமான “நண்பனை”ப்பற்றி அடிக்கடி பேசறாங்க., அவங்களா சொல்லாமல் நீங்களா அந்த “தோழரை”ப்பற்றி கேட்டால், “ஏன் இப்படி சும்மா சந்தேகப்படறீங்க?” என்று நெருப்பா பொரியறாங்க.
3. திடீர்னு மேடமுக்கு “வேலை” ரொம்ப அதிகமா போகுது, இதிலென்ன ஆச்சர்யம்னா, இதுவரைக்கும் செய்த அதே வேலையை தான் இப்போவும் செய்யறாங்க, ப்ரொமோஷன் கூட வரல.
4. உங்க ட்ரீம் கேர்ள் இப்போ எல்லாம் ரொம்ப டயட் பண்றாங்க, கண்ணாடி முன் நின்று அடிக்கடி சிரிக்கிறாங்க, சும்மா கடைத்தெரு போக ரன்வே மாடல் மாதிரி ட்ரெஸ் பண்றாங்க.
5. நீங்க பக்கத்தில் வந்தாலே, அக்காவுக்கு தலை வலி வருது.
6. வீகெண்ட் அல்லது இரவானா அக்கா மூட் அவுட் ஆகி, எரிச்சலா இருக்காங்க. மண்டே நீங்க இல்லை அவங்க வேலைக்கு போகும் போது தான் முகம் மலருது.

இரண்டு பாலினருக்கும் பொதுவாக:
1. இண்டர்நெட்டில் அதிக நேரம் உலவுகிறார், முக்கியமாக நீங்கள் தூங்கும் போது.

2. சாப்பிட மறக்கிறாரே தவிர, செல்போனில் இன்கம்மிங் - அவுட்கோயிங் நம்பர்களையும், டெக்ஸ்ட் மெசேஜ்களையும் அழிக்க தவறுவதில்லை.
நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸ் சேர்க்கலாம்

Sunday, August 24, 2008

சொல்லமுடியாத நன்றி!

அன்று செல்வகுமாருடைய முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சிக்கட்டுரை "சப்மிஷன்" நாள். லெல்வக்குமார் இரவு பகல் என்று பாராமல் 5 வருடங்கள் உழைத்து செய்த ஆராய்ச்சியில் வந்த கண்டுபிடிப்புகளை எழுதி, அந்த சாராம்சத்தை உலகிற்கு எடுத்தச்சொல்லும் நாள். சக மாணவ மாணவிகளும் மற்றும் பேராசியர்களும் அந்த அறையில் ஒன்று கூடி இருந்தார்கள். எல்லோரையும் போல் சக பேராசிரியர் ராஜராஜன், அங்கு வந்து காஃபி அருந்திவிட்டு, செல்வக்குமார் தீஸிசை மேலோட்டமாகப் படித்துப்பார்த்துவிட்டு பிறகு “நன்றியுரை” பகுதியைப் பார்த்தார். அதில் செல்வகுமார், ராஜராஜன் பெயரை எங்குமே சொல்லவில்லை என்பதை கவனித்தார். செல்வக்குமாரை முறைப்படி வாழ்த்திவிட்டு தன் ஆய்வகத்துக்கு சென்றார், பேராசிரியர் ராஜராஜன்.

செல்வகுமார், பேராசிரியர் சுதர்சன் ராவ் வின் மாணவன். டாக்டர் ராவ் ஒரு பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல! பெரிய விஞ்ஞான அரசியல்வாதியும்கூட. இப்போதெல்லாம் அவர் விஞ்ஞானத்தில் செலவழிக்கும் நேரம் மிக குறைவு. 5 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலேயே மிகப்பெரிய “சாந்தி ஸ்வரப் பட்நாகர்” பரிசு பெற்ற பிறகு, அவருக்கு அறிவியலில் நேரம் செலுத்த முடியவில்லை! மாதத்தில் ஒரு வாரம்தான் சென்னையில் இருப்பார். அப்பொழுது தனது மாணவ மாணவிகளுடன் அவர்கள் ப்ராஜெக்ட் பற்றி பேசுவார். மேலோட்டமாக ஏதாவது ஆலோசனை கொடுப்பார். மற்ற நேரங்களில் டெல்லி, அமெரிக்கா, ஜப்பான் என்று பல இடங்களுக்கு பறந்து பல காண்ஃபரன்ஸ் போய் வருவார். அவர் அப்படி போய்வருவதால் அவருடைய மாணாக்களுக்கு எல்லாவிதமான ஆய்வக வசதிகள் அவர் ஆய்வகத்தில் இருந்தாலும் தேவையான அளவு “வழிநடத்தல்” அல்லது “கைடன்ஸ்” கிடைப்பதில்லை.

பேராசிரியர் ராவ் வின் “ஒளியில்” (ரெப்யூடேஷன்) மயங்கி வந்து அவரிடம் விழுந்த “விட்டில் பூச்சி” தான் செல்வகுமார். ராவ் வின் உண்மை சுரூபம், அதாவது நல்ல மாணவர்களை கவர்ந்து இழுத்து, பிறகு தண்ணீர் தெளித்து (“முடிந்தால் நீயாக போராடி வெற்றி அடைந்து கொள்”) விட்டுவிடுவார் என்கிற உண்மை அவரிடம் மாணவனாக சேர்ந்த பல மாதங்களுக்குப் பிறகு தான் தெரிந்தது. அவனுக்கு அந்த ஆய்வகத்தில் எல்லா விதமான வசதிகள் இருந்தாலும், தேவையான உதவி (கைடன்ஸ்) அவன் பேராசிரியரிடம் இருந்து கிடைக்கவில்லை. அவனுடைய ப்ராஜெக்ட் பல மாதங்களாக, இல்லை வருடங்களாக நகராமல் ஒரே இடத்தில் நின்றது.

சுமார் 2 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி இது. அன்று சனிக்கிழமை என்பதால் ஆராச்சி மாணவ மாணவியர்கள் கொஞ்சம் ரிலாக்ஸெட் மூடில் இருப்பது வழக்கம். ஆய்வகத்தில் கொஞ்ச நேரமும் காண்ட்டீனில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதில் அதிக நேரமும் மாணவர்கள் செலவழிப்பது வழக்கம். ஆனால் காண்டீனிக்கு வந்து காஃபி வாங்கி வந்து தனியாக ஒரு டேபிலில் அமர்ந்திருந்த செல்வக்குமார் மனநிலை மிகவும் மோசமாக இருந்தது. 21/2 வருடம் ஆராச்சியில் நேரத்தை செலவழித்தும் அவன் ப்ராஜெக்ட் எந்தப்பக்கமும் நகர மாட்டேன் என்றது. “இன்னும் இரண்டு வருடத்தில் எப்படி நான் என் ப்ராஜெக்டை முடிப்பேன்?” என்கிற கவலை அவனுக்கு.

அந்த நேரத்தில் காண்டீன் வந்த பேராசிரியர் ராஜராஜன் தனது காஃபியை எடுத்துக்கொண்டு வந்து செல்வக்குமார் அருகில் அமர்ந்தார்,

“ப்ராஜெக்ட் எல்லாம் எப்படிப்போகுது, செல்வா?” என்றார் ராஜராஜன்.

“ரொம்ப “ஸ்டக்” ஆகி நிற்கிறது சார்” என்றான் செல்வக்குமார் உண்மையான வருத்ததுடன்.

ராஜராஜன், செல்வகுமாரிடம் அவன் ப்ராஜெக்ட் பற்றி சொல்லச்சொல்லிக்கேட்டார். தன்னுடைய ப்ராஜக்ட் பற்றியும் அதில் தான் படும் சிரமங்களையும் அவரிடம் அங்கே கிடைத்த பேப்பர் நாப்கின் மற்றும் பேனா உதவியுடன் எழுதி விளக்கினான் செல்வக்குமார்.

அதை கவனமாகப்பார்த்த ராஜராஜன், “இப்படி சொல்கிறேன் என்று தப்பா நினைக்காதீங்க, செல்வா, இதில் நீங்க வெற்றியடைய சாண்சே இல்லை. ஏனென்றால் இந்த ரிவியூ படியுங்கள், படித்தால் நான் சொல்வது உங்களுக்கு நல்லாவே விளங்கும்” என்று ஒரு ஆர்ட்டிகிளுக்கு ரெஃபெரன்ஸ் கொடுத்தார்.

பிறகு தனக்கு தெரிந்த முறையில் அவனுடைய டார்கெட் அடைய வேறு ஒரு “ரிசேர்ச் ஸ்கீம்” கொடுத்தார்.

“இந்த முறையில் முயற்சி செய்துபாருங்கள். வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் 100% வெற்றிதான் என்றெல்லாம் அடித்து சொல்ல முடியாது” என்று சொன்னார், ராஜராஜன்.

அந்த ஆலோசனை செல்வகுமாரின் தலை எழுத்தையே மாற்றிவிட்டது. செல்வா, ஒரு புது தெம்புடன் இந்த “மிகவும் மாறுபட்ட அனுகுமுறையில்” தன் ப்ராஜக்ட்டை தொடர்ந்தான். அதிசயமாக அந்த அனுகுமுறையில் அவனுடைய ப்ராஜெக்ட் எல்லா வகையிலுமே ஒழுங்காக நகர்ந்தது. அவன் பேராசிரியர், ராவ், செல்வகுமார் அவர்கொடுத்த அனுகுமுறையை மாற்றியதைப்பற்றி கவலைப்படவில்லை. செல்வகுமார் அவர் சொன்ன டார்கெட் டை அடைந்தால் போதும் என்று மட்டும்தான் நினைத்தார். இரண்டு வருடத்தில் செல்வா, ராஜராஜன் கொடுத்த அனுகுமுறையில் முயன்று அதில் முழு வெற்றியும் அடைந்து விட்டான். பேராசிரியர் ராவ், ஏதோ ஒரு புது வகையில் தன் மாணவன் அவனுக்கு கொடுத்த “ப்ராஜெக்டை” முடித்துவிட்டான் என்பதால் சந்தோஷப்பட்டார்.

நன்றி மறப்பவனெல்லாம் இல்லை செல்வகுமார். ஆனால் செல்வக்குமாருக்கு ஒரு இக்கட்டான நிலைமை என்னவென்றால் பேராசிரியர் ராஜராஜன் பெயரைச் சொன்னாலே அவனுடைய பேராசிரியர் ராவுக்கு பிடிக்காது. ராஜராஜன்தான் அவனுடைய வெற்றிக்குக் காரணம் என்று சொன்னால் அவ்வளவுதான். இதை கொஞ்சம் உணர்ந்த செல்வகுமார் தீசிஸிசில் எல்லோருக்கும் நன்றி சொல்லும்போது பொதுவாக ராஜராஜன் பெயரை சொல்லி நன்றி என்று எழுதி இருந்தான். அதை மட்டும் கவனமாக கவனித்த பேராசிரியர் ராவ், பேராசிரியர் ராஜராஜன் பெயர் இங்கு தேவையில்லை என்று ஒரு மாதிரியாக மிரட்டும் தோணியில் இவனிடம் சொல்லி அதை எடுக்கச் சொன்னதும் இவனால் எதுவும் செய்ய இயலவில்லை.

ராஜராஜன் கொஞ்ச நேரம் தன் ஆய்வகத்தில் தன் மாணவர்களிடம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்து தன் கணிணியில் இ-மெயில் செக் பண்ணினார்.

Subject: Sincere Thanks!

Dear Prof. Rajarajan,
I am extremely sorry that I was not able to acknowledge you properly in my Thesis. I know I would have achieved nothing without your valuable help in my thesis work. The discussion I had with you on the Canteen changed everything about my project and my whole research work became smooth after following your scheme. I hope you will understand my inability and limitations. Besides my thanks in this e-mail letter my heartfelt thanks for you will be staying in my heart as long as I live!

Sincerely,
Selvakumar.

இ-மெயிலை படித்துவிட்டு ராஜராஜன் தனக்குள் புன்னகை புரிந்துகொண்டார்.

Friday, August 22, 2008

கயல்விழி பதிவுக்கு அதுசரியின் விமர்சனம்

என்னுடைய தசாவதாரம் பதிவுக்கு, அதுசரி என்பவர் வரிக்கு வரி விமர்சனம் எழுதி இருக்கிறார். இதுவரை படித்ததிலேயே குபீர் சிரிப்பை வரவழைத்த பின்னூட்டம் அது. கடைசியில் அவர் ரஜினியைப்பற்றி எழுதியதைப்பார்த்து ரஜினி ரசிகர் என்று நினைத்தேன. இல்லையாம், இவர் ஒரு Die hard ரஜினி ரசிகராம். அவருடைய கண்ணோட்டத்தையும் பதித்திருக்கிறேன். அதை தவிர்த்து மற்றவை செம காமெடி! போல்டில் போட்டிருப்பது அதுசரி காமெண்டுகள். "குழலினிது, யாழினிது என்போர் சென்னைத்தமிழ் கேட்காதவர்" :)
கமல் ரசிகர்கள் யாராவது தங்கள் பக்க விவாதங்களை தெரிவிப்பதென்றால் தயவு செய்து தெரிவிக்கவும்(தாக்குதல் இல்லாமல்). அதையும் இதே போல பதிக்கிறேன்.

****************************************
இதைப்பார்க்கிறதுக்காக யாராவது எல்.ஏ ட்ராபிக்கில் 3 மணி நேரம் ட்ரைவ் பண்ணுவாங்களா?

அய்ய, இன்னாங்க நீங்க, எப்டி படம் எடுத்தாலும் திட்றீங்க. ஒரு வேள, நீங்க ஒரு கலைப்பட ரசிகையோ?
ராங் சைட் டிரைவ் பண்ணா அப்டி தாங்க. இதுக்குத்தான் என்க ஊர்ல செலவு பண்ணி கீப் லெஃப்ட் அப்டின்னு போர்ட் வச்சிருக்கோம். உங்க ஊர்காராய்ங்க அத படிக்கிறதெ இல்ல போல. (அது சரி, அவய்ங்களையும் கொற சொல்ல முடியாது. படிக்க தெரிஞ்சா தான பாவம்!)

