Wednesday, November 26, 2014

உங்க வள்ளி அத்தைக்கு சாமி வருமாமே?!

 நண்பன் முத்துவுடன் வரும்போது எதிரே நடந்துவந்த வள்ளியையும் வசந்தாவையும் பார்த்த முனியசாமி..

"இங்கே பாரு வேடிக்கையை! நம்ம வசந்தாக்காவும், வள்ளி அத்தையும் ராசியாகி இன்னைக்கு சினிமாவுக்குப் போறாங்க!"

"நீ சும்மா இருக்க மாட்டியா முனி!?" என்றாள் வசந்தா சிரிப்புடன்.

"சரி சரி, ரெண்டு பேரும் ஒழுங்கா படத்தை பார்த்துட்டு வாங்க. சினிமா கொட்டகைல ஒரு சண்டைய ஆரம்பிச்சுடாதீங்க! அப்புறம் ஒரு பயலும் படம் பார்க்க மாட்டான்"

"சும்மா இருடா முனி! நல்லா வாயில வந்துடப்போது!" என்றாள் வள்ளி அத்தை சிரிச்சுக்கிட்டே!

"அத்தை! என்னைப்போட்டு கிழிச்சுடாதே! நான் இனிமேல் வாயைத் திறக்கல!" என்று உண்மையிலேயே பயந்தான் முனி.

******************************

அவர்கள் கடந்து போனப்புறம்..

"அவுங்க உன் அத்தையாடா, முனி?" என்றான் முத்து மெதுவாக.

"இல்லடா தூரத்துச் சொந்தம். சும்மா அத்தைனு கூப்பிடுவேன்."

"எப்படிடா இவங்க ரெண்டு பேரும் திடீர்னு இப்படி ஒண்ணு சேர்ந்துக்கிட்டாங்க?"

"நீ அன்னைக்கு இவங்க போட்ட சண்டையைப் பார்த்தியா, முத்து?"

"டேய்! சத்தியமாச் சொல்லுறேன், அது மாதிரி ஒரு சண்டை  வாழ்நாள்ல பார்த்தது இல்லைடா!"

"ஆமடா ஊரே பார்க்கிறாப்பிலே அசிங்க அசிங்கமா கெட்ட வார்த்தையாச் சொல்லி திட்டி சண்டை போடுவாங்க! கொஞ்ச நாள்ல திடீர்னு ஏதாவது ஒரு கோயில் திருவிழால ஒண்ணு சேர்ந்துடுவாங்க!"

"அம்மாடி! எப்படிடா அதுக்கப்புறம் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிறாங்க!!"

"இதென்ன முதல் தடவையா? ஓ நீ ஆறுமாதம் முன்னாலதான் இந்தத் தெருக்கு வந்த?. மறந்தே போச்சு எனக்கு! அதான் உனக்கு இதெல்லாம் அதிசயமா இருக்கு?"

"உலகத்தில் இருக்கிற  எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி ரெண்டு பொம்பளைங்க சண்டை போடுறதை இந்தத் தெருவிலேதாண்டா முதல் முறை பார்த்தேன்!"

"எங்க தெருல தாய்க்குலம் எல்லாம் அப்படித்தான்! பெரிய பெரிய சண்டியர்களே மூடிக்கிட்டுப் போயிடுவானுக. இவளுககிட்ட எதுக்கு வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டனு."

"அதுக்காக இப்படியா?"

"கெட்டவார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியுதோ இல்லையோ, அதைச் சொல்லி ஒருத்தை ஒருத்தர் திட்டுறதல அவங்களுக்கு ஒரு இன்பம்! அதைவிட  இந்தச் சண்டைய வேடிக்கை பார்க்க எத்தனை பேர் அலையிறானுக தெரியுமா? உன்னையும் சேர்த்துத்தான். சண்டையே அதுக்குத்தான்டா. எல்லாம் அட்டென்ஷன் தேவைப்படுது!"

"ஆமா, உங்க வள்ளி அத்தைக்கு சாமியெல்லாம் வருமாமில்ல? சீனி சொன்னான்! அது உண்மையா?"

"ஆமாடா முளைக்கொட்டு சமயத்திலே எதோ சாமி வந்து ஆடும்!"

"நெஜம்மாவா?"

"ஆமடா! மாரியாத்தா வந்திருக்கேணன்டா னு என்னத்தையாவது செய்யணும் சொல்லும்! அப்புறம் விபூதியைத் தலையில் அடிச்சு அடங்க வைப்பார் பூசாரி. வருசத்துக்கு ரெண்டு முறையாவது இப்படி சாமி வரும்."

"சாமி வருதா? இதெல்லாம் உண்மையாடா? "

"என்னைக்கேட்டால்? நானா சாமி வந்து ஆடினேன்?

"என்னடா இது! ஒரு நாள் திருப்பிச் சொல்ல முடியாத எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி அசிங்க அசிங்கமா திட்டுறாங்க. இன்னொரு நாள் அதே ஆள் தெய்வமாயிடுறாங்க!"

"முத்து! நான் வேணா வள்ளி அத்தைட்ட உன்னைக் கூட்டிப்போறேன். நீ சாமி வர்ரது பத்தி கேக்கிறயா அதுட்ட?!"னு சிரிச்சுக்கிட்டே கேட்டான் முனி.

"என்ன ஆளவிடுப்பா!"

Tuesday, November 25, 2014

மரப்பசு பற்றி அம்பையின் குதர்க்க விமர்சனம்! இல்லை குதர்க்கசனம்!

அக்கா லேடி Gaga!  உங்களைத்தான் பார்க்கிறாங்க!

பல வருடங்களுக்கு முன்னால "திண்ணை"யில் அம்பை  னு ஒரு விமர்சகர் ஜானகிராமனின் மரப்பசு பற்றி விமர்சிச்சு அவர் சிந்தனைகளை அள்ளிக் கொட்டியுள்ளார்!  கீழே தொடர்பான இணைப்பு களுடன் அவர் விமர்சனத்தை அப்படியே கொடுத்துள்ளேன். 

இதை எதுக்குத் தருகிறேன்னா, மரப்பசு நாவல் பற்றி பலவாறு விவாதிச்சு இருக்கேன். ஆனால் அம்பையைபோல் நான் இந்தக்கதையை சிந்தித்ததே இல்லை!

நீங்க "மரப்பசு" நாவல் படிக்கவில்லை என்றால் அம்பையின் விமர்சனமோ, அதை நான் விமர்சிப்பதோ உங்களுக்குப் புரியாது! படிச்சுட்டு வந்து வாசிங்க!

--------------------------------------

பகுதி ஒன்று இணைப்புக்கு இங்கே க்ளிக் செய்யவும்



 க்ளிக் பண்ணப் பிடிக்கலைனா கீழே வாசிங்க!


பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்
அம்பை

மரத்துப்போன பசு, மரத்தால் ஆன பசு, என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்து கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலை பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை.
இந்த பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது, இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்து கொண்டால்தான் இத்தலைப்பையும், அதன் விளக்கத்தையும், இந்த நாவலிலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும்.

பெண்ணின் பால்தன்மை பற்றி ஆணித்தரமாகக் கூறக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நிலைமை ஆரம்பகாலத்திலிருந்தே இருக்கிறது.
அரசன் நகர்வலம் வரும்போது எந்தெந்த வயதுப் பெண்கள் எப்படி எப்படி மோகித்தார்கள், காமுற்றார்கள், பிச்சியானார்கள் என்று உலாக்கள் எழுதியிருப்பது ஆண்கள்தான்.

அது மட்டுமல்ல பெண்ணாக மாறி ஆண்கடவுள்கள் மேல் மோகமும், காதலும், பக்தியும் கொள்ளுமளவு பெண்ணின் பால்தன்மை சுலபமாக யூகித்து எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது.

பெண் ஆண் பக்தராக மாறி எந்தப் பெண் கடவுளையும் மோகித்ததாகச் சரித்திரம் இல்லை. அதனால் பெண்ணின் பால்தன்மை, அவள் தேடல் இது பற்றி தன்மை நிலையில் எழுத ஒரு ஆண் எழுத்தாளருக்குச் சரித்திரத்தின் பின்புலன் இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் பெண்ணின் பால்தன்மையை விளக்கி, விளக்கத்தினுள் அதைக் குறுக்கிய ஆண் முயற்சிகளின் பின்னே பெண்ணின் பால்தன்மையின் வீச்சு பற்றியும், அது அடையக் கூடிய 'விபரீத எல்லைகள் ' பற்றிய ஒரு பயம் இருந்தது என்கலாம்.

இது ஒரு நிரந்தர சரித்திர பயமாக இருந்து வந்திருக்கிறது. 'புகையிலை விரிச்சா போச்சு, பொம்பளை சிரிச்சா போச்சு ' போன்ற சாதாரணமான பழமொழியிலிருந்து வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறும் பெண்களுக்கான தண்டனைகள் பற்றிய மாதர் ஹிதோபதேசங்கள் வரை இந்த பயத்தின் பிரதிபலிப்பைக் காணலாம். இந்த பயத்தை உள்ளடக்கிய நாவல்தான் மரப்பசு.

தன்மை நிலையில், ஒரு பெண் தன்னைப் பற்றி நினைத்துக் சொல்வது போல அமைந்திருந்தாலும், இந்த நாவல் ஒரு பெண்ணின் குரலாக்கிச் சொல்வது ஆணின் பயங்களைக் குறித்து; பெண்ணின் பால்தன்மை பற்றிய அஞ்ஞானத்தையும், குறுகிய நோக்கையும், ஆண் என்ற நிலையிலிருந்து எழும் அப்பட்டமான ஆயத்தங்களையும், கோணல்களையும் குறித்து.
எதிர்மறை உணர்வுகளின் மேல் நிறுத்தப்பட்ட பெண்ணின் பால்தன்மை பற்றிய இந்த பாரபட்சமான விவரிப்புகள் மேனி நிறத்தில் தொடங்கி, மைதுனம் வரை எட்டி, பின்னர் அவள் வாழ்க்கையின் அர்த்தம், அவள் தேடல், அவள் வியாபிக்கும் இடம், அவள் பேணும் மொழி எல்லாவற்றின் மேலும் வலை போலப் படர்ந்து கொள்கிறது. ஹிந்து பத்திரிக்கையில், படித்த பையனுக்கு சிவப்பான அழகான பெண் கேட்டு வரும் திருமண விளம்பரங்களின் நிறம் பற்றிய பாரபட்ச நோக்கு மரப்பசுவின் ஆரம்பப் பக்கங்களிலேயே வந்து விடுகிறது.