எனக்கென்ன சந்தேகம் என்றால், இதை எதற்காக 'உலகத்தரம்' என்று குறிப்பிடுகிறார்கள்? உலகத்து படங்கள் பலவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடித்திருப்பதாலா?

அது அப்டி இல்லைய்ங்க. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலக நாடுகளில் கோபால் பல்பொடின்னு நீங்க வெளம்பரம் கேட்டதேயில்லயா?? அது மாறி, இது ஒலகம் எல்லாம் ஓடறதுக்கு எடுத்த படம்ங்க!
எங்க தலய்க்கு "ஒலக நாயகன்"ன்னு சும்மாவா குடுத்தாய்ங்க?? ஆஸ்டின்ல இருந்து ஆண்டிப்பட்டி வரைக்கும், கான்பெராவுலருந்து கண்ணம்மா பேட்ட வரைக்கும் எங்க தலயோட தல எல்லாருக்கும் தெரியும்ல?


விட்டால் அசினாக கூட அவரே மேக்கப் போட்டிருப்பார் போல!

இத நான் ரொம்ப வன்மையா கண்டிக்கிறேய்ங்க. நீங்க சொல்றத பாத்தா, அசின்னா நடிச்சது கமல் இல்லன்ற மாறி ஒரு அர்த்தம் வருது. மார்லன் பிராண்டோவை மார்ல பெறாண்ட விட்ட எங்க தலவர பத்தி நீங்க தப்பா எழுதிரீங்க!

கமலின் வெள்ளைக்கார மேக்கப்பையும், பாட்டி மேக்கப்பையும், இஸ்லாமிய இளைஞர் மேக்கப்பையும் பார்த்தால், ஹாலிவுட் ஹாரர் படங்களில் வரும் Zombie(இறந்த பிறகும் பேய் மாதிரி உலவுபவர்கள்) நினைவுக்கு வருகிறது, ரொம்ப பயமா இருக்கு.

அய்ய. அந்த வெள்ளக்கார மேக்கப்பு பாத்து உங்களுக்கு Michael Douglas நெனப்பு வர்ல? இதுக்குத்தாங்க, அப்பப்ப, என்ன மாறி கொஞ்சம் இங்கிலிபீசு படமும் பாக்கனுங்கறது. ( என்ன படம்னு கேக்காதீங்க. அப்புறம், தூள் படத்துல விவேக்கும், விக்ரமும் இங்கிலிபீசு படம் பாத்த மாறி நான் ஒரு கத சொல்ல வேண்டி வரும், ஆமா!)

ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.


இது ம‌ட்டும் ரித்தீசுக்கு தெரிஞ்சிது, எம்புட்டு செல‌வானாலும் ப‌ர்வாலன்னுட்டு, நைட்டோட‌ நைட்டா, நீங்க‌ இருக்க‌ ஊர்ல‌ அவ‌ர் க‌ட் அவுட்டோட‌ வ‌ன்து எற‌ங்கிடுவார். அமெரிக்காவுல‌ருன்து இப்டி ஒரு ர‌சிகையா? அவ‌ரே எதிர்பார்க்க‌லைங்கோ!


ஹீரோயின்கள் கூட இவர் படங்களில் பெரும்பாலும் டம்மிகளே. மல்லிகா ஷெராவத், பஞ்சாபி கமலின் மனைவி, நாகேஷின் மனைவி போன்ற பெண் ரோல்களில் அசினே மேக்கப் போட்டு நடித்திருக்கலாமே, ஏன் நடிக்கவில்லை? அசின் முகமூடி போட்டால் முகத்தில் ஒட்டாதா?

இன்னாது அசினா? அலோ, அசின் ந‌டிச்ச‌து ஒரே ஒரு சீன் தான். ம‌த்த‌தெல்லாம், எங்க‌ த‌லீவ‌ர் ப‌ண்ண‌து. நாகேஷின் ம‌னைவியா ந‌டிச்ச‌து கே.ஆர். விஜியா. (எங்க‌ ப‌ழிய‌ த‌லீவ‌ரு எம்சியார் கூட‌ ரொம்ப‌ ப‌ட‌ம் ந‌டிச்சிருக்காங்கோ. உங்க‌ளுக்கு இதுவும் தெர்ல‌, Micheal Douglas ம் தெர்ல‌. இன்னாங்க‌ நீங்க‌!) எங்க‌ த‌லீவ‌ரு ஏன் கே.ஆர். விஜியா மாறி ந‌டிக்கில‌ன்னா, அவ‌ரு நாகேஷா ந‌டிச்சிருக்காரே? அது போதும்னு ஒரு பெர்ய‌ ம‌ன்சு தான்.

தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்களை ஸ்டீரியோ டைப் பண்ணி இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது. மாற்று மதத்தவர் அப்படியா இருக்கிறார்கள்?

இன்னாங்க‌ நீங்க‌. வின்சென்ட் த‌லீத்னு எங்கனா வ‌ருதா?? அவ்ரு ஒரு நாடாரோ இல்ல வன்னியராவோ இல்ல மொல்லியாரவோ இருக்கக்கூடாதா? அவ்ரு ஒரு கிறிஸ்டிய‌ன் அம்புட்டு தான். அதுவும் கூட பேர வச்சி என்ன மாறி மொத ரோ கோஸ்டிங்க கெஸ் பண்றது. ஒங்கள‌ மாறி பால்கனி பெரிய மன்சங்க இப்பிடி சொல்லலாமா??
அன்த‌ பாட்டி எப்ப‌டி ஒருவித‌மான‌ காமெடி பாத்திர‌மோ அப்ப‌டி பாத்திர‌ம் தான் அன்த‌ நெட்டை க‌ம‌ல். இத‌ நீங்க‌ ம‌த‌த்தோடு முடிச்சி போட்ட‌ நாங்க‌ இன்னா ப‌ண்ற‌து??


அசினுடைய ஆண்டாள் கேரக்டரை மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கும், நாயகனுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை.

ரொம்ப‌ அக்கிர‌ம‌மா இருக்குங்க‌. கெமிஸ்ட்ரின்ன‌ இன்னா? (கெமிஸ்ட்ரின்னாலே, இஸ்கூல்ல‌ மொத‌ நாளு ஆசிட்ட‌ குடிச்ச‌து தான் நெனிவுக்கு வ‌ருது!). கெமிஸ்ட்ரின்னா டூய‌ட் பாட்றதா? ஏங்க‌, ம‌ர்த்த‌ சுத்தி டூய‌ட் பாட்ற‌ கோஸ்டின்னு திட்ரீங்க‌. டூய‌ட் வெக்காட்டியும் திட்ரீங்க‌. என்ன‌ தாங்க‌ ப‌ண்ற‌து? நாங்க‌ளும் ப‌ட‌ம் எடுக்க‌னுமுல்ல‌??

"என்ன ஜாதியோ, பெருமாளை தொடாதே!" என்று அநாகரீகமாக பேசும், தொடர்ந்து காலை வாரி விடும் பெண்ணின் மீது கமலுக்கு ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்!

இது ஆலிவுட்டு ஸ்டைலுங்கோ! இன்த‌ மேறி ராங் காட்ற பொண்ணுங்க‌ள‌ தான் எங்க‌ள‌ மேறி மொத‌ ரோ கோஸ்டிக்கு ரொம்ப‌ புடிக்கும். இது தெரியாத‌ உங்க‌ளுக்கு? போங்க‌, இதுக்குத்தான் எப்ப‌வும் பால்க‌னில‌ உக்கான்து ப‌ட‌ம் பாக்க‌ கூடாதுங்க‌ற‌து!

ஆகமொத்தம் சில நல்ல பாகங்களைத்தவிர, இந்த படம் பார்த்து டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம்,

ரொம்ப‌ அனியாய‌மா பேசுறிய‌. ஆனா, எங்க‌ த‌ல‌ அடுத்து எடுக்குற‌ ம‌ரும‌ யோகி (எ) ம‌ருத‌ நாய‌க‌ம் (எ) கான் சாகிப் கான் ப‌த்தி ஒழுங்கா விம‌ர்ச‌ன‌ம் எளுதுங்க‌. ம‌ரும‌ யோகி, ச‌ரும‌ வியாதின்னு ல‌க்கி லுக் ஸ்டைல‌ எளுதினீங்க‌, நான் எம்புட்டு செல‌வானாலும் ப‌ர்வால‌ன்னுட்டு அமெரிக்க‌ வ‌ன்து உங்க‌ளுக்கு "வீடு" ப‌ட‌த்தை அம்ப‌து த‌ட‌வ‌ போட்டு காட்டுவேன். அப்புற‌ம் நீங்க‌ வீட்ட‌ காலி ப‌ண்ணிட்டு ஓட‌ வேண்டிய‌து தான். இது என்னோட‌ எச்ச‌ரிக்க‌ இல்ல‌ய்ங்க‌, வேண்டுகோள். (இது ஒண்ணு சொல்ல‌னும்னு ச‌ங்க‌த்தில‌ இருன்து ச‌மீப‌த்திய‌ உத்த‌ர‌வு).

ரஜினியைப்பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம், ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை!

இதில் த‌வ‌று ர‌ஜினி மீது இல்லை. ர‌ஜினி ஒரு ந‌டிக‌ர். ம‌க்க‌ள் த‌லைவ‌ரோ, முத‌ல்வ‌ரோ இல்லை. உண்மையில், அந்த‌ மீட்டிங்கில் ர‌ஜினி சொன்ன‌து என்ன?
"அவ‌ங்க‌ள‌ ஒதைக்க‌ வேணாமா??"

இது எந்த‌ அர்த்த‌த்தில், எந்த‌ வார்த்தைக‌ளின் தொட‌ர்ச்சியாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌து?? I am sorry Kayal, but if you take words out of its context, then you are going to get unintended meanings!

Rajini never meant to say "Attack All the Kanadigas". Anybody who listened to his speech knew this.

ர‌ஜினி மீது க‌ல்லெறிவ‌து த‌மிழ்நாட்டில் ப‌ல‌ருக்கு ச‌ந்தோஷ‌ம். ர‌ஜினி த‌மிழ‌ன் இல்லை, த‌மிழ‌ன் இல்லை, என்று திருப்பி திருப்பி சொல்லி த‌ங்க‌ள் புண்ணை சொறிந்து கொள்வ‌து இவ‌ர்க‌ள் வ‌ழ‌க்க‌ம். என‌வே, ர‌ஜினி மீது சாணி பூச‌ கிடைக்கும் என்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தையும் த‌வ‌ற‌ விடுவ‌தில்லை.

ர‌ஜினி ப‌ட‌ம் என்ப‌து ர‌ஜினிக்கு ம‌ட்டுமான‌ விஷ‌ய‌மில்லை. ஒரு ர‌ஜினி ப‌ட‌ம் வெற்றி அடைந்தால், ப‌ல‌ர் வாழ்கிறார்க‌ள். நீங்க‌ள் ம‌றுத்தாலும், இது தான் உண்மை. ர‌ஜினி ப‌ட‌ம் தோல்வி அடைந்தால் ர‌ஜினிக்கு ம‌ட்டும‌ல்ல‌, வினியோக‌ஸ்த‌ர்க‌ள், தியேட்ட‌ர்கார‌ர்க‌ள், திரைப்ப‌ட‌ தொழிலாளிக‌ள் என்று ப‌ல‌ருக்கும் நேர‌டியாக‌வும், ம‌றைமுக‌மாக‌வும் க‌டும் பிர‌ச்சினைக‌ள்.

Whether you agree or not, Rajini is an one man industry. As an investment banker, I hate to see any industry in trouble!

கர்னாட‌க‌ விஷய‌த்தில், க‌ருணாநிதி ர‌ஜினியின் காலை வாரி விட்ட‌தே உண்மை. நீங்க‌ள் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை க‌வ‌னிக்கிறீர்க‌ளா என்று என‌க்கு தெரியாது. ஆனால், க‌வ‌னித்தால் ஒன்று புரியும். திரையுல‌கின் அந்த‌ உண்ணாவிர‌தத்திற்கு முன்பே, ஒகென‌க்க‌ல் பிர‌ச்சினையை ஒத்தி வைக்க‌ க‌ருணானிதி முடிவெடுத்து விட்டார். (If you doubt me, check the dates of that hunger strike, and when Karunanidhi announced that the water problem is suspended until the end of Karnataka election).
க‌ருணானிதி போன்ற‌ 80 வ‌ருட‌ அர‌சிய‌ல்வாதிக்கு தெளிவாக‌ தெரிந்த‌ விஷ‌ய‌ம், ம‌க்க‌ளுக்கு இது பிடிக்காது என்ப‌து. என‌வே, விச‌ய‌த்தை திசை திருப்ப‌ அவ‌ர் செய்த‌ நாட‌க‌மே, ர‌ஜினி இந்த‌ பிர‌ச்சினையில் என்ன‌ சொல்கிறார் என்ப‌து.

அவ‌ர் நினைத்த‌வாறே, இப்பொழுது முழு க‌வ‌ன‌மும், ர‌ஜினி மீது திரும்பி விட்ட‌து. எந்த‌ பொறுப்பிலும் இல்லாத‌ அவ‌ர் க‌ல்ல‌டிக‌ளை பெற்று கொள்ள‌, குடும்ப‌த்துட‌ன் முத‌ல்வ‌ர் ப‌த‌வியை அனுப‌விக்கும் க‌ருணாநிதி, "உளியின் ஓசை" போன்ற‌ ப‌ட‌ங்க‌ளை வெளியிட்டு ம‌க்க‌ளின் காதுக‌ளிலும், க‌ண்க‌ளிலும் உளியை பாய்ச்சுகிறார்.

க‌ருணாநிதி த‌ன்னை ராஜ‌ த‌ந்திரி என்று அக‌ ம‌கிழ‌லாம். ஆனால், வ‌ல்லானுக்கு வ‌ல்லான் வ‌ருவான். எம்.ஜி.யார் 14 வ‌ருட‌ம் ஆப்பு வைத்த‌து போல் மீண்டும் ஒருவ‌ன் தி.மு.க‌.வுக்கு வைப்பான். அது ர‌ஜினியாக‌ கூட‌ இருக்க‌லாம். இல்லை, வேறு யாரேனும் இருக்கலாம்.