அம்மணமாக நிற்கும் பெண் பைத்தியம். கறுப்பு. 'கறுப்பு அம்மணத்துக்கே இத்தனை ஈர்ப்பு என்றால்... ' (ப. 12) என்று கறுப்பு நிறத்துக்கே ஒரு சொட்டை சொல்லியாகி விடுகிறது. பிறகு கடைசி பக்கங்களில் மரகதம் வருகிறாள். கண்ணை பறிக்கும் கறுப்புடன். கோபாலி சொல்கிறார் பச்சையப்பனிடம் - அவள் மாத்திரம் இந்த நிறத்தில் இல்லாவிட்டால் பார்ப்பவர்கள் கொத்திக் கொண்டு போயிவிடுவார்கள் என்று( ப 247). மரகதம் அழகுதான். மலைக்க வைக்கும் அழகு. ஆனால் கறுப்பு. கறுப்பு சிவப்பு பேதங்களிலும் ஆண்-பெண் பாகுபாடு உண்டு. ஆண் கறுப்பு என்றால் அவன் கறுப்பண்ணசாமி (மலர் மஞ்சம் ப. 205). இதை இகழ்ச்சியாக ஒரு சிவப்பான பிராம்மணப் பையன் சொன்னாலும், திடமான, வலிய உடல் படைத்த அந்தக் கதாபாத்திரத்தின் ஆண்மை அழகுக்கு மெருகூட்டும் விஷயமாகிப் போகிறது அந்தக் கறுப்பு. பிறகு நெஞ்சில் காம உணர்வைக் கிளறும் தேவி சொரூபமாகப் பெண் பாத்திரங்களை படைப்பவர்கள் கூட, 'கறுப்பு ஆனால் அழகு ' என்ற வர்ணனைக்குப் புறம்பானவர்கள் அல்ல. இத்தகைய வர்ணனைகளை வழக்கமாகப் படித்துப் படித்து அதை ஒரு அழகுக்கான அளவுக் கோலாக கொண்டுவிட்டதனால் இதை நாம் ஒதுக்குவதற்கில்லை. காரணம் இந்த மொழி ஒரு பெண்ணிடமிருந்து பிறப்பதாக இருக்கிறது.
அதுவும் அவளிடம் குழந்தையிலிருந்தே- இயற்கையான மொழி போல.. இருப்பதுபோல் காட்டப்படும் மொழி, சிவப்பு மேல் அதீத விருப்பம் உள்ள குழந்தை. கண்டு சாஸ்திரிகளின் மஞ்சள் ஓடிய வெள்ளை நிறத்தால் கவரப்படும் குழந்தை அவள் வெள்ளை வெளேர் உடம்புக்கு ஏற்பு இல்லாத உள்ளங்கால் அழுக்கைத் துடைக்க விரையும் பெண் குழந்தை.

அம்மணி மரகதத்தை பார்ப்பதும் ஒரு ஆணின் கண்ணோட்டத்துடன் தான். ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அழகைக் கண்டு வியப்பதும் அதை ரசிப்பதும் சகஜமான ஒன்றுதான். அது சாதாரணமாக நடை பெறுவதுதான். பார்க்கப் போனால் உடலிலிருந்தும், அதன் மேல் சுமத்தியுள்ள ஆணாதிக்க மதிப்பீடுகளிலிலிருந்தும் விடுபட உடலையே ஒரு பிரதி போல் பாவித்து மறு வாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மறுவாசிப்பின் மைய முயற்சியாக இருப்பது வாழ்க்கை, தன் தடங்களை பதித்துள்ள பெண் உடலை அதன் மேல் ஏற்றியுள்ள அர்த்தங்களின் சுமைகளை அகற்றிப் பார்ப்பதுதான். அழகு - அழகின்மை, கறுப்பு - சிவப்பு, இளமை - முதுமை போன்ற மதிப்பீடுகளிலிலிருந்தும் நீங்கி உலக வாழ்வில் ஆழ்த்தப்பட்டிருக்கும் உடலை நேரிடையாக தைரியமாக கோணல்கள் இல்லாமல் பார்ப்பது. அம்மணி மரகதத்தைப் பார்ப்பது இப்படி இல்லை. ஒரு ஆணை கிறங்க வைக்கும் அழகு, அவனை காமமுற வைக்கும் அழகு என்றுதான் பார்க்கிறாள். அது மட்டுமில்லை, அவள் கணவன் அவளை அனுபவிக்க தகுதி யுடையவன்தானா, அவர்கள் எப்படி கூடி முயங்குவார்கள் என்றெல்லாம் அவள் சிந்தனை போகிறது.

இந்த ஆண் நோக்கு மிகும் போது- கிட்டத்தட்ட அவள் மரகதத்தை உடலால் அடைய நினைக்கிறாளா என்று ஐயம் பிறக்கும் போது - அதற்கு சால்ஜாப்பு, சப்பைக்கட்டு எல்லாம் தேவைப்படுகிறது; தனக்கு ஓரினச் சேர்க்கையில் விருப்பமில்லை என்று அவள் தெரிவு படுத்த வேண்டியிருக்கிறது (ப. 245).
எது மீறல், எதற்காக மீறல் என்பதில் தி.ஜாவுக்கு நிறையக் குழப்பங்கள் உள்ளன. இந்தக் குழப்பங்களை எல்லாம் பூசிக் கொண்டு வளைய வருகிறாள் அம்மணி. ஒன்று வீட்டில் உழழும் பத்தினி, அல்லது தாசி என்ற அப்பட்டமான இரு எதிர்நிலைகளில்தான் அவரால் பெண்னைப் பார்க்க முடிகிறது. அதனால்தான் கோபாலி அம்மணியிடம் 'நீ பிராமண தாசியாகிவிடு ' என்கிறார். இதிலுள்ள முதல் சறுக்கல் தேவதாசிகளைப் பற்றியது,. முதலாவது இது தேவதாசிகளை ஒரே முகம் கொண்டவர்களாகக் காண்கிறது. தேவதாசிகள் பலதரப்பட்டவர்கள். பல வகைகளில் இயங்கியவர்கள். தேவதாசிகள் எல்லோருமே கலைஞர்கள் அல்லர். கலைகளுக்குரிய ஞானமும், சிரத்தையும் உள்ளவர்கள் மட்டுமே கலைஞர்கள் ஆனார்கள். மற்றவர்கள் கோயில் பூசைகளில் மட்டும் பங்கு கொண்டனர். உறவுகளைப் பொறுத்தவரை சிலர் ஒரே ஆணின் வைப்பாட்டியாக இருந்தனர். சிலர் கை மாறினார்கள்; சிலர் வெவ்வேறு பல ஆண்களுடன் ஓர் இரவுக்கு மட்டுமேயான உறவுகளை மேற்கொண்டனர். உறவுகளைத் தேர்ந்தெடுப்பதிலோ, முறிப்பதிலோ ஒரு வயதுவரை எந்தத் தேவதாசிக்கும் சுதந்திரம் இருக்கவில்லை. ஒரு பேராசைக்கார அம்மாவோ, உறவுக் கூட்டமோ அதிகப் பணத்தைக் காட்டும் நபரிடம் ஒரு தேவதாசியைப் பிணைக்கலாம்.

உயர்ந்த கலைஞர்களாக இருந்த தேவதாசிகள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இத்தகைய உறவுகளை முறித்துக் கொண்டு,கலையில் பூரணமாக ஈடுபட்டார்கள். ஆகவே காமத்தையும், காமம் சார்ந்த உறவுகளையும் விலக்க ஒரு தேவதாசிக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சுதந்திரம் இருந்தது. தேவதாசி என்பவள் உடலுறவில் ஈடுபடுபவள் என்ற நிலையில் இருந்து கொண்டே அதை விலக்கும் சுதந்திரத்தையும் அவள் பெறுகிறாள். ஒரு தேவதாசியும் பல வயதுகளைக் கடக்கிறாள். இப்படிப் பாராமல், எல்லாத் தேவதாசிகளையும் வேசிகளாகப் பார்த்ததால்தான், தேவதாசிகளை உறவுக்காரர்களின் கைப்பொம்மையாகாமல் தடுக்கும் உயரிய நோக்கத்துடன் பிறந்த தேவதாசித் தடைச்சட்டம், அவர்கள் கலை முகங்களையும் அழித்துவிட்டது, களையை அறுக்கும் அரிவாள் பயிரையும் வெட்டியதுபோல. இது சரித்திரம். நுண்ணுணர்வு உள்ளவர்கள் மறக்கக்கூடாத சரித்திரம். இந்த சரித்திரத்தில் எல்லாம் தி.ஜாவுக்குச் சிரத்தை இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் தாசி என்பவள் வைப்பாட்டியாக இருக்கும் 'சுதந்திரம் ' உள்ளவள். அம்மணியின் மீறல் உணர்வுகளுக்கு ஒரு பெயர் கொடுத்தாக வேண்டி இருக்கிறது. அதாவது ஒருத்திக்கு ஒருவன் என்ற நியதியை மீற நினைத்தால் தாசியாவதைத் தவிர வேறு வழியில்லை. வைப்பாட்டியாகும் தாசி.

- இந்த கட்டுரையின் கடைசிப் பகுதி அடுத்த வாரம் திண்ணையில்
(தி ஜானகிராமனின் நாவலான 'மரப்பசு ' வை படித்தவர்கள், இந்த கட்டுரை பற்றியும் பொதுவாக மரப்பசு பற்றியுமான தங்கள் கருத்துக்களை திண்ணைக்கு தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். அடுத்த வாரம் இந்தக் கட்டுரையின் இறுதிப்பகுதி வெளியாகும்போது, அந்த கடிதங்களும் பிரசுரிக்கப்படும்) -திண்ணை, டிஸம்பர் 12, 1999

மரப்பசு பற்றி அம்பை

(இரண்டாம் பகுதி)

பகுதி ரெண்டு க்கு இங்கே க்ளிக் செய்யவும்

இரண்டாவது சறுக்கல் மீறல்/சுதந்திரம் என்ற கோட்பாடு பற்றியது. திருமணம் எனும் பந்தத்தில் இருக்க விரும்பவில்லை அம்மணி. தான் புணர வேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஒரு ஆவேசப் புணர்ச்சி. இப்படி நினைக்கும் முதல் பெண் இல்லை அம்மணி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 'ஆயிரம் யோனிகள் உடையவள் நான் ' என்று தன் உடலின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டு, உருவக ரீதியில் உலகைப் புணர்ந்து திகம்பரியாக வளையவந்தவள் அக்கமகாதேவி என்னும் சிவபக்தை. நவீன உலகில் இந்த உடலின் பந்தங்கள் வேறு வகையில் முறிக்கப்படுவது ஏற்க வேண்டியதே. இழுத்துக் கட்டப்பட்ட ஒன்று விடுபடும்போது நிலை கொள்ள அவகாசம் எடுப்பது போல.

உடலால் ஒடுக்கப்பட்டவர்கள், உடலுக்கு இடப்பட்ட எல்லைகளை உடைக்க உடலையே பயன்படுத்துவது பீறிடலின் ஆரம்பக்கட்டம்தான். விடுபடும் குதிரை பாய்ந்து ஓடிப் பின்னர் சாவதானமாக நடப்பது போல இதுவும் ஒரு கட்டம்தான். இலக்கு அது அல்ல. இந்தக் கட்டத்திலிருந்து உடல் வெகு எளிதாக வெளிப்பட்டுவிடுகிறது. ஒரு ஆண், பெண் உடலுக்கு அலைவது போன்றது இல்லை இது. இது தேடலின் ஒரு கட்டம். உடம்பையும், தன்னையும், உலகையும், விண்ணையும், வானையும் புரிந்து கொள்ளும் ஒரு கட்டம். இப்படி எல்லாம் இதைப் பார்க்க தி.ஜாவுக்கு முடியவில்லை. காரணம் இவர் எல்லாவற்றையும் ஏற்கெனவே உள்ள கச்சிதமான அமைப்புகளுக்குள் போட விரும்புகிறார். மனைவி அல்லாத மற்ற பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண் கோபாலி போன்ற கலைஞன். கணவனே வேண்டாம் என்னும் பெண் பரத்தையாகத் தான் இருக்கமுடிபும் தி.ஜாவைப் பொறுத்தவரை. அவலை வைப்பாட்டியாக வைத்துக் 'கெளரதை ' யைத் தருவது ஆண்தான். இப்படிப்பட்ட சுதந்திரத்தைத் தான் அம்மணிக்கு அளிக்கிறார் தி.ஜா. இதில் என்ன சுதந்திரத்தை அம்மணி காண்கிறாள் என்று தெரியவில்லை. இளம் விதவையான தன் மகளை மொட்டையடிக்கும் கண்டு சாஸ்திரிகளை வெறுக்கும் அவள்பதினைந்து வயதில் தன் பெண்ணைத் திருமணம் திருமணம் செய்து தந்துவிட்ட, ஒரு ஆணைப் பொறுத்தவரை சமூகம் அங்கீகரிக்கும் உறவுகளில் தப்பாமல் ஈடுபடும் கோப்பாலியை, எப்படி தன்னை ஆதரிப்பவராக ஏற்க முடியும் ? கோபாலி ஏற்பாடு செய்த வீட்டில், அவர் ஆதரவில் வாழ்வது எந்த வகையில் அம்மணியைச் சுதந்திரப்படுத்தியது என்று புரியவில்லை. கோபாலி அவளை உடலளவில் திருப்தி செய்கிறாரா என்று கூடத் தெளிவாகப் புரியவில்லை. அம்மணியைச் சுருதி கூட்டி விட்டு மீட்டாத ஆசாமியாக இருக்கிறார் அவர். (ப. 105) எல்லோரிடமும் அவளைத் தன் பெண் போல என்று கூறிக்கொண்டு, இரவில் அவளிடம் உறவை விழையும் நபராகவும் இருக்கிறார். இந்த நிலை அம்மணியின் தேடலின் தரத்தை வெகுவாகக் குறைக்கிறது. எந்த உள்நோக்கமும் இல்லாமல், உறவுகளை மேற்கொள்ளும் சுதந்தரியாக இல்லாமல், ஒருவனைப் பயன்படுத்துபவளாக அவளைக் காட்டுகிறது. இது இத்தகைய தேடலையே இழிவு படுத்தி, இத்தகைய பெண்களை குழப்பம் நிறைந்தவர்களாகக் காட்டுகிறது. இதைவிட வாகான பெண் 'சுதந்திரம் ' - ஆண்களுக்கு வாகானது - கற்பனை செய்யமுடியுமா என்ன ? ஆண்கள் அலைந்தால் அவர்கள் இசை மும்மூர்த்திகளைப் பூசை செய்யும், ஆத்மாவைத் தொடும்படி பாடும் கோபாலி போன்ற பாடகர்களாக இருக்கலாம். ஜொலிக்கும் உடலும், முகமும் உள்ள அருணகிரி நாதர், பட்டிணத்தடிகளாகலாம். ஆனால் பெண் பெறுவது தண்டனைதான். அந்த மோகத்தால் சிவந்து, மேடிட்ட கன்னங்களும், வெளுத்த கூந்தலும், ஒரு ஆணின் ஆதரவு தேவை என நினைக்கும் அம்மணியாகும் தண்டனை. அவளுக்கு முற்றிலும் எதிரான மரகதம் அவள் ஆதர்சமாகிப் போகிறாள்.

இதில் முதுமை பற்றியும் சில சிக்கல்கள் உள்ளன. நாவலின் ஆரம்பத்தில் அம்மணிக்கு, கோபாலியுடன் உறவை மேற்கொள்ளும்போது இருபது வயது. கோபாலிக்கு நாற்பத்தேழு வயது. இருபத்தேழு வய்து வித்தியாசம். நாவலின் முடிவில் கோபாலிக்கு அறுபத்தோரு வயது. அம்மணிக்கு முப்பத்து நாலு இருக்கவேண்டும். ஆனால் தி.ஜா முப்பத்தெட்டாக்கி, கிழவியும் ஆக்கிவிடுகிறார். திஜாவுக்கு கணக்கு தெரியாது என்றில்லை. முப்பதை ஒரு பெண் தாண்டியபிறகு, முப்பத்து நாலானால் என்ன, முப்பத்தெட்டானால் என்ன என்ற எண்ணம்தான். முப்பதைத் தாண்டிய பெண்கள் தமிழ்க் கதைகளில் 'முதுமை 'யை எட்டுவது எந்தப் புதுமையும் இல்லை. பல நாடுகளுக்குச் சென்று பயணக் கட்டுரை எழுதும் எழுத்தாளர் அவர்களை 'ஊசிப் போன பண்டம் ' என்றே கூறியிருக்கிறார். கடைசியில் அம்மணிக்கு ஞானம் பிறப்பது இந்த 'முதுமை ' வந்து தாக்கும்போதுதான். உடனே அவளுக்குப் பட்டாபியின் உடமையாகவேண்டும், அவன் அவள் உடமையாகவேண்டும் என்று தோன்றிவிடுகிறது. இதுதான் தி.ஜா. அம்மணிக்கு அளிக்கும் ஞானம். அவள் வாழ்க்கையின் குழப்பங்களுடன் கூடிய தேடல், அவள் மீறல் எல்லாவற்றையுமே இல்லாமல் செய்துவிடும் இறுதித் தண்டனை. புணர்ச்சியில் பெண் மேலேயும், ஆண் கீழேயும் இருந்த நிலை மாறியதால்தான் பெண்ணின் நிலை இழிபட்டது என்று வாதிடும் ஒரு பெண் மூப்பையும், நரைத்தலையும் கற்பனையே செய்யாததுபோல கலங்குகிறாள். முடிவில் அவளிடம் எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. 'பட்டாபியைக் கேட்டுச் சொல்கிறேன் ' என்பதுதான் அவள் முடிவாகச் சொல்வது. 'ஏதோ குதித்தாயே ? பறந்தாயே ? வீழ்த்தினேன் பார்த்தாயா உன்னை ? ' என்ற ஒரு ஆணின் கொக்கரிப்பு என் காதில் ஒலித்தது முடிவில்.
இவை எல்லாம் நாவலில் உள்ள பாதைகள். மரப்பசு என்ற தலைப்பு இந்த பாதைகள் இட்டுச் செல்லும் இலக்கு. சரி பசுவைப் பற்றி பார்ப்போம். பசு பால்தரும் என்பதுதான் ஒரு குழந்தை முதலில் கற்பது. பால் தராத பசுவைப் பற்றி நினைக்கமுடிவதில்லை. பால் தரும் பசு நல்ல பசு. பால் தராத பசு கெட்ட பசு. தன் ரத்தத்தை பாலாக்கி தருவது பசு. வேதங்களில் அகிலம் ஒரு பசு. அது நல்ல பாலையும் கெட்ட பாலையும் தருகிறது. பால் தராத பசு இயற்கையை மீறுவதாகவே கருதப் படுகிறது. விஷ்ணு புராணத்தில் அகிலப் பசு ஒரு முறை பால் தர மறுக்கிறது. தாக்கப்பட்ட பிறகுதான் அது பாலைத் தருகிறது. காமதேனுப் பசு பாலைப் பொழியும் தாயாகவே காணப்படுகிறது. பாலைத் தருபவள் நல்ல தாய். பாலை உடம்பிலிருந்து வெளியேற்றாமல் இருப்பவள் கெட்ட தாய்.