மிருக‌ங்க‌ளில் கொடிய‌ மிருக‌ம் எது தெரியுமா?? சிங்க‌ம‌ல்ல‌, அது சோம்பேறி மிருக‌ம். உண்மையில், எத‌ற்கும் அச‌ராத‌, அதே ச‌ம‌ய்ம் நிதான‌மான‌ மிருக‌ம் புலி. அதை விட‌ கொடுமையான‌ மிருக‌ம் ப‌சித்த‌ புலி. அந்த‌ புலியே அஞ்சி ஒதுங்கும் ஒரு மிருக‌ம் உண்டென்றால், அது ப‌சித்து, காய‌ம்ப‌ட்ட‌ ஒரு புலி!

If you corner a wounded, hungry tiger, then be prepared to payback!

ர‌ஜினி த‌ன‌து அப்பாவி த‌ன‌த்தாலும், க‌ருணானிதி மீது வைத்திருக்கும் ம‌ரியாதையாலும் இந்த‌ பிர‌ச்சினையில் மாட்டிக்கொண்டார். அவ‌ர் புரிந்து கொள்ளும் நாள் வ‌ரும். அப்பொழுது க‌ருணானிதிக்கும், அமைச்ச‌ர் என்ற‌ போர்வையில் உல‌வும் ராஜா, வீர‌பாண்டி ஆறுமுக‌ம் போன்ற‌ ர‌வுடிக‌ளுக்கும் ஒரு பெரிய‌ ஆப்பு நிச்ச‌ய‌ம்.

அந்த‌ ஆப்பை ர‌ஜினி வைக்க‌விட்டாலும், க‌ருணானிதியின் குடும்ப‌ பிர‌ச்சினையில் அவ‌ர்க‌ளே ஆப்பை ரெடி செய்து கொள்வார்க‌ள்!

குசேலன் - என் பார்வையில்

பொது: ரஜினிகாந்த்க்குத்தான் எத்தனை பிரச்சினை! இவர் தமிழரா? மராத்திக்காரரா? கன்னடிகாவா? வியாபாரியா? அரசியல்வாதியா? தமிழர்களை ஏமாற்றவே பிறந்தவரா? இல்லை எல்லோருக்கும் நல்லவரா வாழ நினைத்து யாரையும் திருப்திபடுத்த முடியாமல் குழம்பி நிற்கும் ஒரு பரிதாபத்திற்குரிய ஜென்மமா? சரி எது எப்படி இருந்தாலும் கொஞ்ச நேரம் அவரை விட்டுவிட்டு குசேலனைப்பார்ப்போம்!

படத்தின் கதை:
படத்தின் நாயகன், "குசேலன்" (பாலு), பசுபதி. நாயகி மீனா. பசுபதி (பாலு) ஒரு முடிதிருத்தும் தொழில் செய்பவர். நியாயமாகவும், சட்டத்திற்கு உற்பட்டும் வாழ விரும்பும் ஒரு அப்பாவி. இவரின் மனைவி மற்றும் குழந்தைகள் ஒரு அழகான குடும்பம். இவர் வாழ்க்கையில் பல கஷ்டங்களுடன் வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டு இருக்கும்போது, சினிமா பைத்தியம் பிடித்த அவர் வசிக்கும் ஊருக்கு வருகிறார் அசோக் குமார் என்கிற நடிகர், ஒரு சூப்பர் ஸ்டார். அவர் வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக அந்த ஊருக்கு வருகிறார். ஊரே கொண்டாடுகிறது. எல்லோரும் இந்த நடிகரைப்பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அவர் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் முன்னால் கூடுகிறார்கள்.

பாலுவின் பழைய நண்பர்தான் இந்த அசோக் குமார், இன்று பெரிய நடிகராகி, சூப்பர் ஸ்டாராகி இருக்கிறார். இதை பாலு தன் மனைவி குழந்தைகளிடம் சொல்லாமல் சொல்கிறார். அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் தன் ஏழை அப்பாவின் நண்பர் என்கிற பெருமை தாங்க முடியவில்லை. அந்த உண்மை ஊர் முழுவதும் பரவுகிறது. ஊரில் உள்ள அனைவரும் பாலுவின் உதவியை நாடுகிறார்கள்- சூப்பர் சாருடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள, அவரிடம் தன் படத்திற்கு கால்ஷீட் வாங்க இப்படி. மனைவியும், குழந்தைகளும், நண்பர்களும், விரோதிகளும், பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் கன்னிகாஸ்த்ரிகளும்கூட பசுபதியை அணுகுகிறார்கள்- சூப்பர் ஸ்டாரை பார்க்க உதவி செய்யக்கோரி. ஆனால், பாலுவின் நிலைமை தர்மசங்கடம், மேலும் பாலுவிற்கு பயம், தன்னை தன் பழைய நண்பன் அடையாளம் தெரியாது என்று சொல்லிவிட்டால்? அவரும் முயற்சிக்கிறார், சந்திக்க, ஆனால் கூட்டத்தில் முட்டி மோதி அவரால் சந்திக்க முடியவில்லை. ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியே.

அவர் முயற்சி தோல்வி அடையவே, கடைசியில் எல்லோரும் ஏழை பாலுவைப்பார்த்து சிரிக்கிறார்கள். இவர் சூப்பர் ஸ்டார் ஃப்ரெண்டாம் என்று!! பொய் சொன்னதாக சொல்கிறார்கள். தன் குழந்தைகள்கூட அவரை சந்தேகிக்கிறார்கள். சுயமரியாதையுள்ள எந்த ஏழைக்கும் எப்படி இருக்குமோ அதை பசுபதி அழகாக காட்டுகிறார், ரொம்ப நல்லா நடித்து இருக்கிறார். கடைசியில், பள்ளிக்கு ஒரு ஆண்டுவிழாவில் சூப்பர் ஸ்டாரை பசுபதியின் உதவி இல்லாமல் அழைத்து வருகிறார்கள். பசுபதி மனைவி குழந்தைகள் எல்லோரும் சூப்பர் ஸ்டாரை பார்க்க பள்ளிக்கு செல்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் பாலுவும் அந்த விழாவுக்கு வந்து ஒரு ஓரத்தில் நிற்கிறார், தன் நண்பன் பேச்சை கேட்க. சூப்பர் ஸ்டார் பேசுகிறார். எப்படி? அந்த ஊரில் பாலுவை கேலி செய்த அனைவரும் கண்ணில் நீர் மழ்க வைக்கும் அளவுக்கு. தங்கள் தவறை உணருகிறார்கள் எல்லோரும். பாலு ஆனந்த கன்ணீர் வடிக்கிறார். திரையரங்கிலும் 90% ஆடியன்ஸ் கண்கலங்குகிறார்கள். உண்மையிலேயே ஒரு நல்ல க்ளைமாக்ஸ்!

காமெடி: ஆஹா ஓஹோனு பாராட்டும் அளவுக்கும் இல்லை. அதே சமயத்தில் ரொம்ப மோசமும் இல்லை

* தன்னை கல்யாணம் செய்த கவர்ச்சியான மனைவி தன்னை தொடவிடாமல் இருப்பதால் அவளுக்கு தெரிந்தும், தெரியாமலும் வடிவேலு பார்த்து ரசிப்பதை என்னால் ரசிக்க முடிந்தது. காராணம் அவர் மனைவிதானே அவர். அவருக்கு இந்த உரிமைகூட கிடையாதா?

* ஆனால் நயந்தாராவை உடை மாற்றும் அறையில் பார்ப்பதுபோல் எடுத்தது தேவையே இல்லாத ஒண்ணு. அதை "சென்சாரா"வது கவனமாகப்பார்த்து வெட்டி எறிந்து இவர்களுக்கு உதவி செய்து இருக்கலாம். இதைப்பார்த்து "சாரு" டேர்ன் ஆண் பண்ணியது எனக்கு கொஞ்சம் அதிசயமாக இருந்தது. எனக்கு அந்த சீன் படு எரிச்சலைத்தான் தந்தது!

ரஜினிகாந்த்: நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியாது. அழகாக செய்து இருக்கிறார். பார்க்கவும் நல்லாத்தான் இருக்கிறார். ஆனால் இவர் தனிவாழ்க்கை சம்மந்தப்பட்ட 3 கேள்வியை கேட்டு அதற்கு மழுப்பலான பதில் தருவதை தவிர்த்து இருக்கலாம். எந்த அறிவு ஜீவியின் ஐடியானு தெரியலை இது. மட்டமான ஐடியா! அதை ஏற்றது இவரின் முட்டாள்த்தனம்!

பாடல்கள்: ரசிக்கத்தக்கவே உள்ளன.

ஒளிப்பதிவு: பிரமாதம்

டைரக்ஷன்: சுமார்தான். க்ளைமாக்ஸ் மட்டும் பிரமாதம்.

மற்றவை: இந்தப்படம் கவிதாலயாவின் தயாரிப்பு. அதாவது பாலசந்தரின் தயாரிப்பு. ரஜினிகாந்த் ஒரு 20 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதில் ரஜினிகாந்த வருவது 25%. அவர் மற்றபடங்களுக்கு வாங்கும் சம்பளம் 20 கோடி (சிவாஜி, சந்திரமுகி) என்றால், இந்தப்படத்தில் அவர் நடித்ததற்கு கிடைக்கவேண்டிய நியாயமான சம்பளம் 5 கோடி!

இதில் இவருக்கு ஒரு சண்டை கிடையாது, பன்ச் வசனம் இல்லை. இரண்டு பாடல்களில் வருகிறார். படத்தில் முதலில் 40 நிமிடங்கள் இவர் சுத்தமாக தலைகாட்டவே இல்லை. இந்தப்படம் குழந்தைகளைக்கவராது என்பது என் தாழ்மையான எண்ணம்.

சிவாஜி படத்தின் வெற்றியின் விளைவால், இந்த சாதாரண படத்தை 60 கோடிக்கு வாங்கியது பிரமிட் சாய்மீரா நிறுவனம். இதனுடைய ஆடியோ ரைட்ஸ் சுமார் 3 கோடிக்கு விற்பனையானது. 60 கோடிக்கு வாங்கிய பிரமிட் சாய்மீரா எப்படியோ அதிகமான மினிமம் கியாரண்டி வைத்து விற்றுவிட்டார்கள். படத்தை காட்டாமலே வியாபாரம் செய்துவிட்டார்களா?? இது அவ்வளவு தொகைக்கு விற்றதும் சரி, படத்தைப்பார்க்காமல் வாங்கியதும் சரி, சரியான முட்டாள்தனம் என்பது இப்போதுதான் புரிகிறது.

படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை, தோல்விப்பட வரிசையில் சேரவேண்டியதாகிவிட்டது. தியேட்டர் ஓனர்கள் நஷ்டப்படுகிறார்கள். ப்ரமிட் சாய்மிரா மற்றும் பாலசந்தருக்கு மற்றும் ரஜினிகாந்துக்கும் லாபம்.

ஆனால் தியேட்டர் ஓனர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள்! மினிமம் கியாரண்டியை குறைத்து வைத்து இருக்க வேண்டும். படத்தை ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் பண்னுகிறார் என்பதுபோல் திரையிட்டு இருக்கனும். இது ஒரு ரஜினிபடம்போல் வைத்து அதிகவிலைக்கு விற்றுவிட்டார்கள் என்று குறை சொல்கிறார்கள், தியேட்டர் ஓனர்கள்! இப்போ தியேட்டர் ஓனர்கள் ப்ரமிட் சாய்மீராவையும் கவிதாலயாவையும் மினிமம் கியாரண்டியை குறைத்து வைத்து இல்லாததால்தான் நாங்கள் நஷ்டப்படுகிறோம். எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுங்கள் என்று சொல்லிக்கூறி போராடுகிறார்கள்!

Tuesday, August 19, 2008

உலகத்தரம், உலகநாயகன் - இதெல்லாம் ஓவர் பில்டப்!




தசாவதாரம் படம் கடைசியில் பார்த்தாச்சு! ரொம்ப லேட் என்று நினைக்கறீங்களா? வேலையை எல்லாம் அப்படியே போட்டு ஓடிப்போய் பார்க்கும் அளவுக்கு முக்கியமான படம் இல்லை என்பதை நீங்க எல்லாம் தொடர்ந்து போட்ட விமர்சன மழையில் புரிந்துக்கொண்டேன். இதைப்பார்க்கிறதுக்காக யாராவது எல்.ஏ ட்ராபிக்கில் 3 மணி நேரம் ட்ரைவ் பண்ணுவாங்களா?


எனக்கென்ன சந்தேகம் என்றால், இதை எதற்காக 'உலகத்தரம்' என்று குறிப்பிடுகிறார்கள்? உலகத்து படங்கள் பலவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடித்திருப்பதாலா? பட்டாம்பூச்சி விளைவைப்பற்றி தெரிந்துக்கொள்ள விருப்பம் இருப்பவர்கள் தயவு செய்து "Butterfly Effect" படம் பார்க்கவும், தசாவதாரத்தில் கமல் எபெக்ட் அல்லது கமல் ஓவர்லோட் வேண்டுமானால் கிடைக்கும்.

"எழவு வீட்டில் நான் தான் பிணம், கல்யாண வீட்டில் நான் தான் மாப்பிள்ளை" : கமலை பார்த்ததும் இந்த பழமொழி நினைவுக்கு வருகிறது. விட்டால் அசினாக கூட அவரே மேக்கப் போட்டிருப்பார் போல! முகம் இருக்கிறது, மேக்கப் வசதி இருக்கிறது என்பதற்காக இப்படி அட்டகாசம் செய்வதா? கமலின் வெள்ளைக்கார மேக்கப்பையும், பாட்டி மேக்கப்பையும், இஸ்லாமிய இளைஞர் மேக்கப்பையும் பார்த்தால், ஹாலிவுட் ஹாரர் படங்களில் வரும் Zombie(இறந்த பிறகும் பேய் மாதிரி உலவுபவர்கள்) நினைவுக்கு வருகிறது, ரொம்ப பயமா இருக்கு. என்ன கொடுமை சார் இது? ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.


கதாநாயகனாக நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே, கமல், தான் நடிக்கும் படங்களில் முழு ஆதிக்கம் செலுத்த விரும்புவார். அதுவும் இரணடு ஹீரோ சப்ஜெக்ட் என்றால் இவரோடு நடிக்கும் மற்ற ஹீரோவின் நிலை பரிதாபம்! உதாரணத்துக்கு, அன்பே சிவம் படத்தில் வெயிட்டான ரோல் இவருடையது, மாதவனுக்கு இத்துப்போன ரோல். காதலா காதலா படத்தில், பிரபு தேவாவுக்கு திக்கு வாய் வந்து விட்டது பாவம்! ஹீரோயின்கள் கூட இவர் படங்களில் பெரும்பாலும் டம்மிகளே. மல்லிகா ஷெராவத், பஞ்சாபி கமலின் மனைவி, நாகேஷின் மனைவி போன்ற பெண் ரோல்களில் அசினே மேக்கப் போட்டு நடித்திருக்கலாமே, ஏன் நடிக்கவில்லை? அசின் முகமூடி போட்டால் முகத்தில் ஒட்டாதா? தசாவதாரத்தில் கமலின் ஆர்வம் ரொம்ப அதிகமாகிவிட்டது போல, வித விதமான வேடம் போட்டு தன்னையே டார்ச்சர் பண்ணிக்கொண்டது போதாதென்று, படம் பார்க்கும் நம்மையும் டார்ச்சர் பண்ணுகிறார்

தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்களை ஸ்டீரியோ டைப் பண்ணி இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது. மாற்று மதத்தவர் அப்படியா இருக்கிறார்கள்? ஹீரோ கமல் முகத்தில் வயதான சுவடுகள் தெரிகிறது, 50-60 வயது தமிழ் நடிகர்கள், 25 வயது இளைஞனாக நடிப்பதை நிறுத்தவே மாட்டார்களா? வயதில் குறைந்தவர்களால் மட்டுமே ஹீரோயிசம் செய்ய முடியும் என்று யார் சொன்னது? உலகில் பல சாதனையாளர்கள் வயதானவர்களே! தங்கள் இளமை காலம் கடந்த பிறகே வியக்கத்தக்க சாதனைகளை செய்திருக்கிறார்கள்.

அசினுடைய ஆண்டாள் கேரக்டரை மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கும், நாயகனுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை. இரண்டு பேருக்கும் ஏன் காதல் வருகிறது என்பதற்கு சரியான காரணங்கள் இல்லை. நான் பார்த்தவரைக்கும், ஆண்டாள் பெருமாளை தான் காதலிக்கிறார். "பெருமாளே, பெருமாளே" என்று அரை லூசு மாதிரி படம் முழுக்க சிலையை வைத்துக்கொண்டு புலம்புகிறார்(திரும்பவும் இங்கே தமிழ் கதாநாயகி என்றால் அரை லூசாக இருக்க வேண்டும் என்ற ஸ்டீரியோ டைப்). "என்ன ஜாதியோ, பெருமாளை தொடாதே!" என்று அநாகரீகமாக பேசும், தொடர்ந்து காலை வாரி விடும் பெண்ணின் மீது கமலுக்கு ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்! அசின் மாதிரி ஒருவர் என்னிடம் பேசி இருந்தால், சுனாமியோடு சுனாமியாக கடலில் தள்ளி விட்டு வந்திருப்பேன். சுனாமியில் இறந்தவர்களை மீட்டெடுக்கும் பணிகளுக்கு நடுவே, இரண்டு பேரும் பேசும் காதல் வசனங்கள் அநாகரீகத்தின், அருவருப்பின் உச்சக்கட்டம்!

ரசிக்க வைத்த கேரக்டர்கள் என்றால் அது தெலுங்கு உயர் அதிகாரியாக வரும் பல்ராம் நாயுடுவும், வின்செண்ட் பூவராகவனும். அதிகாரியின் வேடம் கமலுக்கு அட்டகாசமாக பொருந்துகிறது, சம வயதாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். அதுவும் தெலுங்குக்காரர்களைப்பார்த்ததும் அதிகாரி கமல் வெளிப்படுத்தும் சென்டிமெண்டும், முகபாவனையும், பார்வையும், பின்ணனி இசையும் அருமை! பூவராகவன் கேரக்டரை அவலட்சணமாக ஆக்கி விட்டாலும், அவருடைய கொள்கைகளுக்காகவும், தியாகங்களுக்காகவும் நிச்சயம் ரசிக்கலாம்.

ஆகமொத்தம் சில நல்ல பாகங்களைத்தவிர, இந்த படம் பார்த்து டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம், பொழுதுபோக்காக கூட இல்லை. அதற்காக எனக்கு ரஜினியைப்பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம், ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை!

Saturday, August 16, 2008

பகிரங்க கடிதம்: லதானந்த் சித்தரின் எதிர்வினை

இன்று லதானந்த் சித்தரிடம் இருந்து எனக்கு மின்னஞ்சல் மூலமாக வந்த கடிதம்:

அன்பு கயல்!

என்னை மிகவும் நெகிழச் செய்தது ஈமெயில் மூலம் நீ அனுப்பிய இப்பதிவு.

கடித மேளாவின் தலை சிறந்த கடிதம் இது.

அந்த அற்புதப் பெண்மணிக்கு மானசீக நமஸ்காரங்கள்.

உன் பாட்டியைப் போன்றதொரு பெண்மணி - என்னுடைய பெரியம்மா இன்றும் எங்களுடன் வாழ்ந்து வருகிறார்.

உனது எழுத்து எளிமையாக நடையில் ஆனால் மிகவும் செறிவாக இருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே நான் அவதானித்து எனது பிளாக்கில் எழுதியதை மகிழ்வுடன் இப்போது நினைவு கூர்கிறேன்,

ம்ம்ம். பிளாக் உலகம் எப்படிப் போய்க் கொண்டிருக்கு?

நீ விரும்பினால் எனது இந்தக் கடிதத்தை உன் பிளாக்கில் நீ வெளியிடலாம்.

லதானந்த்

எனது ஆதங்கம்: இனிமேல் கமெண்ட் எழுத கூட ப்ளாக் பக்கம் வரப்போவதில்லை என்று முடிவு செய்தாகிவிட்டதா? :( ஆசிரமத்தை சரியான முன் அறிவிப்பின்றி இப்படி முழுவதுமாக ஷட் டவுன் பண்ணிய லதானந்தை வருத்தத்துடன் கண்டிக்கிறேன். நீங்களும் இங்கே உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.

Friday, August 15, 2008

மங்கை உள்ளம் பொங்கும்போது...

சுகன்யாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. காஃபி எடுத்து கொடுத்த அட்டண்டண்ட்க்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் காஃபியை வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் போய் அமர்ந்தாள். வெயில் அதிகமாக இருப்பதால் ஒரு சல்வார் காமிஸ் அணிந்து வந்திருந்தாள். இவளுடைய இந்திய ட்ரஸை வழக்கம்போல ஒரு சிலர் ஒரு மாதிரியாக பார்த்தார்கள். 46 வயதிலும் அவள் அழகு, பல ஆண்களை கவர்வதை மற்றவர்களின் பார்வையிலேயே உணர்ந்தாள். மற்ற ஆண்கள் தன்னைப்பார்ப்பதை ரசிக்கும் அவளுக்கு, அதே பார்வை இன்று தன்னை மணந்த கணவன் தன்னைப்பார்த்தால் மட்டும் அவளுக்கு பிடிக்கவில்லை!

இப்போது சனிக்கிழமை காலை 11 மணி. ஆனால் இந்த விடுமுறை நாளில் அவளுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. வீட்டில் இருந்தால் அந்த ஆளையும் அவர் செய்கிற 4-மணிநேர பூஜையையும் பார்க்க வேண்டும். அவரைப்பார்த்தாலே பிடிக்கவில்லை! அவர் வாயை திறந்தால் கோபம் தலைக்கு ஏறியது! அவர் பூஜையும் அவர் வழிபாடும்! என்றுமே நிறுத்த முடியாத புகைபிடிக்கும் பழக்கம் வேற! இவரெல்லாம் என்ன விஞ்ஞானி? புகைப்பிடித்தால் பண்ணினால் புற்றுநோய் வரும்னு தெரியாத விஞ்ஞானி? பேசுறதெல்லாம் வியாக்யானம் ஆனால் தான் பண்ணுறதெல்லாம் அயோக்கியத்தனம்! அவர் செய்யும் எல்லாவற்றிலும் வடிகட்டிய சுயநலம் நிறைந்து வழிந்தது! இதில் கடவுளை தன் அயோக்கியத்தனத்திற்கு உதவிக்கு அழைக்கிறார் போலும்! ஆமாம், இப்படி மணிக்கணக்காக பகவானை வழிபட்டு வழிபட்டு, யாரை ஏமாற்றுகிறார் இந்த ஆளு? கடவுளையா? தன்னையேவா? இல்லை ரெண்டு பேரையும் சேர்த்தா? யாரை வேணா ஏமாற்றட்டும் என்னை விட்டால் போதும்!

மனுஷாளை மனுஷா புரிந்து கொள்ளனும்! அதற்குத்தான் ஆறாவது அறிவு! இல்லைனா மிருகத்துக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அடுத்தவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாத ஜென்மம் இவர்! முயற்சியாவது செய்கிறாரா, புரிந்துகொள்ள? கடவுளை மட்டும் இவருக்கு புரிந்தது! இல்லை, புரிந்துகொண்டதாக நம்பினார். இவர் குடும்பத்துக்கு செய்யவேண்டிய கடமையை செய்யாமல், எந்த விதமான கெட்ட பழக்கங்களையும் குறைக்காமல், முழுநேரமும் கடவுள் புகழ்பாடினால், அவரை துதித்தால், கடவுள் இவரை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொள்வார் என்று இவராகவே நம்புகிறார் போலும்.

இவருக்கு மனைவி வேண்டும்! எதற்கு? விதவிதமாக சமைத்துப்போட! இவருக்குத்தேவையான நேரத்தில் இவரை இன்பத்தில ஆழ்த்த! ஆனால் இவரால் உடம்பை வளைத்து வேலை பார்க்க முடியாது! குடும்பத்திற்காக எந்தவித தியாகமும் செய்ய முடியாது! சம்பளம் இல்லாமல் எப்படி நான் பில் மற்றும் மார்ட்கேஜ் கட்டுவது? எப்படி சாப்பிடுவது? இவர் வேலைக்குப்போய் இவரோட பகவானா வந்து கட்டுவான், இவர் கொடுக்கிற பூ வழிபாடு,புகழ்ச்சியெல்லாம் கேட்டு? புகழுக்கு மயங்குகிற சாதாரண ஒருவர்தானா கடவுள்? இதென்ன இந்தியாவா? ஒரு அரசாங்க வேலையை வாங்கிக்கொண்டு எல்லோரையும் குறைசொல்லிக்கொண்டு காலம் முழுவதும் குப்பை கூட்ட? வேலை செய்ய முடியலைனா வண்டியைக்கட்ட வேண்டியதுதானே இந்தியாவிற்கு? கஷ்டப்பட்டு சம்பாதிக்க உடல் வளையமாட்டேன் என்கிறது. இதில் எனக்கு கை வலிக்குது, கால் வலிக்குது மூட்டு வலிக்குதுனு நாடகம் வேற! "எண்டெர்"னெட் பாக்க மட்டும் எப்படி முடியுது அப்போ?

இந்த ஆளோட எப்படி வாழ்வது?. சரி உன்னைப்பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டு போய் தொலைய வேண்டியதுதானே? கொஞ்சமாவது சுயமரியாதை வேணாம் இவருக்கு? இதில் கேள்வி வேற! அப்போ ஏன் பிடித்தது? இப்போ ஏன் பிடிக்கவில்லைனு. இதை எல்லாம் பச்சையாக சொல்ல முடியுமா என்ன? அவங்கவங்களுக்கா புரியனும். ஒன்று மட்டும் புரிந்தது இவளுக்கு! இந்த ஆளு இவளையும் வாழ விட மாட்டான், இவனும் வாழ மாட்டான்! சுகன்யாவுக்கு கோபமும், அழுகையுமா வந்தது !

இதே கணவனைத்தான் 25 வருடங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டாள்,சுகன்யா. அதிசயமாக இருந்தது அதை நினைத்தால் இப்போது அவளுக்கு! இவரையா காதலித்தோம் ? இன்று ஒரு இணுக்களவு காதல் கூட எஞ்சி இல்லை அவளிடம்! சுமார் 26 வருடங்கள் முன்பு! ஐ ஐ டி யில் பி எச் டி பண்ணுவதற்காக பயோ கெமிஸ்ட்ரி டிப்பார்மெண்டில் சேர்ந்தாள் சுகன்யா. இவள் சேர்ந்த ஆய்வகத்தில், 5 வருட சீனியர் ரிசேர்ச் ஸ்காலராக இருந்தார் ராகவன். அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தார். இவளுக்கு கோர்ஸ் வொர்க் பண்ணும்போது எல்லாவிதமான சந்தேகங்கள், அசைன்மெண்ட் எல்லாவற்றுக்கும் ராகவன் வழியவே வந்து உதவி புரிந்தார். இவளைவிட நல்ல நிறம்! மேலும் அவரிடம் அழகு, நிதானம் எல்லாமே நல்லாத்தான் இருந்தது அன்று. அவரிடம் கெட்ட பழக்கம் என்று சொன்னால், கொஞ்சம் ஸ்மோக் பண்ணுவார்போல தெரிந்தது. அன்று அது பெரிய தவறாகத்தெரியவில்லை. காதலில் விழுந்தாள் சுகன்யா. அது காதலா? இல்லை என்னவோ ஒண்ணு! அந்த நேரத்தில் நன்றாகத்தான் இருந்தது. இவள் தான் படிக்கபோன பி எச் டி யை முடிக்காமல், பாதியில் விட்டுவிட்டு இரண்டாம் வருடம் படிக்கும்போதே அவரை கல்யாணம் செய்துகொண்டாள். சுகன்யாமேல் அவள் அப்பாவுக்கு பயங்கர கோபம். இவள் பாதியில் படிப்பை நிறுத்தியது சுத்தமாகப்பிடிக்கவில்லை. எண்ணி ஒரு வருடத்தில் அங்கேயே ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொண்டாள். அழகாக மூக்கும் முழியுமாக இருந்தாள் காயத்ரி. பிறகு அவர் மேல்ப்படிப்புக்காக அமெரிக்கா வரும்போது, கணவருடன் சேர்ந்து வந்தாள். இங்கே வந்தவுடன் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ரமேஷ் என்றழைத்தார்கள். அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வாங்கிய பிறகு இவளும் வேலைக்குப்போனாள். நல்லவேளை பி எச் டியை பாதியில் நிறுத்தினாள்! எம் எஸ் க்கு, பி எச் டியை விட வேலை வாய்ப்பு அதிகமாக இருந்தது! வாழ்க்கை ஓரளவு நன்றாகத்தான் போனது ஒரு 15 வருடம். இப்போழுது வளர்ந்து, மூத்தவள் கல்லூரியில் சீனியராக இருக்கிறாள். பையன் ஹைஸ்கூலில் ஜூனியர். அவர்கள் ஓரளவுக்கு இண்டிப்பெண்டெண்ட் ஆக ஆகிவிட்டார்கள்!