பூதனை கிருஷ்ணனுக்கு முலையில் விஷத்துடன் பாலூட்ட வருகிறாள். கிருஷ்ணன் அவளை அழிக்கிறான். ஆனால் அவள் செல்வது சொர்க்கத்துக்கு. பாலூட்டும் கெட்ட பெண்களுக்குக் கூட மோட்சம் உண்டு. ஆனால் ஏற்கெனவே முடியாதவர்கள் தாயல்லாதவர்கள். அம்மணி தாயாக மறுக்கிறாள். இதற்குத் தான் அவளுக்குத் தண்டனை. தாயாவது இயற்கை; பெண்ணுக்கு இயற்கையாகவே உள்ள விழைவு என்று கூறும் உலகில் அவள் தாய்மையை மறுக்கிறாள். தாயாவது இயற்கை மட்டுமல்ல, ஒரு பெண்ணின் பால்தன்மையே தாய்மையை மையமாக்கியதுதான் என்று பொதுவாகக் கருதப்படும்போது, இன்கு பசுவின் மடிப்பால், பெண்ணின் முலைப்பால் இரண்டுமே, வெறும் பாலாக மட்டுமல்லாமல் கருப்பை வளப்பத்துக்கும், காம உணர்வுக்கும் குறியீடாகிறது. பெண்ணின் பால்தன்மை அவள் உடலில் இரு அங்கங்களிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவள் யோனியிலும்,முலைகளிலும். பசுவின் மடியும், அதிலிருந்து பொழியும் பாலும் இவ்வாறே இரு தன்மை உடையதாய், ஆண்குறிக்கு ஈடான பெண்குறியாய் கருதப்படுவதை நாம் பல புராணக் கதைகளிலும் காணலாம். ஸ்கந்த புராணத்தில் ஒரு பசு லிங்கத்தின் மேல் தன் மடிப்பாலைப் பொழிகிறது. ஒரு அரசன் பசுவை அம்பால் கொல்ல வருகிறான். பசு அவனைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால் இந்தக் களேபரத்தில் லிங்கத்தைத் தன் காலால் உதைத்து உருக்குலைத்து விடுகிறது பசு. வெண்மை நிறத்தில், உருகின மெழுகுவர்த்தி போல ஆகிவிடுகிறது லிங்கம். லிங்கத்துக்குக் கோபமே வரவில்லை. பசு தன்னைத் தொட்டது குழந்தை முத்தம் போல அதற்கு இனிக்கிறது. இதே கதையின் இன்னொரு வடிவில், சிவன் லிங்கத்தினின்றும் தோன்றி , பசுவின் கொம்பாலும், குளம்பாலும் ஏற்பட்ட வடுக்களை உமையின் முலைகளும், வளையல்களும் ஏற்படுத்திய காயங்களை ஏற்றுக் கொண்ட அதே ஆனந்தத்துடன் நான் ஏற்கிறேன் என்கிறார். இதில் பால்பாலாக மட்டும் இல்லாமல் பால் தன்மையாகவே கொள்ளப்படுகிறது. பசுவையும் பெண்ணையும் இணைக்க இப்படிப் பல பக்திப் புராணக் கதைக் குறியீடுகள் உண்டு. பெண் உடலின் 'இயற்கை ' என்று கருதப்படும் இத்தகைய பால்தன்மையை மீறும் பெண்கள் நம் பழங்கதைகளில் ஆண் முனிவர்களைப் போல உடலைத் தாண்டாமல், உடலையே துறக்க வேண்டியிருக்கிறது. அதற்குப் பல அற்புதங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வையார் இளமை உடலைத் துறந்து முதுமையை மேற்கொள்கிறார். காரைக்கால் அம்மையாரோ உடலின் சதை, தோல், திரவங்கள் எல்லாவற்றையும் துறந்து எலும்புக் கூடாகி விடுகிறார்.

அம்மணி பசுவைப் பற்றி கற்பனை செய்கிறாள். இவ்வளவு தெளிவான, பசுவின் பாலையும் அவள் பால்தன்மையையும் இணைக்கும்படியான நேரடி உவமையுடன் கூடிய, விவரமான கற்பனை வருவதற்கான எந்தச் சாத்தியக் கூறுகளும் அவள் கதாபாத்திரத்தில் இல்லை. அதனால்தான் ப்ரூஸ் என்ற ஆணின் கண்ணோட்டத்தில் அதைக் காண வேண்டியிருக்கிறது. தெளிவில்லாவிட்டாலும் தன் சுய உணர்வுடன் உறவுகளில் ஈடுபட்ட அவள் எவ்வாறு தன்னைப் பசுவுடன் உவமித்துக் கொள்ள முடியும் ? பசுவின் பால் வற்றியதும் அது விலக்கப்படுவதைப் போல, அவள் பால்தன்மையின் ஒரு கட்டம் தாண்டியதும் அவளும் தெருவோரத்தில் கிடப்பாள் என்று அவள் எப்படி நினைக்க முடியும் ? அப்படியானால் இந்த உறவுகளில் அவள் ஒன்றுமே அடையவில்லையா என்ன ? மற்றவர்களுக்காகவே தன் பால்தன்மையை அவள் வெளிப்படுத்தினாள் என்றால், இந்த அதீத 'தியாகத்துக்கு ' அவளைத் தூண்டியது எது ? அதனால்தான் ப்ரூஸ் கற்பனையின் மூலாதாரமாக வருகிறான். தி.ஜா அம்மணியின் பாத்திரத்தை அணுகும் விதத்தில், இப்படிப் பட்ட கற்பனை/கனவு வருவதைத் தவிர வேறு வழியில்லை. பெண்ணைப் பற்றியும் பசுவைப் பற்றியுமான இந்தப் பிம்பம் உள் மனதில் கலாச்சாரத் தாக்கமாய் புதைந்து கிடக்கிறது. பாலைப் போல வழங்கப்படும் ஒன்றுதான் பெண்ணின் பால்தன்மை. ஒரு பெண்ணின் தேடலை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் இப்படித்தான் பார்க்க முடியும். வாழ்க்கையில் முப்பது வயதைத் தாண்டியவுடன் அம்மணி தன் பால்தன்மையை பசுவின் பாலுக்கு ஈடாக்குகிறாள். பசு பால் தருவது போல இவளும் பால் தன்மையை வெளிப்படுத்தியதாக - தந்ததாக - நினைக்கிறாள். திடாரென சுயதேடல், உலகை அறியும் விளைவு, பிணைப்புகள் இல்லாத உறவுகளை நாடுவது எல்லாமே, எந்தப் பலனையும் எதிர்பாராமல் பால் தரும் பசுவின் தியாகமாகி விடுகிறது. தான் உபயோகப்படுத்தாத ஒன்றாக அவள் நினைக்கிறாள். அதுவும் தெருவில், யாரும் சீந்தாத ஒரு மிருகமாய்.

அவள் பால்தன்மையின் ஒரு அங்கம்தான் காமம். முதுமை அதன் வேகத்தைக் குறைத்தால் அவள் நிலை குலைய வேண்டியதில்லை. சாவு பயத்தால் பீடிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் அவ்வளவுதான் அம்மணி. உடம்பை மட்டுமே ஒட்டியது அவள் தேடல். உடம்பு மாறியதும் அத்தனையும் சரிகிறது. அவள் இருவகையில் சபிக்கப்பட்டவள். முதலாவது, பசு பால் தருவது போல் அவள் தன் பால்தன்மையை காட்டும் தாராளத்துக்கு ஒரு சாபம். இரண்டாவது தன் உடலின் நிஜமான பாலை - முலைப்பாலை - அவள் எந்தக் குழந்தைக்கும் ஊட்டாததற்கான சாபம்.

வெறும் மரப்பசுவாக - மரத்தால் ஆன பசுவாக - இருந்திருந்தால் தான் இப்படிச் சீந்துவாரின்றி இருக்கவேண்டாமே என்று நினைக்கிறது தெருவில் செத்த பசு. செத்தபிறகு ஏது நினைவு ? சரி. அது அப்படி நினைப்பதாக அம்மணி நினைக்கிறாள். அது மட்டுமில்லை. தானும் மரத்தால் ஆன பசுவாக இருந்தால் காலத்தின் எந்த தொடலும் இன்றி மேசை மேல் வைக்கும் அலங்காரப் பொருளாக இருந்திருக்கலாமே என்று நினைக்கிறாள். கடைசியில் ஒரு ஜடப் பொருளாகவா இத்தனை ஓட்டம் ?

மகிஷனைக் கொல்ல முக்கடவுள்களும் தங்கள் மூவரின் சக்தியையும் ஒன்று திரட்டி, அதன் வடிவாய்க் காளியை உருவாக்குகிறார்கள். மகிஷனிடன் காளி, தான் பெண் உருவில் இருந்தாலும் தான் பெண் அல்ல என்கிறாள். எல்லா வகை அநீதியையும் குலைக்க வரும் காளி போலக் கிளம்பும் அம்மணியும் கோபாலி, பட்டாபி, புரூஸ் என்ற மூவரால் உருவாக்கப்படுபவள்தான். ஆனால் அவள் எந்த சம்ஹாரத்தையும் செய்யாமல் விட்டுவிடுகிறாள்.
பெண்ணின் தேடல், அவள் உடல், உலகம், வாழ்க்கை இவற்றிலிருந்து எழும் கேள்விகளின் உருவமான மகிஷன் அவளால் சம்ஹாரம் செய்யப்படாமல் நிற்கிறான். தெருவில், செத்து நாறிக்கிடக்கும் பசுவாக தன்னை பார்த்துக் கொள்பவளாகத்தான் அம்மணியை உருவாக்க முடிகிறது தி.ஜாவால். இதையெல்லாம் மீறி, ஒரு ஜீவனுள்ள பெண் பாத்திரத்தை கற்பனை செய்யவும், படைக்கவும் நமக்குத் தேவைப்படுவது பெண் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளும் முதலடியாய், காலம் காலமாக நம்முள் ஊறிக் கிடப்பவற்றைத் துறக்கும் செருக்கின்மை. அதை ஒட்டி வரும் அடக்கம்.

Thinnai 1999 December 3


------------------------------------

 C. S Lakshmi aka அம்பை (a feminist) யின் விமர்சனம் பற்றி !

 * அம்பையின் இவ்விமர்சனம் எனக்கு ஏற்புடையதாக இல்லை! காரணம்? நானும் ஒரு ஆம்பளை!  எனக்கெப்படி ஒரு பெண்மணியின் ஆதங்கம் புரியும்?