பசங்கள் இருவருக்குமே இவளைத்தான் ரொம்ப பிடிக்கும், ஆனால் அப்பா பிடிக்காது என்றில்லை. என்னதான் இருந்தாலும் அப்பா-அம்மா சேர்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு பிடிக்கிறது. அமெரிக்காவில் வளரும் வாழும் பசங்க எப்படி இருப்பார்கள்? சுயநலத்தின் முழு உருவம்! சுயநலமாக இருப்பது தவறு என்றெல்லாம் அமெரிக்காவில் மாரல்ஸ் சொல்லித் தருவதில்லை. ஒரு வேளை அப்படி அவர்களுக்கும் சொல்லித்தந்திருந்தால் அவர்களும் இன்னொரு தேர்ட்-வேர்ல்ட் நாடாக இருப்பார்களோ என்னவோ. அங்கே வளரும் குழந்தைகளுக்கு என்ன மனநிலை? தனக்கு அப்பா அம்மா எல்லாமே தரனும், அவர்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளனும். சரி, அவர்களை படிக்கவைத்து மேலே கொண்டு வந்தாச்சு! அவர்கள் இப்போ இவள் உணர்ச்சியை புரிந்து கொள்கிறார்களா? "அப்பாவை ஏன் வெறுக்கிறாய்?" என்று அவர்கள் கேட்கும்போது இவளுக்கு எரிச்சலாக வந்தது. குழந்தைகளுக்கு என்ன தெரியும், இவளுடைய தேவைகள்? அவர்களுக்கு தெரியுமா, அவருடன் படுப்பதே அருவருப்பாக உள்ளது என்று? மனைவிக்குத்தான் தெரியும் கணவனின் அசிங்கமான அந்தரங்கப்பகுதி. அவர்களிடம் சொல்ல முடியுமா, அவருடன் "தாம்பத்யஇன்பம்" அனுபவிப்பதைவிட ”சுய உதவி” பலமடங்கு இன்பம் தருகிறது என்று? அவர்களுக்குத்தான் இவள் இதை எல்லாம் எடுத்துச் சொல்ல முடியுமா? அப்பா ஊர் உலகத்தைப்போல், சம்பாதித்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்தால், நான் ஏன் இவர்கள் அப்பாவை வெறுக்கிறேன்? எனக்கு காதலிக்க தெரியாதா? இல்லை தேவையே இல்லாமல் ஒருவரை அதுவும் கைப்பிடித்த கணவனை வெறுப்பேனா? பணம் இல்லைனா பிணம்னு தெரியாதா இந்த ஆளுக்கு?

சுகன்யாவுக்கு இன்னொரு சந்தேகம். இந்த ஆள் இவளை பழி வாங்குகிறாரா? ஒரு மாதிரியான சாடிஸ்டா இவர்? யோசித்துப்பார்த்தால் இவர்களுக்குள் பிரச்சினை ஆரம்பித்ததே சுகன்யா அவரைவிட அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன்தான். இவள் அதிகம் சம்பாதிக்கிறாள் என்கிறதால் தான் இப்படி இருக்கிறாரோ ? அதனால்தான் எந்த வேலையும் ஒழுங்காக பார்க்க மாட்டேன் என்கிறாரோ? சரி எது எப்படியோ போகட்டும், விவாகரத்துக்கு சரினு சொன்னால் என்ன? இரக்கமே இல்லாமல் நாந்தான் உனக்கு இந்த வாழ்க்கையே கொடுத்தது என்றல்லவா பேசுகிறான் பாவி! ஆமாம் இவர்தான் இந்த வாழ்க்கை கொடுத்தாரு! இவரால்தான் அமெரிக்கா வந்தேன். ஆனால் இவரை சந்திக்கலைனா நானா பி எச் டி முடித்து வந்து இருப்பேனே! மேலும் இவருக்கு நான் கொடுத்ததெல்லாம்? இப்படி எல்லாம் கணக்குப் பார்க்க முடியுமா?

சுகன்யாவின் தோழிகள் இவள் உணர்வுகளை புரிந்தாலும், அவர்களால் எதுவும் பெரிதாக உதவி செய்ய முடியவில்லை. உன் வாழ்க்கை, நீதான் முடிவு பண்ணனும் என்று சொல்லாமல் சொன்னார்கள். இந்திய கலாச்சாரத்தை அமரிக்காவில் வந்து வாழ்ந்து காக்கும் பெரியமனிதர்கள் சிலர், சுகன்யாவிடம் "இந்த வயதில் இதென்ன விளையாட்டு?" என்று இவள் ஏதோ தேவையே இல்லாமல் விவாகரத்து கேட்பதுபோல் பேசுகிறார்கள். அவளுக்கு கோபமாக வந்தது! யார் சொன்னா எனக்கு வயதாகிவிட்டது என்று? யாருடைய அட்வைஸை கேட்டாலும் எரிச்சலாக வந்தது அவளுக்கு.

ஒரு சில நலம்விரும்பிகள் நேரடியாகவே சுகன்யாவை பயமுறுத்தினார்கள், “இவள் விவாகாரத்துக்குப்போனால் தற்கொலை பண்ணிகொள்வார் ராகவன் என்று” ஆமாம், இரண்டு முறை அப்படி அவர் நாடகம் ஆடியதும் உண்டு. நான் சம்பாதிக்க மாட்டேன், தினமும் 4 மணி நேரம் பூஜை செய்வேன், என்னால் போர்ன் பார்ப்பதையோ அல்லது ஸ்மோக் பண்ணுவதையோ, வேறு எதையுமே தியாகம் பண்ண முடியாது என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டியதுதானே? ராகவனுக்கு இவள் மேல் அளவில்லாத ஒருதலைக் காதலாம்! தன்னைக் காதலிக்காத, மேலும் அடியோட வெறுக்கும் மனைவியை இவர் எப்படி இன்னும் காதலிக்க முடியும்? புரியவே இல்லை அவளுக்கு! ஆனால் இவர் தற்கொலை பண்ணிக்கொள்வாரோ என்று சுகன்யாவே பயந்தாள். காரணம்? இவள் காதல் கிடைக்கவில்லையே என்ற விரக்திலாம் இல்லவே இல்லை! இவளை பழிவாங்க வேண்டும் என்கிற கேவலமான எண்ணம். அப்படி நடந்தால் ஊர் உலகம் இவருக்கு சிலையும் அவளுக்கு கொடுமைக்காரி பட்டமும் கொடுக்கும் என்கிற கேவலமான எண்ணத்தினால் என்று நம்பினாள், சுகன்யா.

எனக்கு என் வாழ்க்கையை என் இஷ்டம்போல் வாழ சுதந்திரம் இல்லையா? . இதுதான் உலகமா? இதுதான் வாழக்கையா? என்கிற பழைய பாடலுக்கு இன்று அர்த்தம் புரிந்தது அவளுக்கு. பிடிக்காத ஒருவருடன் வாழ்வது நரகம்தான் அவளைப்பொருத்தவரையில். எதற்காக இப்படி இவரோட அர்த்தமில்லாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழனும்? இந்த பாழாப்போன உலகத்திற்கு எனக்காக நான் வாழ ஆசைப்படுவது ஏன் பெரிய தப்பாத்தெரியுது? நான் நிம்மதியாக இருக்கனும் என்று நினைப்பது பேராசையா? அவளுக்கு புரியவில்லை! சுகன்யாவுக்கு வாழ்க்கை கசந்தது. "மங்கை உள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது?" என்பது சும்மா வெறும் அர்த்தமில்லாத பாடல் வரி- சுகன்யாவைப் பொருத்தமட்டில். காஃபியை குடித்துவிட்டு புறப்பட்டாள் அவள் வீடு என்கிற நரகத்திற்கு! தன் உணர்வுகளை புரியாத மதிக்கத்தெரியாத, சுயமரியாதையே இல்லாத, அந்த சுயநலவாதியுடன் தொடர்ந்து வாழ!

diclaimer: இது கற்பனைக் கதைதான்!

குறிப்பு: என்னுடைய அபிமான விமர்சகர், இதை அவ்வளவு ரசிக்கவில்லை. இதென்ன கதையா கட்டுரையா என்று கேட்டு விழிக்கிறார். அமெரிக்காவில் நிறைய விவாகரத்துக்கு காரணம் பணப்பிரச்சினை, மற்றதெல்லாம் பிறகுதான்.

ஒரு பகிரங்க கடிதம்

அன்புள்ள பாட்டிமாவுக்கு,

தமிழ் மணத்தில் இந்த வாரம் யாருக்காவது பகிரங்க கடிதம் எழுத வேண்டிய வாரமாம். என் ப்ளாகில் யாருக்கு கடிதம் எழுதுவது என்று தெரியாமல் குழம்பினேன். சொல்ல நினைப்பதை யாராக இருந்தாலும் இப்போதெல்லாம் நேரடியாகவே சொல்லி விடுகிறேனே? கடிதம் எழுதும் அவசியம் இல்லை. ப்ளாக் என்றால் என்னவென்று கேட்பீர்கள், ப்ளாக் என்றால் வலைப்பூ(அதென்ன மல்லிப்பூ என்றெல்லாம் குறுக்குக்கேள்வி கேட்கக்கூடாது, சொல்வதை கேட்டுக்கொள்ளவும்). ஏற்கெனவே காலம் ரொம்ப கடந்துவிட்டது, அடுத்த வாரம் உங்க நினைவு நாள் வேறு வருகிறது.

நீங்கள் மறைந்து இத்தனை வருடமாகிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை, நேற்று தான் உங்கள் கை பிடித்து கவனமாக ரோட்டை க்ராஸ் பண்ணிய மாதிரி இருக்கிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது பார்த்தீர்களா? நேற்று கூட கடையில் ஒரு அமரிக்க சிறுமியும், ஒரு பாட்டியும் ஜோடியாக ஷாப்பிங் பண்ண வந்தார்கள். அந்த சிறுமி பாட்டியை கட்டிப்பிடித்து
"I love you so much Grandma" என்றாள், எனக்கு உடனே உங்கள் நினைவு வந்துவிட்டது. கொஞ்ச காலமாகவே உங்களைப்பற்றி நிறைய நினைக்கிறேன். அந்த அமரிக்க சிறுமி மாதிரி எல்லாம் நாம் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக்கொண்டது இல்லை. எனக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும் என்பதை ஒருபோதும் உங்களுக்கு தெரிவித்ததில்லை. காரணம் எல்லாம் பெரிதாக எதுமில்லை, அன்பை வார்த்தைகளில் தெரிவிக்கும் பழக்கம் நமக்கு இல்லாததே காரணம். சொல்லாமல் விட்டதை இப்போதாவது சொல்லவே இந்த பகிரங்க கடிதம்.

எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து சாப்பாடு ஊட்டியது நீங்கள் தான். அம்மாவுக்கு நேரம் இருந்தால் கூட உங்கள் உரிமையான "சாப்பாடு ஊட்டுதலை" ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். இட்லி, நெய், சர்கரை கலந்த ஒரு கலவையை காலையில் 7 மணிக்கு ஊட்ட ஆரம்பித்து 10 மணி வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தெருவில் போகும் வாகனங்களையும், மனிதர்களையும், விலங்குகளையும் வேடிக்கை காட்டி, கதை சொல்லி நீங்கள் ஊட்டுவது அரைகுறையாக நினைவு இருக்கிறது. மீண்டும் 12 மணிக்கு மதியம் சாப்பாடு ஊட்டும் ட்யூட்டி ஆரம்பித்துவிடும். என் மீது எத்தனை அக்கறை உங்களுக்கு? இது போல என் மேல் இத்தனை அக்கறையுள்ள ஒரு ஜீவன் என் வாழ்க்கையில் கிடைக்கப்போவதே இல்லை! ஒரு நாளும் இதற்காக நீங்கள் சலித்துக்கொண்டதில்லை. மாறாக, என் தொண்டையில் உணவை விழுங்க முடியாமல் ஏதாவது பாதிக்கப்பட்டிருக்கிறதோ என்று ரொம்ப கவலைப்பட்டிருக்கிறீர்கள்.

ஒரு நாள் எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போது, வீட்டில் யாரும் இல்லாத சமயம் ஆட்டோவில் என்னை, சைல்ட் ஸ்பெஷலில்ஸ்ட் டாக்டர். குமாரசாமியிடம் அழைத்து சென்று, "என் பேத்தி வயத்தில இருந்தப்போ மருமகள் சரியா உடம்பை பார்த்துக்கல, அவ தொண்டைக்குழாயில் ஏதோ அடைப்பு இருக்கு, உடனே படம் பிடிச்சு(எக்ஸ்ரே) பாரு" என்று வம்பு பண்ணி இருக்கிறீர்கள். டாக்டர் மேலோட்டமாக சோதனை செய்து விட்டு "ஒன்னும் இல்லைமா, குழந்தைக்கு பசிக்கும் போது ஊட்டுங்க போதும்" என்று சொன்னதற்கு, "படம் பிடித்து ஆப்பரேஷன் பண்ணாமல் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை" என்று அடம் பிடித்து கடைசியில் அப்பா வந்து உங்களை சமாதானப்படுத்தி அழைத்துப்போனாராம். அதை இன்னும் குடும்ப நிகழ்ச்சிகளில் சொல்லி சிரிக்கிறார்கள். உங்களின் வயதான காலத்தில் அத்தனை தொல்லை கொடுத்ததற்கு மன்னிக்கவும்.

சுருக்கம் விழுந்த முகத்துடனும், நடுங்கும் கரத்துடனும், பொக்கை பல் சிரிப்புடனும் இருக்கும் நீங்கள் எனக்கு பேரழகியாக தெரிவீர்கள். அழகு என்ன அழகு? "இப்படி இருந்தால் தான் அழகு" என்ற பிம்பத்தை மீடியாக்கள் எங்கள் எண்ணங்களில் திணிக்கின்றன. அதையே நாங்களும் நம்புகிறோம். உண்மையான அழகு எப்படி இருக்கும்? உங்களை மாதிரியே இருக்கும்! நம்ப மாட்டீர்கள் தெரியும், இருந்தாலும் விளக்குகிறேன். தாத்தாவின் மேல் உங்களுக்கு எத்தனை அன்பு? அவர் மறைந்த பிறகு அவருக்கு பிடித்த உணவுகளை சமைப்பதையும், சாப்பிடுவதையும் அடியோடு நிறுத்திவிட்டீர்கள். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வெறும் நூல் புடவை. இதெல்லாம் வேண்டாம் என்று எத்தனை முறை போராடினாலும் நீங்கள் கேட்கவே இல்லை.

தாத்தாவை தவிர வேறு யாரையாவது நீங்கள் மனதளவிலும் நினைத்ததுண்டா? ஏதாவது சினிமா ஹீரோவை டிவில் நான் அழகு என்றால் உடனே நீங்க, "இது என்னடி அழகு? அந்த காலத்துல தலைப்பாகையும், கோட்டும், வேட்டியுமா உங்க தாத்தா வேலைக்கு கிளம்பினார்னா ஊரே திரும்பிப்பார்க்கும்" என்று புளங்காகிதப்படுவீர்கள்.தாத்தாவின் பிறந்தநாள், திவசம், உங்கள் கல்யாண நாள் - இப்படி எது வந்தாலும் தாத்தா படத்தை பார்த்து, பார்த்து அன்றெல்லாம் அழுதுக்கொண்டே இருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள், இப்படி ஒரு மனைவியை இந்த காலத்தில் யாராவது கனவிலும் நினைத்துப்பார்க்க முடியுமா? நீங்க தான் உண்மையான 'கனவுக்கன்னி' இல்லையா? இப்போதெல்லாம் காதல், கல்யாணம் எல்லாம் ஏறக்குறைய வியாபாரம் ஆகிவிட்டது!

உலகத்தில் யாராக இருந்தாலும் உங்கள் குழந்தையாக நினைக்கும் அன்பு யாருக்கு வரும்? பழுத்த ஆன்மீகவாதியான உங்களுக்கு எத்தனை சகிப்புத்தன்மை? நாகூர் ஹனீஃபாவின் கேசட்டுகளை வாங்கி விருப்பமாக கேட்பீர்கள், ஏதாவது கிறிஸ்தவ மிஷ்னரிகள் கொடுக்கும் துண்டு சீட்டை வாங்கி முழுக்க படிப்பீர்கள், பைபிள் கொடுத்தால் அதையும் வாங்கி படிப்பீர்கள். நீங்கள் இதற்கெல்லாம் முகம் சுளித்ததே இல்லை. கேட்டால், "ராமர், கிருஷணர் மாதிரி அல்லாவும், இயேசுவும் கூட ஒரு சாமி" என்பீர்கள். இப்போது நடப்பதை எல்லாம் பார்த்து ரொம்ப வருத்தப்பட்டிருப்பீர்கள். ராமஜென்ம பூமி, கோத்ரா சம்பவம், குஜராத் வன்முறை, தொடர் குண்டுவெடிப்பு, இஸ்ரேல் -பாலஸ்தீன் பிரச்சினை, அமரிக்கா - அரபு நாடுகள் பிரச்சினை, மதத்தீவிரவாதம் என்று உலகெல்லாம் இரத்த ஆறு ஓடுகிறது. "பாவம், யார் பெற்ற பிள்ளைகளோ, சாகும் போது எப்படி எல்லாம் துடித்தார்களோ" என்று கண்ணீர் விட்டு, இறந்து போனவர்களின் மன சாந்திக்காக பூஜையறையில் மணிக்கணக்காக பிராத்தனை செய்ய நீங்கள் இல்லை.

மருமகள் மீது எத்தனை அன்பு உங்களுக்கு? அம்மாவை ஊக்கப்படுத்தி டிகிரி முடிக்க வைத்து, படிக்கும் போது தொந்தரவு பண்ணாமல் இருக்க எங்களை நீங்களே கவனித்து,தேர்வு நேரத்தில் அம்மா கண்விழித்து படித்தால் தேநீர் போட்டுக்கொடுத்து - அதை எல்லாம் நினைத்தால் வியப்பாக இருக்கிறது. "பொம்மனாட்டிக்கு படிப்பு ரொம்ப முக்கியம்" என்று அடிக்கடி சொல்லுவீர்கள். நீங்கள் பள்ளிக்கு போகவில்லை என்றாலும், தாத்தாவிடம் இருந்து தமிழ்-ஆங்கிலம் இரண்டையும் உங்கள் சொந்த முயற்சியில் சரளமாக எழுதப்படிக்க தெரிந்துக்கொண்டதாக கேள்விப்பட்டேன். வெள்ளிக்கிழமை அம்மா அலுவலகம் விட்டு வந்தால், வேறு உடை மாற்ற சொல்லி, தலை பின்னி, தலை நிறைய மல்லிப்பூ வைத்து, ஹாலில் வம்பளத்துக்கொண்டிருக்கும் அப்பாவின் நண்பர்களை உரிமையுடன் துரத்திவிட்டு, அம்மாவையும்-அப்பாவையும் நைட் ஷோ சினிமாவுக்கு அனுப்பும் உங்கள் வெள்ளை மனதை என்ன சொல்லி பாராட்டுவது? ஒருவேளை நீங்கள் இருந்திருந்தால் அவர்களிடையே இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது.

"வீட்ல இருக்கற தயிரை எல்லாம் மோராக்கி போற வரவங்களுக்கு எல்லாம் தானம் பண்ணினால், வீட்டுக்கு என்ன மிஞ்சும்?" என்று அம்மா உங்களின் தாராளக்குணத்தை குறை கூறினால் உடனே கோபமாக, "உங்கப்பா வீட்ல இருந்தா தயிர் கொண்டுவர? தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுத்தால் புண்ணியம்.இந்த காலத்து பொண்ணுங்க ரொம்ப சுயநலவாதிகளா இருக்கீங்க" என்று கண்டிக்கவும் தயங்கியதில்லை(இன்னும் நீங்க எங்களைப்போன்ற மார்டன் பெண்களை எல்லாம் பார்த்தால் என்ன சொல்லுவீங்களோ?).எனக்கு தெரிந்தவரையில், வீட்டுக்கு வந்தவர்களுக்கு காபியோ, டிஃபனோ கொடுக்காமல் நீங்கள் அனுப்பியதில்லை. நீங்கள் இறந்த வீட்டில், அப்பாவை விட அதிகமாக அழுதது அம்மா என்பது உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

அந்த நாட்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மூளையில் கட்டி வந்து அதனால் முழு உடலும் செயலிழந்து, நினைவு திரும்புவதும், தப்புவதுமாக ஒரு 10 நாட்கள் மருத்துவமனை படுக்கையில் நீங்கள் பட்ட பாடு! அப்பாவிடம் மெல்லிய குரலில் "என்னை விட்டுருப்பா, முடியல" என்று நீங்கள் சொல்லியதை அலட்சியம் செய்து தொடர்ந்து சிகிச்சை கொடுத்ததில் பலன் ஏதுமில்லை. மரணத்திலும் வழக்கம் போல நீங்கள் தான் வென்றீர்கள். எனக்கு அடிக்கடி குற்ற உணர்ச்சி வரும், உங்களை நான் இன்னும் நன்றாக கவனித்துக்கொண்டிருக்கலாமோ? உங்களிடம் இன்னும் அன்பாக இருந்திருக்கலாமோ? Did we take you for granted?

"இறந்தவர்கள் ஆவியாக வந்து நடப்பதை எல்லாம் பார்ப்பார்கள்" என்று அடிக்கடி சொல்லுவீர்கள். எனக்கு அதில் எல்லாம் ரொம்ப நம்பிக்கை இல்லை. நீங்கள் படித்தாலும்,படிக்கப்போவதில்லையென்றாலும் என்னுடைய மனதிருப்திக்காக கடிதம் எழுதுகிறேன். நெஞ்சம் நிறைய நினைவுகளோடு, உங்களின் கண்ணாடி,கைக்கடிகாரம், பழையபுடவைகள் போன்றவற்றை அப்பாவிடம் கேட்டு வாங்கி கவனமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன். உங்களுடைய பேத்தியாக பிறந்ததில் ரொம்ப பெருமைப்படுகிறேன். வருங்காலத்தில், உங்களின் அன்பு, பொறுமை, இரக்கம், அறிவு, போன்ற நற்பண்புகளில் பாதியாவது கொண்ட பெண்மணியாக மாறினேன் என்றால், அதையே என் வாழ்நாள் சாதனையாக கருதுவேன்.


இப்படிக்கு உங்கள் அன்பு பேத்தி,

கயல்விழி

Tuesday, August 12, 2008

நீங்கள் HIV பாசிடிவா?

பயந்துவிடாதீர்கள்!

Please dont take it offensively!

எனக்கு ரொம்ப நாளா ஒரு கவலை! நம்ம ஊரில் இப்போ கல்யாணத்திற்கு முன்னால் செக்ஸ், கல்யாணத்திற்கு அப்புறம் மல்டிப்பிள் பார்ட்னெர்ஸ் என்றெல்லாம் போய்க்கொண்டே இருக்கு.

என்ன “முற்போக்குவாதிகள்” “அதனால் என்ன தப்பு? ” என்கிறீர்களா?

* இல்லைங்க, நாம் முன்னேறுகிறோம் என்று ஒரு பக்கம் நீங்கள் பெருமைப்பட்டாலும் இன்னொரு பக்கம், நம்ம பாதுகாப்பான உடலுறவு முறையை பின்பற்றுகிறோமா? என்கிற கவலை எனக்கு.

* நம்ம ஊரில் உள்ள இளைய சமுதாயம் மற்றும் “செக்ஸ் முற்போக்குவாதிகள்” இந்த மாதிரி "கேசுவல் செக்ஸ்" வச்சிக்கிறவங்க எல்லாம் கவனமாக ஆணுறை பயன்படுத்துகிறார்களா? இல்லை அதெற்கெல்லாம் நேரம் அமைவதில்லையா, கிடைப்பதில்லையா ?

* மல்டிப்பிள் செக்ஸ் பார்ட்னெர்ஸ் வைத்துள்ளவர்கள், முக்கியமாக ஆண்கள், எப்போவாவது எச் ஐ வி டெஸ்ட் பண்ணுவதுண்டா? இல்லை அதெல்லாம் நமக்கு வராதுனு இருக்கிறார்களா?

ஒரு 10 வருடம் முன்னால், எச் ஐ வி பாஸிடிவ் கேஸ் தமிழ் நாட்டில் அதிகமாக இருப்பதாக படித்தேன். ஆனால் இன்றைய தமிழ்நாட்டு நிலைமை என்ன?

இதைப்பற்றி கொஞ்சம் பேசலாமே?

ஒரு முக்கியமான விசயம்! எச் ஐ வி, இரத்த பறிமாற்றத்தில், மருத்துவ கவனக்குறைவில் பரவுவதைப்பற்றி இங்கே நான் கவனம் செலுத்த விரும்பவில்லை! இங்கே உடலுறவு மூலமாக பரவுவதைப்பற்றி மட்டும் பேசுவோம்!

நான் என்ன நினைக்கிறேன் என்றால்,

* நம்ம ஊரில் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு, ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்பவர்கள், கல்யாணம் செய்வதற்கு முன்னால், ஜாதகத்தோட HIV test result பரிமாறிக்கொள்ளனும்!

* ஒன்றுக்கு மேற்பட்ட செக்ஸ் பார்ட்னர்கள் வைத்துள்ளவர்கள் ஆணுறை கட்டாயம் பயன் படுத்தனும்!

* நம்ம அரசாங்கம் ரேசன் கார்டுக்கு மாதம் மாதம் இலவசமா எல்லோருக்கும் ஆணுறை சப்ளை பண்ணனும்!

இல்லை, HIV/AIDS அப்படி ஒண்ணும் தமிழ்நாட்டில் "major threat" இல்லையா? நான் தான் பெரிது படுத்துகிறேனா? அப்படியென்றால் என்னுடைய அறியாமையை போக்குங்கள்! என்னை மன்னியுங்கள்!

Monday, August 11, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 6

நம் குடும்பத்தில் மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடந்தது? என்று சுயபச்சாதாபத்தில் மூழ்கி இருந்த எனக்கு, டிலோரிஸின் வாழ்க்கை ஒரு நல்ல eye opener. ஒரு சிறு பெண்ணுக்கு என்னென்ன துன்பம் வரக்கூடாதோ அத்தனையும் அனுபவித்தவர். அவர் தொடர்ந்து சொன்னவை அதிர்ச்சி ரகம், என்னால் முடிந்ததை மொழிபெயர்த்து எழுதுகிறேன், மீதி உங்கள் கற்பனைக்கு.

"அப்பா குடித்துக்கொண்டே இருக்கும் போது பக்கத்து வீட்டு பெண் வருவாள், அவளும் திருமணமானவள் தான். கணவன் வேலைக்கு போன பின் எங்க வீட்டுக்கு வந்துவிடுவாள்"

லேசாக தயங்கியப்படி, "பிறகு அப்பாவும், அந்த பெண்ணும் என் கண் முன்னாலயே..."
சொல்லும்போதே டிலோரிஸின் கண்கள் கலங்கியது.