*  நான் மரப்பசு நாவலை  பலவாறு அலசி ஆராய்ந்துள்ளேன். நண்பர்களுடன் விவாதித்து இருக்கிறேன். இருந்தாலும் ஒரு போதிலும் நான் அம்பை பார்க்கும் இந்தக் கோணத்தில் பார்த்ததே இல்லை!

* அம்பை ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.  என்னவென்று? ஜானகிராமன், ஒரு மாதிரியான பேர்வழி. செவப்புத் தோல்தான் அவருக்குப் பிடிக்கும். அதுதான் உசத்தினு நம்பும் ஒரு பார்ப்பனர் அவர். ஒரு ஆணாதிக்கவாதி அவர். இப்படியெல்லாம்.  அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்த பிறகு, என்னவோ பெண்களை கேவலப்படுத்தவே ஜானகிராமன் இந்தக்கதையை எழுதியது போல பலவிதமான குற்றச்சாட்டுக்களை அள்ளி எறிந்துள்ளார்!

மரப்பசு படிச்சு இருக்கீங்களா?

நீங்கள் கவனித்துப் பார்த்தால் மரப்பசு வில்  அதிகமாக  பெண்களைவிட ஆண்களையே கேவலப்படுத்தியுள்ளார் ஜானகிராமன் என்பதே உண்மை.  கோபாலி மாதிரி ஒரு கேவலமான ஆண் உலகில் இருக்கமுடியுமா? நடு வயது மனைவியிடம் இருந்து காமத்திற்காகவே மகள் வயதையொத்த  அம்மணி என்கிற சிறுமியை "வைத்துக்கொண்டு"   ஊர் உலகத்திடம் அவளை "தன் வளர்ப்பு  மகள்" என்று சொல்லிக்கொண்டு வாழும் ஒரு ஈனப்பிறவி இந்த கோபாலி!  கிழவனான  பிறகும் இன்னொரு சின்னப்பொண்ணு  வேலைக்காரியான மரகதம் மேலும் அவன்  "காதல்" தொடர்கிறது.  ஆக கோபாலி என்கிற ஒரு பாத்திரத்தின்மூலம் ஆண்கள் இழிபிறவிகள் என்பது போலவும் வயதாக ஆக கேவலமான "பர்வேர்ட்" ஆகி, தரத்தில் குறைந்துகொண்டே போகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லுகிறார். தி ஜா!  இதைவிட இழிவாக ஆண்களைப் பத்திச்  சொல்லணுமா என்ன? அம்பையின் பார்வையில் இவைகளெல்லாம் படவில்லை! காரணம்? அம்பையின்  மனதில் "ஆண்கள் கேவலமானவர்கள்" என்கிற எண்ணம் சாதாரணமாக இருக்கிறது. அதனால் அம்மணி கோபாலியை விட பலமடங்கு உயர்ந்தவள் என்கிற உண்மையை அம்பையின் "க்ளோஸ்ட் மைண்ட்"ஆல்  பார்க்க முடியவில்லை.

*    ஜானகிராமன் எழுத்தை நீங்கள் படித்து இருந்தால் உங்களுக்கு ஒண்ணு புரிந்து இருக்கும். பலவிதமான பெண் பாத்திரங்களை (அம்மணி, ரங்கமணி, புவனா, அலங்காரம், யமுனா) அவர் உருவாக்கியிருந்தாலும் பெண்களை அவர் புரிந்துகொள்ள முடியாத புதிராகவேதான் எப்போதுமே அவர் அனுகியுள்ளார். என் பார்வையில், பெண் உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியாத, பெண்களைப் பார்த்து பயப்படும் ஒரு சாதாரண பலஹீனம் நிறைந்த  ஆணாகத்தான் தெரிகிறார், ஜானகிராமன்.

* தன்னுடைய பிற்காலம் எப்படியிருக்கும் என்று மரப்பசுவை உதாரணம் காட்டி தன் இளமை,  உடலழகு எல்லாம் காலப்போக்கில் அழிந்துவிடும் என்பதை அம்மணி உணருவதாகத்தான்  காட்டுகிறார். அதைப் புரிந்துகொள்ளாமல் நானும் விமர்சிக்கிறேன் என்று  செத்த பசுவை கொண்டுவந்து மார்கட்டித் தழுவி நீலிக்கண்ணீர் வடித்து  ஒப்பாரி வைக்கிறார் இந்த அம்பை!

ஜானகிராமன் பெண்களை சரியாக உணரவில்லை என்பது உண்மைதான். அதேபோல் அம்பைக்கு ஆண்களையும்,  ஜானகிராமன் சிந்தனைகளையும் புரியவில்லை என்பதும் இன்னொரு உண்மை! ஆக, இந்த அம்பை  "தரத்திலும்" "அறியாமையிலும்" ஜானகிராமனுக்கு எந்தவகையிலும் குறைவில்லை!

 *********************

மரப்பசு படிக்கலைனா என்ன?

ரிலாக்ஸ் ப்ளீஸ்!!!

 Is n't she the prettiest girl in the Earth?
தயவுசெய்து இதுதான் அம்பையா? னு கேட்டு காமெடி பண்ணீடாதீங்க!

Friday, November 21, 2014

பொம்மனாட்டிக்கு என்னையா வேணும்? தி ஜானகிராமன்

ஜானகிராமன் எழுத்து பொதுவாகவே ஆண்களுக்குத்தான் பிடிக்கும், பெண்களுக்கு பிடிக்காது என்பது என் நம்பிக்கை. கவனம்! நான் பொதுவாக னு சொல்லியிருக்கேன். விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு! காலங்காலமாக நமது கலாச்சாரத்தில் ஆண்கள், பெண்கள் உணர்வுகளை புரிந்துகொண்டதாக நம்பி தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எழுத்தாளர்கள் விதிவிலக்கல்ல! அவர் கதைகளில்  பலவிதமான பெண்களை உருவாக்கி அவர்கள் உள்ளுணர்வுகளை காட்ட முயன்றிருக்கிறார் ஜானகிராமன். "அம்மணி", "ஜமுணா" "மரகதம்" "அலங்காரம்" "ரங்கமணி" "புவனா" எல்லாம் ஜானகிராமன் புரிந்துகொண்டதாக நம்பி அவர் உருவாக்கிய பெண்கள். ஜானகிராமனிடம் எஸ்ட்ரோஜன் இல்லை! அதனால் அவர் என்னதான் பெண்களை தன் கற்பனையில் சித்தரிச்சாலும, அது ஆண்களின் தேவைக்காக அவர் உருவாக்கிய பெண்கள்தான். உண்மையான பெண்கள் கெடையாது என்பதே என் எண்ணம். எஸ்ட்ரோஜன் இல்லாத ஜானகிராமனுக்கு பெண்களின் மென்மையான பகுதி என்றுமே விளங்கியதாக எனக்குத் தோணவில்லை...

கீழே படியுங்கள்..

ஜானகிராமனின் எழுத்துதான்..

“ராமரத்னம் எனக்கு பரம சினேகிதன். ரொம்ப நெருங்கிப் பழகுறேன். அத்தனை சூட்சுமமான ஒரு ஆத்மாவை நான் பார்த்ததில்லை. பரம ரசிகன். நம்ம மனசிலே இருக்கிற கவலை, வியாதி எல்லாம் பறந்துபோயிடும்- என்னமோ பீச்சிலே போயி இல்லே விசாலமா ஒரு இயற்கை காட்சிக்கு முன்னாலே உட்கார்ந்திருக்கிறாப்பிலே அவன் தனக்கு இப்படி ஓர் அதிர்ச்சி ஏற்பட்டிருக்குனு வாயைத்திறந்து சொன்னதில்லை. அதைச்சொல்லி என்னை துன்புறுத்த வேணாம்னு நெனச்சானோ என்னவோ- நிச்சயமாக அப்படித்தான் நினைச்சிருப்பான். யார்கிட்டயும் சொன்னதில்லேனு நினைக்கிறேன்.”

“ஒரு அத்தியாயத்தையே கிழிச்சு எறிஞ்சுட்டார்னு சொல்லுவேன். ரொம்ப பெரிய மனுஷனாகத்தான் இருக்கணும். பெண்டாட்டி விட்டுட்டுப்போறாளே -அந்த ஒரு சர்ட்டி·பிகேட்டே போரும்யா அவர் பெரிய மனுஷன்கிறதுக்கு!”

“என்னையா ஒரேயடியா அப்படிச் சொல்லிவிட்டீர்?”

மது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கண்ணை மூடிக்கொண்டே சொன்னான்: “பொம்மனாட்டிகளுக்கு என்னப்பா வேணும்? அடுத்தாத்துக்காரியைவிட தான் செளக்கியமா இருக்கணும். நல்ல புடவை. சொந்த வீடு. தான் ரொம்ப நல்லவ. பெரியமனசு உள்ளவ. ஊதாரி- அப்படி இப்படினு காமிச்சுக்கணும். ஆமடையான் தன்கிட்ட எல்லாத்தையும் கலந்து ஆலோசிக்கணும். பத்துபேருக்கு நடுவிலே தங்கிட்ட ரொம்பப் பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். மற்றவர்களைவிட தன்கிட்ட விஷேசமா, பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். உலகம் வேற, தன் குடும்பம் வேறனு ஆமடையான் உணர்ந்து பிரிச்சு வச்சுண்டு, முக்கால்வாசி நேரமும் சுவருக்கு இந்தப்பக்கமே பொழுதைப்போக்கணும். அந்தப்பக்கத்தைவிட இந்தப்பக்கம்தான் பெரிசென்று தான் நினைச்சுண்டு இருக்கதாக நிரூபிக்கணும். இப்படியெல்லாம் இருந்தா அவ இல்லத்தரசி, கற்புக்கரசின்னு ராஜ்யம் நடத்த முடியும். இந்தப்பேர் எல்லாம் அவளுக்கு வரதுக்கு ஆமடையான் ஓயாம ஒழியாம ஒத்தாசை பண்ணிண்டே இருக்கணும். நான் சரிதாண்டீம்மான்னு என் ஆமடையாள்ட்ட சப்ஜாடா ஒத்துக்கிண்டு நடத்திண்டு வரேன். உம்ம (சினேகிதன்) ராமரத்னம் அப்படியில்லே போலயிருக்கு. நான் நிம்மதியா இருக்கேன். அவரு இல்லே- அனாதைப் பள்ளிக்கூடம் விமர்சனம் எல்லாம் எனக்கும் ஜாம்ஜாம்னு நடத்தத்தெரியும். ஆனா நானும் ஷட்டகர் கிட்ட பறிகொடுத்துட்டு உக்கார்ந்து இருக்க முடியுமா நிம்மதியை? சரி... "கூலா" ஏதாவது சாப்பிடுவோம்” காரில் இருந்துகொண்டே கடைக்காரனைக் கூப்பிட்டார் “மது”.
தி ஜானகிராமனின் “தேடல்”  என்கிற சிறுகதை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்!

ஆமாம், மீள்பதிவுதான்.. வேலை அதிகம்.. அதனாலதான்..

Wednesday, November 19, 2014

மங்கை உள்ளம் பொங்கும்போதும் வேலிகள் உண்டு!

சுகன்யாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. காஃபி எடுத்து கொடுத்த அட்டண்டண்ட்க்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் காஃபியை வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் போய் அமர்ந்தாள். வெயில் அதிகமாக இருப்பதால் ஒரு சல்வார் காமிஸ் அணிந்து வந்திருந்தாள். இவளுடைய இந்திய அவுட்ஃபிட்டை வழக்கம்போல ஒரு சிலர் ஒரு மாதிரியாக பார்த்தார்கள். 46 வயதிலும் சுகன்யா அழகுதான். தன் அழகு  பல ஆண்களை கவர்வதை மற்றவர்களின் பார்வையிலேயே உணர்ந்தாள். மற்ற ஆண்கள் தன்னைப்பார்ப்பதை ரசிக்கும் அவள் அதே பார்வை இன்று தன்னை மணந்த கணவன் பார்த்தால் மட்டும் அவளுக்கு பிடிக்கவில்லை! அருவருப்பாக இருந்தது!

இப்போது சனிக்கிழமை காலை 11 மணி. இந்த விடுமுறை நாளில்கூட அவளுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. வீட்டில் இருந்தால் அந்த ஆளையும் அவர் செய்கிற நாலு மணிநேர பூஜையையும் பார்க்க வேண்டும். அவரைப்பார்த்தாலே பிடிக்கவில்லை! அவர் வாயை திறந்தால் கோபம் தலைக்கு ஏறியது! அவர் பூஜையும் அவர் வழிபாடும்! என்றுமே நிறுத்த முடியாத புகைபிடிக்கும் பழக்கம் வேற! இவரெல்லாம் என்ன விஞ்ஞானி? புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்னு தெரியாத பெரிய விஞ்ஞானி? இந்தாளு பேசுறதெல்லாம் வியாக்யானம் ஆனால் பண்ணுறதெல்லாம் அயோக்கியத்தனம்! அவர் செய்யும் எல்லாவற்றிலும் வடிகட்டிய சுயநலம் நிறைந்து வழிகிறது! இதில் கடவுளையும் தன் அயோக்கியத்தனத்திற்கு உதவிக்கு அழைக்கிறார் போலும்! ஆமாம், இப்படி மணிக்கணக்காக பகவானை வழிபட்டு வழிபட்டு, யாரை ஏமாற்றுகிறார் இந்த ஆளு? கடவுளையா? தன்னையேவா? இல்லை ரெண்டு பேரையும் சேர்த்தா? யாரை வேணா ஏமாற்றட்டும் என்னை விட்டால் போதும்!

மனுஷாளை மனுஷா புரிஞ்சுக்கணும்! அதற்குத்தான் ஆறாவது அறிவு! இல்லைனா மிருகத்துக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அடுத்தவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாத மிருக ஜென்மம் இது! கொஞ்சமாவது முயற்சியாவது செய்கிறாரா, புரிந்துகொள்ள? கடவுளின் தேவைகள்  மட்டும் இவருக்கு புரிகிறது! இல்லை, புரிந்துகொண்டதாக நம்புகிறார். இவர் குடும்பத்துக்கு செய்யவேண்டிய கடமையை செய்யாமல், எந்த விதமான கெட்ட பழக்கங்களையும் குறைக்காமல், முழுநேரமும் கடவுள் புகழ்பாடினால், அவரை துதித்தால்.. உடனே கடவுள் இவரை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொள்வார் என்று இவராகவே நம்புகிறார். என்ன ஒரு பரிதாபம்! அறியாமையின் உச்சம்!

மனைவி வேண்டும்! எதற்காக? விதவிதமாக சமைத்துப்போட! இவருக்குத் தேவையான நேரத்தில்  இவர் இஷ்டப்படி  இவரை இன்பத்தில ஆழ்த்த! ஆனால் இவரால் உடம்பை வளைத்து வேலை பார்க்க முடியாது! குடும்பத்திற்காக எந்தவித தியாகமும் செய்ய முடியாது! சம்பளம் இல்லாமல் எப்படி பில் மற்றும் மார்ட்கேஜ் கட்டுவது நான்? சம்பாரிக்காமல் எப்படி சாப்பிடுவது? இவர் இவரோட பகவானா வந்து கட்டுவான் வருகிற பில்லை எல்லாம்? இவர் கொடுக்கிற பூ வழிபாடு, புகழ்ச்சியெல்லாம் கேட்டு என்ன செய்வான் பகவான்? புகழுக்கு மயங்குகிற சாதாரண ஒருவர்தானா என்ன கடவுள்?

இதென்ன இந்தியாவா? ஒரு அரசாங்க வேலையை வாங்கிக்கொண்டு எல்லோரையும் குறைசொல்லிக்கொண்டு காலம் முழுவதும் குப்பை கொட்ட? வேலை செய்ய முடியலைனா வண்டியைக்கட்ட வேண்டியதுதானே இந்தியாவிற்கு? கஷ்டப்பட்டு சம்பாதிக்க உடல் வளையமாட்டேன் என்கிறது. இதில் எனக்கு கை வலிக்குது, கால் வலிக்குது மூட்டு வலிக்குதுனு நாடகம் வேற! "எண்டெர்"னெட் பாக்க மட்டும் எப்படி முடியுது அப்போ?

இந்த ஆளோட எப்படி வாழ்வது? சரி உன்னைப்பிடிக்கவில்லைனு தெரிந்தால்  விட்டுவிட்டு போய் தொலைய வேண்டியதுதானே? கொஞ்சமாவது சுயமரியாதை வேணாம்? இதில் கேள்வி வேற! அப்போ  மட்டும் ஏன் என்னைப் பிடித்தது? இப்போ ஏன் பிடிக்கவில்லை?. இதை எல்லாம் பச்சையாக சொல்ல முடியுமா என்ன? அவங்கவங்களுக்கா புரியணும். ஒன்று மட்டும் புரிந்தது சுகன்யாவுக்கு! இந்த ஆளு இவளையும் நிம்மதியாக வாழ விட மாட்டான், அவனும் வாழ மாட்டான்! சுகன்யாவுக்கு கோபமும், அழுகையுமா வந்தது !

இதே கணவனைத்தான் 25 வருடங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டாள். அதிசயமாக இருந்தது இப்போது அதை நினைத்தால் அவளுக்கு! இவரையா காதலித்தோம் ? இன்று ஒரு இணுக்களவு காதல் கூட எஞ்சி இல்லை அவளிடம்! சுமார் 26 வருடங்கள் முன்பு! ஐ ஐ டி யில் பி எச் டி பண்ணுவதற்காக பயோ கெமிஸ்ட்ரி டிப்பார்மெண்டில் சேர்ந்தாள் சுகன்யா. இவள் சேர்ந்த ஆய்வகத்தில், 5 வருட சீனியர் ரிசேர்ச் ஸ்காலராக இருந்தார் ராகவன். அழகாக இருந்ந்த அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தார். இவளுக்கு கோர்ஸ் வொர்க் பண்ணும்போது எல்லாவிதமான சந்தேகங்கள், அசைன்மெண்ட் எல்லாவற்றுக்கும் ராகவன் வழியவே வந்து உதவி புரிந்தார். ராகவன், இவளைவிட நல்ல நிறம்! மேலும் அவரிடம் அழகு, நிதானம் எல்லாமே நல்லாத்தான் இருந்தது அன்று. அவரிடம் கெட்ட பழக்கம் என்று சொன்னால், கொஞ்சம் ஸ்மோக் பண்ணுவார்போல தெரிந்தது. அன்று அது பெரிய தவறாகத்தெரியவில்லை. காதலில் விழுந்தாள் சுகன்யா. அது காதலா? இல்லை என்னவோ ஒண்ணு! அந்த நேரத்தில் நன்றாகத்தான் இருந்தது.

இவள் தான் படிக்கபோன பி எச் டி யை முடிக்காமல், பாதியில் விட்டுவிட்டு இரண்டாம் வருடம் படிக்கும்போதே ராகவனைக் கல்யாணம் செய்துகொண்டாள். சுகன்யாமேல் அவள் அப்பாவுக்கு பயங்கர கோபம். இவள் பாதியில் படிப்பை நிறுத்தியது அவள் தந்தைக்கு சுத்தமாகப்பிடிக்கவில்லை. கல்யாணம் நடந்து எண்ணி ஒரு வருடத்தில் அங்கேயே ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொண்டாள். அழகாக மூக்கும் முழியுமாக இருந்தாள் காயத்ரி. பிறகு அவர் மேல்ப்படிப்புக்காக அமெரிக்கா வரும்போது, கணவருடன் சேர்ந்து வந்தாள். இங்கே வந்தவுடன் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ரமேஷ் என்றழைத்தார்கள். அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வாங்கிய பிறகு இவளும் வேலைக்குப்போனாள். நல்லவேளை பி எச் டியை பாதியில் நிறுத்தினாள்! எம் எஸ் க்கு, பி எச் டியை விட வேலை வாய்ப்பு அதிகமாக இருந்தது! வாழ்க்கை ஓரளவு நன்றாகத்தான் போனது ஒரு 15 வருடம். இப்போழுது வளர்ந்து, மூத்தவள் கல்லூரியில் சீனியராக இருக்கிறாள். பையன் ஹைஸ்கூலில் ஜூனியர். அவர்கள் ஓரளவுக்கு இண்டிப்பெண்டெண்ட் ஆக ஆகிவிட்டார்கள்!