"அருவருப்பினால் பொறுக்கமுடியாமல் தான் தலையை வேறு பக்கமாக திருப்பிக்கொள்வேன். அப்பா என் முகத்தை தன் பக்கம் வலுக்கட்டாயமாக திருப்பி அந்தக்காட்சியை பார்க்க சொல்லி வற்புறுத்துவார். 'இது தான் உனக்கு ஹோம்ஸ்கூல் பாடம்' என்று கோணலாக சிரிப்பார்"

"இவர்கள் இந்த நிலையில் இருக்கும் போதே அந்த பெண் குடிபோதையில் மயங்கிவிடுவாள். அவருக்கு அடங்காமல் வெறிப்பிடித்த மிருகம் மாதிரி என்னை சேரில் உட்கார வைத்து, வலுக்கட்டாயமாக என் வாயை திறந்து...."

"முடிந்த பிறகு மட்டுமே அப்பா என்னிடம் கொஞ்சம் அன்பாக இருப்பார். என் கையில் இரண்டு டாலர் கொடுப்பார், என்னுடைய நீல கண் தேவதையே(My blue eyed angel) என்று கொஞ்சுவார். அந்த பணத்தை வாங்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த மிக்டானல்ட்ஸுக்கு ஓடிப்போய் பர்கர் வாங்கி சாப்பிடுவேன். உணவை மெல்லும் போது வாயெல்லாம் ரொம்ப வலிக்கும்"

இப்போது டிலோரிஸ் குலுங்கி, குலுங்கி அழத்தொடங்கினார். என்ன செய்வது என்று தெரியாமல் அவரை என்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டே கேட்டேன்- "நீ ஏன் அம்மாவிடம் சொல்லவில்லை?"

டிலோரிஸ் சுதாரித்துக்கொண்டு விரக்தியாக, "எத்தனையோ முறை சொல்ல முயற்சி பண்ணினேன், அம்மாவுக்கே அரைகுறையாக நடப்பதெல்லாம் தெரியும். ஆனால் அவளுக்கு கணவனை எதிர்க்க பயம். இயலாமையில் என்னை தான் "ஹோர்(விபச்சாரி)" என்று திட்டுவாள், அடிப்பாள். அம்மாவும் என்ன செய்வாள், பாவம்! கடுமையான வேலை, குடும்ப கஷ்டம், இடையில் நான் வேறு".

ஒரு அம்மா இப்படி எல்லாம் செய்வாளா என்று எனக்கு வியப்பாக இருந்தது. பின்னர் நான் படித்து தெரிந்துக்கொண்டது: ஒரு குடும்பத்தில் பாலியல் அத்துமீறல் நடப்பது எப்படியும் அந்த குடும்பத்தலைவிக்கு தெரிந்துவிடுமாம், தெரிந்தும் தெரியாதது போல இருப்பார்களாம்(Enablers). எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. கணவனைப்பற்றிய பயமும், குடும்ப கட்டமைப்பை குலைக்க விரும்பாமையும் காரணமாக இருக்கலாம். அதற்காக சொந்த மகளையே பலிகொடுக்க துணிகிறார்கள். வெளிநாட்டிலேயே இப்படி என்றால், நம் நாட்டில் பெண்களின் நிலையை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது!

"எத்தனை முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன் தெரியுமா? ஏதோ கடவுள் அருளால் ஒவ்வொரு முறையும் தப்பித்தேன்". தன் கழுத்தில் இருந்த மதச்சின்ன டாலரை இரண்டு கையாலும் கெட்டியாக பிடித்துக்கொண்டார். மெக்சிகன் ஆரிஜினில் வருபவர்கள் பெரும்பாலும் தீவிர மத நம்பிக்கையாளர்கள்.

"அப்பா பார்க்காத போது நானும் குடிக்க ஆரம்பித்தேன். உணர்வுகள் மரத்துப்போகும் அளவு குடித்தால் அப்பாவின் வக்கிர செயல்கள் உறைக்கவில்லை, வலிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மதுவுக்கு நானும் அடிமையாகிவிட்டேன்! இப்படியே காலம் ஓடிவிட்டது. எனக்கு 17 வயது, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அம்மாவின் கைப்பையில் இருந்து கொஞ்சம் பணம் திருடிக்கொண்டு ஒரு பாருக்கு போனேன், அங்கே தான் என் கணவரை சந்தித்தேன்". டிலோரிஸ், தன் கணவரை பற்றி சொல்லும்போது, அவர் முகம் உடனடியாக பிரகாசமடைந்தது.ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டமாதிரி!

"அவர் ஒரு பிஸ்னஸ் மேன், மனைவியை இழந்தவர். அவரை பார்த்தவுடனே எனக்கு பிடித்துவிட்டது. அவரோடு பேசும் சுவாரஸ்யத்தில் குடிக்க கூட மறந்துவிட்டேன். அவர் கூட இருந்தால் என் துன்பமெல்லாம் மறைந்துவிடும் என்று தோன்றியது. என்னைக்காப்பாற்ற கடவுள் அனுப்பிய தேவதை என் கணவர். என்னை வீட்டுக்கு கொண்டு போய் விடும்போது என்ன சொன்னார் தெரியுமா?"

"என்ன சொன்னார்?"

"'இன்று உலகத்திலேயே மிக அழகான,அன்பான பெண்ணை சந்தித்தேன்' என்றார். இத்தனைக்கும் அன்று நான் துளி மேக்கப் போடவில்லை, ஹைஸ்கூல் கூட முடித்திருக்கவில்லை!".இதை சொல்லும் போது டிலோரிஸின் முகத்தில் வெட்கம், பெருமிதம் எல்லாம் கலந்த உணர்வுகள்.

"திருமணத்துக்கு பிறகு எல்லாம் சரியாப்போச்சா டிலோரிஸ்?"

"அது தான் இல்லை, திருமணத்துக்குப் பிறகும் என் கடந்த காலம் என்னை விடாமல் துரத்தியது"


- நினைவுகள் தொடரும்

Thursday, August 7, 2008

கூத்தாடிகளின் அரசியலும், ஆட்டு மந்தை மக்களும்!

இந்த பதிவை கடுங்கோபத்தில் எழுதுகிறேன். திரைப்படத்தை கண்டுபிடித்த லூமியர் சகோதரர்கள், திரைப்படத்துறையினர், முக்கியமாக யார் எப்படி ஏமாற்றினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாத மக்கள் என்று அனைவர் மேலும் கோபம் கோபமாக வருகிறது. திரைப்படம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் நலமாக இருந்திருக்கும். திரைப்படத்துறை மூலமாக நாம் அடைந்தது என்ன? ஒன்றுமே இல்லை! அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரைக்கும் அதே கதை: காதல், காதலுக்கு வில்லன் - வில்லி, நாலு சண்டை, ஆறு பாட்டு கடைசியில் காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள் - இந்த same old கதைக்கு விதிவிலக்காக வந்த தமிழ்ப்படங்கள் ரொம்பக்குறைவு.

இந்த 'காதல்' என்ற அரைத்த மாவை விதம் விதமாக அரைத்தாகிவிட்டது. பார்த்து காதல், பார்க்காமலே காதல், பொருந்திய காதல், பொருந்தாக்காதல், ஏழை காதலி - பணக்கார காதலன், பணக்கார காதலி - ஏழை காதலன், வேண்டாம் என்று ஒதுக்கி, நாலு அறை கொடுத்தால் கூட மானமே இல்லாமல் ஹீரோ பின்னால் ஓடும் ஹீரோயின்கள் etc etc. நடுநடுவே வன்முறை, ஆபாசம், ஜாதிப்பற்று, மதம்,அரசியல், போலீஸ் போன்ற இதர மலிவு மசாலாக்கள்.

தரமான தமிழ்ப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தரமான தமிழ்ப்படம் என்று நாம் நினைப்பவைகளும், அறிவுஜீவி இயக்குநர்/நடிகர்களாக கருதப்படுபவர்களும் கூட ஹாலிவுட் அல்லது வேற்று மொழி படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை/காப்பியடித்தவர்கள் என்பது கசப்பான உண்மை. யாருடைய படத்தையோ காப்பி அடித்துவிட்டு, வெட்கமில்லாமல் டிவியில் 'என் படம்' என்று பேட்டி பொடுப்பார்கள், விளம்பரப்படுத்திக்கொள்வார்கள்!

இதெல்லாம் கொஞ்ச காலமாகவே என்னிடம் இருந்து வந்த எண்ணங்கள், தமிழ் சினிமா பார்ப்பதையே விட்டுவிட்டேன். நண்பர்கள் யாராவது சினிமா பற்றி பேசினால் கூட தவிர்த்து விடுவேன். என்னுடைய தற்போதைய கோபத்துக்கு காரணம், ரஜினியின் மன்னிப்பு கடிதம் மட்டுமல்ல. ரஜினி என்ற சுயநலவாதியின் சாமியார் முகமூடி பலமுறை கிழிந்தாகிவிட்டது. அதைக்கேட்டு கேட்டு நம்மில் பலருக்கு சலித்துவிட்டது! ஆனால் ரஜினி மட்டும் தான் இப்படியா? உண்ணாவிரதத்தின் போது ஆவேசமாக ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி சொற்பொழிவாற்றிய சத்யராஜ் இதில் ரஜினிக்கு சப்போர்ட். சத்யராஜ் மட்டும் பல்டி அடிக்கவில்லை- பாரதிராஜா, சீமான் போன்றவர்களும் அப்படியே. இவர்களை எல்லாம் நம்பிய நம்மை என்ன செய்தால் தகும்? பிஸ்னஸ் என்றவுடன் அனைவரும் கைகோர்த்துக்கொள்கிறார்களே?

இந்தக்கூத்தாடிகளை நம்பி இவர்களிடம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு அரசியலையே ஒப்படைத்தாகிவிட்டது. சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கும், மக்களுக்குக்காக உழைத்தவர்களும், படித்தவர்களுக்கும் போக வேண்டிய முக்கிய அரசியல் பதவிகளை, படத்தில் மட்டும் ஏழை பங்காளியாக நடித்தவர்களுக்கும், அவர்களின் பெண் நண்பர்களுக்கும், கதை வசனம் எழுதுபவர்களுக்கும், ஏன், காமெடியன்களுக்கு கூட கொடுத்தாகி விட்டது. அவர்கள் ஆட்சி செய்த/செய்யும் அழகை(!) ரசித்தாகிவிட்டது. இனி என்ன? திரும்பவும் கேப்டன், விஜய், கார்த்திக் போன்ற அடுத்தச்சுற்று ஏமாற்றுக்காரர்களுக்கு தயாராகப்போகிறோமா அல்லது இனியாவது மாற்றம் வருமா?

சினிமாவினால் நாம் இழந்தது ஏராளம். நல்ல புத்தகங்களைப்படித்தல், சிந்தித்தல், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுதல், உடற்பயிற்சி போன்ற நல்லதெல்லாம் தொலைந்து போய் நாம் couch potato ஆகி வெகு காலமாகிறது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, சினிமாவுக்கும், தொலைக்காட்சிக்கும், நடிகர்களுக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைப்பது இயலாத காரியம் இல்லை. நாம் ஆட்டு மந்தையாகவே தொடர்ந்து இருக்கப்போகிறோமா அல்லது மனிதர்களாகி திருந்தப்போகிறோமா என்பது நம் கையில் இருக்கிறது.

Monday, August 4, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 5

எனக்கு எதை பார்த்து வியப்பாக இருக்கிறது தெரியுமா? இந்த பதிவுகளைப்படித்து மற்ற பதிவர்கள் அதிர்ச்சி அடைவது. என்னுடைய அனுபவத்தைப்போல உலகில் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது/ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது, சொல்லப்போனால் என்னை விட பல மடங்கு அதிகமாக!

உதாரணத்துக்கு இந்த நினைவலைகளின் பின்னூட்டத்தில் துளசி டீச்சர் தன்னுடைய தந்தையினால் அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஏற்பட்ட வேதனையை பகிர்ந்துக்கொண்டிருப்பார்கள். அது போன்ற அனுபவங்கள் என் அனுபவங்களை விட பலமடங்கு கொடியவை. அந்த ஒரு முறை சறுக்கலைத்தவிர, அப்பா வேறு எந்த தவறும் செய்ததாக நினைவில்லை(அல்லது முட்டாள்தனமான தவறுகள் செய்து மாட்டிக்கொள்ளவில்லை). காலையில் இருந்து மாலை வரை குடும்பத்துக்காக தன்னைத்தானே வருத்திக்கொண்டு உழைக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு குடும்பத்தலைவர்களுள் அவரும் ஒருவராகவே இருந்தார். நான் இதை எல்லாம் எழுதுகிறேன், மற்றவர்கள் எழுதுவதில்லை. சமுதாயம் என்ன நினைக்குமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.

இதை விடவும் பயங்கரமான அனுபவங்கள் சில பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது, நாம் கற்பனை பண்ணிக்கூட பார்க்க தயங்கும் பயங்கரம்! உதாரணத்துக்கு திருமதி. டிலோரிஸ். என்னுடைய இருப்பிடத்துக்கு அருகிலேயே வசிக்கிறார் இந்த அமரிக்க-மெக்சிகன் பெண்மணி. எனக்கு உடற்பயிற்சி செய்வது ரொம்ப பிடிக்கும். கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை உள்ள ஜிம்மை விட, சுதந்திரமாக பார்க் போன்ற பொது இடங்களில் ஜாக் பண்ணுவதே பிடிக்கும். அங்கே பலரும் ஜாக் பண்ணிக்கொண்டிருப்பார்கள்,அப்படித்தான் டிலோரிஸ் எனக்கு அறிமுகமானார். டிலோரிஸ்(Delores) என்றால் ஸ்பானிஷ் மொழியில் துன்பம் அல்லது வருத்தம் என்று அர்த்தமாம். அவருடைய வாழ்க்கைக்கதையை கேட்ட பிறகு, 'என்ன பொருத்தமான பெயர்'! என்று நினைத்து வியந்தேன்.

சிரித்த முகம், சுருள் சுருளான பொன்நிற முடி, நீலக்கண்கள் - டிலோரஸை முதன் முதலில் சந்தித்தபோது நான் முதலில் கவனித்தது. அதை சொன்னால், "இல்லை எனக்கு உன்னுடைய ப்ரவுன் முடியும், ப்ரவுன் நிறக்கண்களுமே ரொம்ப பிடித்திருக்கிறது" என்று சொல்லி சிரிப்பார். ஒரு 40- 45 வயது இருக்கும், அந்த வயதிலும் ரொம்ப ஃபிட்டாக இருந்தார், அவர் சொல்லவில்லை என்றால் எனக்கு அவருடைய வயதே தெரிந்திருக்காது. தினமும் பார்த்துக்கொள்வதால், ஒருவருக்கொருவர் துணையாக ஜாக் பண்ண ஆரம்பித்தோம்.

டிலோரஸை பல நேரம் அந்த பகுதியில் பார்த்திருக்கிறேன். நான் அவசரமாக வேலைக்கு ட்ரைவ் பண்ணிக்கொண்டிருக்கும் காலை நேரங்களில், பக்கத்து ஸ்கூல் குழந்தைகள் கவனமாக தெருவை கடக்க உதவும் வாலண்டியராக பரபரப்பாக வேலை செய்துக்கொண்டிருப்பார். சில சமயம் மாலை நேரங்களில், ஆல்பர்ட்சன்ஸில் வாங்கிய உணவுப்பொருட்களை வெளியே நிற்கும் ஹோம்லெஸ்களுக்கு தானமாக கொடுத்துக்கொண்டிருப்பார். அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணியதால், அதே வயதுடைய, கூடவே இத்தனை நல்ல மனமுடைய பெண்மணியிடம் பழகுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆபீஸ் விட்டு வரும்போது, அவர் செய்யும் இரவு உணவு ஏதாவது, என்சிலாடாவோ அல்லது புரிட்டோவோ கொண்டு வந்து கொடுப்பார். ஒருவருடைய வீட்டுக்கு மற்றொருவர் வந்தால், சுதந்திரமாக கிச்சன் வரைக்கும் சென்று தண்ணீர் எடுத்துக்குடிக்கும் அளவு எங்களுடைய நட்பு வளர்ந்தது.

டிலோரிஸ் என்னுடைய பெற்றோரைப்பற்றி ஆர்வமாக கேட்டு தெரிந்துக்கொள்வார், அவருடைய கணவரைப்பற்றியும், குழந்தைகளைப்பற்றியும் பெருமிதத்துடன் நிறைய சொல்லுவார். என்னுடைய பெற்றோரைப்பற்றி சொல்லும்போதெல்லாம், அவருடைய கண்களில் ஒரு வித ஏக்கம் தோன்றி மறையும். ஒரு நாள் அப்படி பேசிக்கொண்டிருந்தபோது, எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, "இவர் தன் பெற்றோரைப்பற்றியோ அல்லது பிறந்த வீட்டைப்பற்றியோ எதுவுமே பேசுவதில்லையே?". ஒரு நாள் என்னுடைய சந்தேகத்தை ஆர்வத்துடன் கேட்டே விட்டேன், உடனே அவருடைய பளீர் சிரிப்பு மறைந்தது. இறுகிய முகத்துடன் சிறிது நேர சிந்தனைக்கு பிறகு, "உனக்கு அப்புறம் சொல்றேன் மினியக்கா" என்றார். மினியக்கா(Muñeca) என்றால் "சின்ன குழந்தையே, அல்லது பெண்ணே" என்று ஸ்பானிஷில் அர்த்தமாம், மெக்சிகன் அம்மாக்கள் செல்லமாக தங்கள் மகள்களை அழைப்பது. அதையும் அவரே தான் சொன்னார். "ஒருவேளை கேட்கக்கூடாது ஏதாவது கேட்டு வருத்தப்படுத்திவிட்டோமோ?" எனக்கு கவலையாக இருந்தது.

சில நாட்கள் ஏதுவுமே நடக்காத மாதிரி வழக்கம்போல ஜாகிங் போனோம், உலக விஷயங்களைப்பற்றி பேசினோம், க்ளோபல் வார்மிங்கைப்பற்றி கவலைப்பட்டோம். நான் கேட்ட கேள்வியை சுத்தமாக மறந்துவிட்ட பிறகு, ஒருநாள் அவரே அந்த சப்ஜெக்ட் பற்றி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். சிறுவயதில் 4 சகோதரிகளுள் கடைக்குட்டியாக பிறந்திருக்கிறார் டிலோரிஸ். அவருக்கு 6 வயது இருக்கும் போது, அப்பாவுக்கு வேலை போய்விட, டிலோரிஸின் அம்மா காலையில் இருந்து இரவு வரையிலும் ஒரு உணவு விடுதியில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அம்மா வேலையில் இருந்து வந்த பிறகு அசதியில் அடித்துப்போட்டது மாதிரி தூங்குவாராம். குடும்பத்தை வறுமை வாட்ட, ஏற்கெனெவே குடிகாரரான டிலோரிஸின் அப்பா, மனைவி வேலைக்கு போனவுடன் பகல் நேரத்திலேயே குடிக்க ஆரம்பித்திருக்கிறார். பெரிய அக்கா வேலைக்கு போக, அடுத்த இரண்டு சகோதரிகள் அரசு பள்ளிக்கு சென்றுவிட, டிலோரிஸை மட்டும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடிப்படைக்கல்வியை அவருடைய அப்பாவே சொல்லிக்கொடுத்து, "ஹோம் ஸ்கூல்" பண்ணி இருக்கிறார்.

சிறுவயதிலேயே அவர் சகோதரிகளை விட டிலோரிஸ் மிக அழகாக இருப்பாராம், வளர்ச்சியிலும் அப்படியே. மதிய வேளையில் டிலோரிஸுக்கு ரொம்ப பசிக்குமாம், வயறு வலிக்கும் அளவுக்கு! தன்னை சுற்றி பாட்டிலும் கையுமாக இருக்கும் அப்பாவிடம் தயங்கி தயங்கி தனக்கு பசிக்கிறது என்பதை தெரிவித்தால், மூர்க்கமாக டிலோரிஸை எட்டி உதைப்பாராம். "நீ பிறந்ததே வேஸ்ட், உன்னால் எனக்கு ஒரு டாலருக்கு பயனில்லை" என்று முகம் சிவக்க கத்துவாராம். அதற்கு பிறகு அவர் சொன்னதை கேட்க எனக்கு மயக்கமே வரும் போல இருந்தது.

-நினைவுகள் தொடரும்.

காதல் கல்வெட்டு-9

வந்த புதியவர் காஃபி ஆர்டெர் செய்கிற லைனுக்கு போனவுடன், கயலின் முகமாறுதல்களை கவனித்த வருண், "என்ன ஆச்சு கயல்?" என்றான்.


"ஒண்ணுமில்லை, வருண்!" என்று புன்னகைக்க முயற்சித்து தோல்வியடைந்தாள், கயல்.


"சரி, எனக்கு கொஞ்சம் Fresh Air வேணும், வெளிய போய் உன் காரில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசுவோமா, கயல்?"


"எனக்கும்தான், நல்ல ஐடியா, வருண்!" என்று சொல்லி உடனே எழுந்தாள் கயல்.


இருவரும் காஃபியை கையில் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார்கள். கயலின் காரை நோக்கி அவள் நடந்தாள். வருண் மெதுவாக அவளை தொடர்ந்து அருகிலேயே அமைதியாக நடந்தான்.


"இந்த அக்யூரா டி எல் தான் உங்கடையதா? நானும் ஒரு ஹாண்டா ஃபேன் கயல், டொயோட்டா எனக்கு பிடிக்காது"


"நான் முன்னால ஒரு கரோலாதான் வைத்திருந்தேன், வருண். இப்போதான் சமீபத்தில் இதுக்கு தாவினேன்"


"நான் கரோல்லாவையும், இந்த அக்யூரா டி எல் சீரீஸையும் நிச்சயம் கம்ப்பேர் பண்ண மாட்டேன். அது ஆப்பிளையும் ஆரஞ்சையும் கம்ப்பேர் பண்ணுவதுபோல ஆயிடும். பொதுவா எனக்கு டொயோட்டாவை விட ஹாண்டா பிடிக்கும்"


"என் கார் பிடிச்சிருக்கா, வருண்?" என்று சிறுபிள்ளைபோல் கேட்டாள், கயல்.


"ரொம்ப நல்ல கார், கயல். I am glad you could afford one. நான் ட்ரைவ் பண்ணுவது ஒரு பழைய 2001 ஹாண்டா அக்கார்ட்! அதில் ஒரு 80,000 மைல்ஸ் இருக்கு அல்ரெடி"


"நிஜம்மாவா? ஏன் புதுக்கார்லாம் பிடிக்காதா?"


"எனக்கு புது கார்களில் எதுவும் அப்சஸன் கிடையாது, கயல்!. I prefer using that money elsewhere."


கார் கதவை திறந்தாள் கயல்.


"இஞ்சினை ஸ்டார்ட் பண்ணுங்க, கயல். உள்ளே உட்கார்ந்து பேசலாம். ஏசி ஆன் பண்றீங்களா?"


கயல், ட்ரைவர் சீட்டில் அமர்ந்து அவள் காரை ஸ்டார்ட் பண்ணினாள். வருண் அதர் சைட்ல கதவை திறந்து பாசஞ்சர் ஃப்ரண்ட் சீட்டில் உட்கார்ந்து கதவை அடைத்தான்.


"சரி யார் அந்த ஆள்? அவர் வந்ததும் உங்க முகம் மாறிவிட்டது, கயல்?" என்று விசயத்திற்கு வந்தான் வருண்.


"அவரா, வருண்? நான் ஒருமுறை அவரை டேட் பண்ணினேன், வருண். ஆனால் அவர் நிறைய பொய் சொல்லி இருக்கிறார். அவருக்கு கல்யாணம் ஏற்கனவே ஆகிவிட்டது என்பதையும் மற்றும் ஒரு 10 மாத குழந்தையும் உண்டு என்பதையும் என்னிடம் வேண்டுமென்றே மறைத்துவிட்டார். ஒரு பேச்சிலர் போலவும், சீரியஸ் ரிலேஷன்ஷிப்க்காக டேட் பண்ணுவதுபோல் நடித்தார். பிறகுதான் உண்மையை கண்டு பிடித்தேன்! எனக்கு உண்மையிலேயே பெரிய ஷாக், வருண். ஏன் இப்படியெல்லாம் கீழ்தரமா செய்றாங்க வருண்?"என்றாள் வருத்ததுடன் .


"நீங்க கேள்விப்பட்டதில்லையா, கயல்? All men are Bastards! That is an exaggeration but most of them certainly are. Some of them are shameless like this guy. It is some kind of a "joke" for these people, kayal" என்றான் கோபமாக.


"என்னவோ போங்க, வருண். அரேஞ்ஜிட் மேரேஜ்லதான் ஏமாறுவதற்கு வாய்ப்பு இருக்குனு நினைக்கிறோம். அதனால்தான் என்னை மாதிரி ஆட்களெல்லாம் டேட்டிங் போறது, ஒரு நல்ல வாழ்க்கைத்துணையை தேட! ஆனால் டேடிங்ல கூட இந்த மாதிரி ஏமாற்றுக்காரர்கள்தான் நிறையப்பேர் இருக்காங்க. டேட்டிங்கில் கூட இவர்களைப்பர்றி தெரிந்துக்கொள்வது ரொம்ப கஷ்டம்! நிறைய உண்மைகளை மறைக்கறாங்க, இவரை மாதிரி. I become more and more suspicious and prejudicious about men unfortunately. I am really scared of men, Varun".


"உண்மைதான், கயல். டேடிங்லயும் ஏகப்பட்ட தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.நான் டேட்டிங் எல்லாம் போவதில்லை, அதில் எனக்கு ரொம்ப நம்பிக்கை இல்லை. BTW, நான் வேணா, நல்ல அழகான, தகுதியான இளம் தமிழர்கள் பார்த்தால் உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கவா? எனக்கு ஒரு சில பேர் இப்பகூட தெரியும். They are looking for serious relationship. You want to give it a try, Kayal?"


"Since when you are doing this broker job?" கயல் சிறிது கோபத்துடனே கேட்டாள்.


"Come on, Kayal! What is wrong in suggesting some good guys I know to you? Especially who can be a good match for you and your status? Moreover, I know for sure, they are not really liars like this bastard"


"I am sorry, varun. I don't want you to. And I know how to find some dates for me!"


"Take it easy, Kayal. You don't have to get mad at me for this!"


"எனக்கு பிடிக்கலை வருண்!" என்றாள் அவள், அவன் முகத்தைப்பார்க்காமல்.


வருண், அவள் சீட் அருகில் வந்தான். தன் வலதுகரத்தை கொண்டு கயலின் நாடி மற்றும் இரண்டு கன்னத்தையும் சேர்த்து பிடித்தான், பிறகு மெதுவாக, அவள் முகத்தை தன் புறம் திருப்பினான். அவள் கண்கள் கலங்கி இருந்தன.


"Hey! OK, I apologize, Kayal. I am sorry I said that! I promise it wont happen again"


"Thank you for understanding me varun. What is time now?"


"1 மணியாகிவிட்டது, கயல். நானும் புறப்படனும். தேங்க்ஸ் கயல் ஃபார் தி நைஸ் டைம்". காரிலிருந்து இறங்கி கதவை அடைத்தான்.


"பை, வருண்" என்றாள் கயல்.


பை சொல்லிவிட்டு, வருண் அவன் காரை நோக்கி சென்றான். அவன் காரை ஸ்டார்ட் பண்ணி அடுத்த வினாடியே பறந்துவிட்டான், வருண். கயல், கொஞ்ச நேரம் அப்படியே பேசாமல் உட்கார்ந்திருந்தாள். அது வருணுடன் அவளுடைய முதல் ஆர்க்யூமெண்ட்!


-தொடரும்