பசங்கள் இருவருக்குமே சுகன்யாவைத்தான் ரொம்ப பிடிக்கும், ஆனால் அப்பா பிடிக்காது என்றில்லை. என்னதான் இருந்தாலும் அப்பா-அம்மா சேர்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு பிடிக்கிறது. அமெரிக்காவில் வளரும் வாழும் பசங்க எப்படி இருப்பார்கள்? சுயநலத்தின் முழு உருவம்! சுயநலமாக இருப்பது தவறு என்றெல்லாம் அமெரிக்காவில் மாரல்ஸ் சொல்லித் தருவதில்லை. ஒரு வேளை அப்படி அவர்களுக்கும் சொல்லித்தந்திருந்தால் அவர்களும் இன்னொரு தேர்ட்-வேர்ல்ட் நாடாக இருப்பார்களோ என்னவோ.

இங்கே வளரும் குழந்தைகளுக்கு என்ன மனநிலை? தனக்கு அப்பா அம்மா எல்லாமே தரணும், அவர்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளணும். சரி, அவர்களை படிக்கவைத்து மேலே கொண்டு வந்தாச்சு! அவர்கள் இப்போ அம்மா இவள் உணர்ச்சியை புரிந்து கொள்கிறார்களா? "அப்பாவை ஏன் வெறுக்கிறாய்?" என்று அவர்கள் கேட்கும்போது இவளுக்கு எரிச்சலாக வந்தது. குழந்தைகளுக்கு என்ன தெரியும், இவளுடைய தேவைகள்? அவர்களுக்கு தெரியுமா, அவருடன் படுப்பதே அருவருப்பாக உள்ளது என்று? மனைவிக்குத்தான் தெரியும் கணவனின் அந்தரங்கப்பகுதி.

அவர்களிடம் சொல்ல எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல முடியுமா?  இவர்கள் அப்பா ஊர் உலகத்தைப்போல், சம்பாதித்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்தால், நான் ஏன் அவரை வெறுக்கிறேன்? எனக்கு காதலிக்க தெரியாதா? இல்லை அன்பாக இருக்கத் தெரியாதா? தேவையே இல்லாமல் ஒருவரை அதுவும் கைப்பிடித்த கணவனை வெறுப்பேனா? பணம் இல்லைனா பிணம்னு தெரியாதா இந்த ஆளுக்கு?

சுகன்யாவுக்கு இன்னொரு சந்தேகம். இந்த ஆள் இவளை பழி வாங்குகிறாரா? ஒரு மாதிரியான "சாடிஸ்டா" இவர்? யோசித்துப்பார்த்தால் இவர்களுக்குள் பிரச்சினை ஆரம்பித்ததே சுகன்யா, கணவன்  ராகவனைவிட அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன்தான். இவள் அதிகம் சம்பாதிக்கிறாள் என்கிறதால் தான் இப்படி இருக்கிறாரோ ? அதனால்தான் எந்த வேலையும் ஒழுங்காக பார்க்க மாட்டேன் என்கிறாரோ? சரி எது எப்படியோ போகட்டும், இருவருக்கும் ஒத்துவரலை என்றால் விவாகரத்துக்கு சரினு சொன்னால் என்ன? இரக்கமே இல்லாமல் நாந்தான் உனக்கு இந்த வாழ்க்கையே கொடுத்தது என்றல்லவா பேசுகிறானே பாவி! ஆமாம் இவர்தான் இந்த அமெரிக்க வாழ்க்கை கொடுத்தாரு! இவரால்தான் அமெரிக்கா வந்தேன். ஆனால் இவரை சந்திக்கலைனா நானா பி எச் டி முடித்து வந்து இருப்பேனே! மேலும் இவருக்கு நான் கொடுத்ததெல்லாம்? இப்படி எல்லாம் கணக்குப் பார்க்க முடியுமா என்ன?

சுகன்யாவின் தோழிகள் இவள் உணர்வுகளை புரிந்தாலும், அவர்களால் எதுவும் பெரிதாக உதவி செய்ய முடியவில்லை என்பதே உண்மை. "உன் வாழ்க்கை சுகன்யா, நீதான் முடிவு பண்ணணும்" என்று சொல்லாமல் சொன்னார்கள். இந்திய கலாச்சாரத்தை அமரிக்காவில் வந்து வாழ்ந்து காக்கும் இந்தியப் பெரியமனிதர்கள் சிலர், சுகன்யாவிடம் "இந்த வயதில் இதென்ன விளையாட்டு?" என்று இவள் ஏதோ தேவையே இல்லாமல் விவாகரத்து கேட்பதுபோல் பேசுகிறார்கள். அவளுக்கு கோபமாக வந்தது! யார் சொன்னா எனக்கு வயதாகிவிட்டது என்று? யாருடைய அட்வைஸைக் கேட்டாலும் எரிச்சலாக வந்தது அவளுக்கு.

ஒரு சில நலம்விரும்பிகள் நேரடியாகவே சுகன்யாவை பயமுறுத்தினார்கள், “இவள் விவாகாரத்துக்குப் போனால் தற்கொலை பண்ணிகொள்வார் ராகவன் என்று” ஆமாம், இரண்டு முறை அப்படி அவர் நாடகம் ஆடியதும் உண்டு. நான் சம்பாதிக்க மாட்டேன், தினமும் 4 மணி நேரம் பூஜை செய்வேன், என்னால் குடிப்பதையோ அல்லது ஸ்மோக் பண்ணுவதையோ, வேறு எதையுமே தியாகம் பண்ண முடியாது என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டியதுதானே?

 ராகவனுக்கு இவள் மேல் அளவில்லாத ஒருதலைக் காதலாம்! தன்னைக் காதலிக்காத, மேலும் அடியோட வெறுக்கும் மனைவியை இவர் எப்படி இன்னும் காதலிக்க முடியும்? புரியவே இல்லை அவளுக்கு! ஆனால் இவர் தற்கொலை பண்ணிக்கொள்வாரோ என்று சுகன்யாவே பயந்தாள். காரணம்? இவள் காதல் கிடைக்கவில்லையே என்ற விரக்திலாம் இல்லவே இல்லை! இவளை பழிவாங்க வேண்டும் என்கிற கேவலமான எண்ணம் ராகவனுக்கு இருக்கலாம். அப்படி ஏதாவது விபரீதம்  நடந்தால் ஊர் உலகம் ராகவனுக்கு சிலையும்,  சுகன்யாவுக்கு  கொடுமைக்காரி பட்டமும் கொடுக்கும் என்கிற கேவலமான எண்ணத்தினால் தற்கொலைகூட  செய்யலாம் என்று நம்பினாள், சுகன்யா.

எனக்கு என் வாழ்க்கையை என் இஷ்டம்போல் வாழ சுதந்திரம் இல்லையா? . இதுதான் உலகமா? இதுதான் வாழக்கையா? என்கிற பழைய பாடலுக்கு இன்று அர்த்தம் புரிந்தது அவளுக்கு. பிடிக்காத ஒருவருடன் வாழ்வது நரகம்தான் அவளைப் பொருத்தவரையில். எதற்காக இப்படி இவரோட அர்த்தமில்லாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழணும்? இந்த பாழாப்போன உலகத்திற்கு எனக்காக நான் வாழ ஆசைப்படுவது ஏன் பெரிய தப்பாத்தெரியுது? நான் நிம்மதியாக இருக்கணும் என்று நினைப்பது பேராசையா? சுகன்யாவுக்குப் புரியவில்லை!

சுகன்யாவுக்கு வாழ்க்கை கசந்தது. நிம்மதி எல்லாம் போய்விட்டது. "மங்கை உள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது?" என்பதெல்லாம் ஆண்களே பெண்களை ஏய்க்க எழுதிய வெறும் அர்த்தமில்லாத பாடல் வரிகள்! சுகன்யாவைப் பொருத்தமட்டில். மங்கை உள்ளம் பொங்கும்போதும் வேலிகள் உண்டு! நாமாகப் போட்டுக்கொண்ட வேலிகள் சில!  நம்மைச் சுற்றியுள்ளோர் போட்டவைகள் பல!

சுகன்யா காஃபியை குடித்துவிட்டு புறப்பட்டாள் வீடு என்கிற நரகத்திற்கு! தன் உணர்வுகளை புரியாத மதிக்கத்தெரியாத, சுயமரியாதையே இல்லாத, அந்த சுயநலவாதியுடன் தொடர்ந்து வாழ!

diclaimer: கட்டுரைபோல் இருக்கும் இது ஒரு "கற்பனைக் கதை" தான்!

அந்தக்காலத்தில் எழுதிய ஒரு மீள்பதிவு!

Tuesday, November 18, 2014

என் கனவில் வர பயந்த காந்தி! பஹுத் அச்சா!

 எனக்கு ஹிந்தி தெரியாது. காந்திக்கு தமிழ் தெரியாது. இது தொடர் பதிவும் கெடையாது! காந்திக்கும் எனக்கும் தெரிந்த ஒரே பொதுமொழி ஆங்கிலம்! ஆனால் ஆங்கிலம்  அன்னியர் மொழியாச்சே? நீங்களே சொல்லுங்கள், ஆங்கிலேயரை நம் நாட்டில் இருந்து துரத்தப் பாடுபட்ட காந்தி என்னிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டால் நல்லாவா இருக்கும்? மஹாத்மா காந்தியும் ஒரு "ஹிப்போக்ரைட்"னு ஆயிடும். இல்லையா?

அவர் கனவில் வந்து  ஆங்கிலத்தில் கேள்வி கேக்க அரம்பித்தால் நான் விட்டுடுவேனா? " பெரிய மகாத்மா இவர்" "உலகிற்கே பாடம் கற்றுக் கொடுத்தவர்" என்பதற்காகவெல்லாம் அவரை பெரிய மனசு பண்ணி  ஆங்கிலத்தில் கேள்வி கேக்க விட்டுடுவேனா என்ன? என்ன காந்தி அவர்களே! நீங்களே ஆங்கிலத்தில் கேள்வியெல்லாம் கேக்குறீங்க? நீங்களும் ஒரு ஹிப்போக்ரைட் தானா?"னு நான் கேட்டுவிடுவேன் என்கிற பயத்தில்,  வருணின் உள் மனதையும், தைரியத்தையும் புரிந்த காந்தி வருண் கனவில் வராமல் தப்பி ஓடிட்டாரு!

ஆக ஒரு தொல்லை ஓய்ந்ததுனு நிம்மதியாக இருக்கலாம்னு இருந்தால் நம்ம மதுரைத்தமிழன் எப்படியோ அவர் கனவில் வந்த காந்திட்ட அவர் வாயைத் திறக்குமுன்பே மளமளனு பத்து கேள்விகளுக்கான பதில்களையும் சொல்லிட்டார். இவர் சொன்ன பத்து பதில்களும்  தமிழில்! அதுவும் காந்தி இவரிடம் ஹிந்தில கேள்விகள் கேட்குமுன்னாலேயே படார் படார்னு பதில்களைத் தமிழில் கொடுத்துவிட்டார்! கேள்விகள்தான் இணையத்தில் எல்லா மூலைகளிலும்  இருக்கே! நீங்க என்ன கேக்க வேண்டிக் கிடக்கு, காந்தியாரே?  இந்தாங்க இதுதான் என் பதில்கள்னு தமிழ்லயே பதில் சொல்லி கனவில் வந்த காந்தியை அவசரமாக அனுப்பி வச்சுட்டாரு.

காந்தி என்ன செய்வாரு பாவம்? வேற வழியே இல்லாமல், தமிழில் பதில்களைப் பெற்ற காந்தி அவசரமாகத் தமிழ் கற்றுக்கொண்டு மதுரைத் தமிழன் பதில்களை ஒரு வழியாகப் புரிந்து கொண்டார். அதோட  அதற்கான கேள்விகள் தமிழில் எப்படி இருக்கும் என்பதை யூகித்து அரைகுறையாக கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்து  தமிழ் கேள்விகளை "ஸ்டாக்" வைத்துக்கொண்டார்.

 மறுபடியும் என் கனவில், தமிழ் கேள்விகளுடன்  வந்து சேர்ந்துட்டார, காந்தி.
வந்தவர், அமெரிக்காவில் போய் குடியிருக்கும் இவனிடம் எதுக்கு அர்த்தமில்லாத பல கேள்விகள் கேட்க என்று நினைத்து

"ஒரே ஒரு கேள்வியை மட்டும் உன்னிடம் கேக்கிறேன். அதுவும் உன் தாய் மொழி தமிழில்! அதுக்கு மட்டும் பதில் சொல்லு" னு கேட்டார், காந்தி.

"சரி கேளுங்க காந்திஜி" என்றேன்.

"நீ மறுபிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கிறாய்?" என்றார்.

கேள்வி புரியாத நான்.  

"எங்கா? இல்லைனா யாராகப் பிறக்கணும்னு ஆசைப்படுவேனா?" என்று காந்தியைத் திருப்பிக் கேட்டுக் குழப்ப ஆரம்பித்தேன்.

"ஆமா ஆமா, எங்கு பிறந்தால் என்ன? யாராகப் பிறக்க ஆசைப்படுகிறாய்? என்று சமாளிக்க..

"நான் எப்போ செத்தாலும் சரி, சாகும்போது என்னால் முடிக்கப் படாத வேலைகள், தெளிவு படுத்தப் படாத விடயங்கள், எழுதப்படாத எழுத வேண்டிய பின்னூட்டங்கள் எல்லாமே பாதியில் அனாதையாக நிற்கும். அதனால மறுபிறவி எடுத்து வந்து நிற்பவைகளை தொடர்வதில்  எனக்கு ஆட்சேபனை இல்லை! மறுபிறவினு ஒண்ணு இருந்து, பிறந்து வந்தால் பாதியில் நிற்கும் வேலைகளையும், சில சந்தேகங்களையும் தெளிவு படுத்த  நான் நானாகவேதான் பிறக்கணும்.  அதாவது இதே  46 குரோமசோம் களுடன், இதே வருணாகவேதான் எங்கே பிறந்தாலும்  பிறக்கணும் என்பது என் அவா!" என்றேன்.

"ஏன் உன்னைவிட உயர்தர மக்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.. மறு பிறவியில் நீ ஏன் ஒரு உயர்வான மனிதனாகப் பிறக்கக்கூடாது?"

அவர் சொன்னதை அவமானமாக எடுத்துக்கொண்ட நான்..

"காந்திஜி! எனக்கு மற்றவர்களைப் பற்றி தெரியாது. அவர்கள் வெளியுலகில் எப்படி நடந்துகொள்கிறார்கள், உள்ளுக்குள் அவர்கள் யார், எப்படிப் பட்டவர்கள் என்று அவர்களைப் பத்தி எனக்கு சுத்தமாகத் தெரியாது. வெளியில் அவர்கள் நடந்துகொள்வதை வைத்து நான் அவர்களாகப் பிறக்க ஆசை என்று சொல்வது அபத்தம். உலகிலேயே என்னை மட்டும்தான் எனக்கு நன்கு தெரியும். என்  கணிப்பின்படி நான் ரொம்ப நல்லவனும் இல்லை! படு அயோக்கியனும் இல்லை! ஒரு சராசரி மனிதன். குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடினால், நான் ஒண்ணும் அவ்வளவு மட்டமான ஆள் கெடையாது. அதனால் மறுபிறவியிலும் நான் இதே வருணாகவேதான்  பிறக்க  ஆசைப்படுகிறேன்! மன்னிக்கணும், மறுபிறவியில் நான் காந்தியாகவோ, புத்தராகவோ, இல்லை சகலகலாவல்லவரு, மாமேதை கமலஹாசனாகவோ பிறக்க ஒரு போதிலும் ஆசை இல்லை! என்னைவிட நான் அவர்களை உயர்வாகக் கருதுவது என்னை நானே அவமானப்படுத்துவது போல்" என்றேன்

இதுபோல் ஒரு பதிலை என்னிடம் இருந்த எதிர்பார்க்காத காந்தி உணர்ச்சி வசப்பட்டு, ஹிந்தியில்,

"பஹுத் அச்சா!"  என்றார்! 

ஆனால் மனதுக்குள்ளேயே ..This guy is an egoist என்று ஆங்கிலத்தில் காந்தி நினைப்பது எனக்கும் புரிந்துவிட்டது என்று அவருக்குத் தெரியாது!

Sunday, November 16, 2014

லிங்கா! இது எப்படி இருக்கு?!

நான் ஏற்கனவே சொன்னேன். ஒரு புகைப்படத்தில் இவர் இருந்தால் அவர் பக்கம் உங்க கண்கள் திரும்பும் என்று. அதற்கு விதிவிலக்கும் உண்டு என்றேன். நீங்கள் அனைவருமே என்னை ஆமோதித்தீர்கள். இப்போது இன்னொரு சேலன்ஞ்.

இந்தப் படத்தை ஹிந்து தளத்திலிருந்து எடுத்து வந்தேன். லிங்கா ஆடியோ ரிலீஸ்ல எடுத்த புகைப்படம் இது.

Actor Rajinikanth with Sonakshi Sinha and Anushka Shetty at 'Lingaa' audio launch in Chennai on Sunday. Photo: R. Ragu


உலகை எப்படிப் புரிந்து  கொள்வது?

முதலில் உங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உலகைப் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொருவரையும் நீங்கள் விமர்சிக்கும்போது உங்களை அங்கே பொருத்தி, அந்நிலையை யோசிச்சுப் பாருங்க. பல உண்மைகள் வெளிப்படும்.

மேலே உள்ள படத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத்தான் விமர்சிப்பார்கள். காரணம்? நாம் அனைவருமே ஒரே படத்தை பலவாறுதான் பார்க்கிறோம்.

உங்க விமர்சனத்தை வைத்து உங்களை எடை போடலாம். நீங்க வாயைத் திறக்கும்போது, வார்த்தைகளை கொட்டும்போது, உங்களை நீங்கள் உலகுக்கு காட்டுறீங்க என்பதே உண்மை.

ஏன் என்றால் ஒவ்வொருவர் விமர்சனமும் வேற வேற மாதிரி இருக்கே? படம் ஒண்ணுதானே?

பார்ப்பவர் கோணம் மாறுவதால் படமும் மாறுகிறது. படத்தை மாற்றுபவர் யார்?

நீங்கள்தான்!

எதுக்கு வம்பு வருண்? நான் விமர்சிக்காமலே போயிடுறேன். :)))

Friday, November 14, 2014

உயிருடன் நம்பள்கி! ஆன்மீக உலா உயிர் பெற்றது!

நம்பள்கினு ஒரு பதிவர் இருந்தார். திடீர்னு காணாமல் போயிட்டார்!  இவர் போனாப் பரவாயில்லை, இவர் தளத்தையும் இழுத்து மூடிவிட்டுப் போயிட்டார். இதனால் பலரும் பலவாறு பேசினார்கள். அதாவது அவர் தளத்தை யாரோ முடக்கி விட்டதாக பரவலாகப் பேசினார்கள். போனவர் ஏதோ இண்டெர்னெட் வசதியில்லாத இன்னொரு யுனிவேர்ஸ்க்கு போயித்தொலைந்ததால் உயிரோட இருக்காரா இல்லைனா செத்துட்டாரா?னு தெரியவில்லை. அவர் போன இடத்தில் இண்டெர்னெட் வசதியில்லாததால் "நான் உயிரோடதான் இருக்கேன்"னுகூட அவரால சொல்ல முடியலை. அதனால் பதிவுலகில் அவருக்கும் அவர் தளத்துக்கும் இறுதிச் சடங்கு கொடுத்தாகி விட்டது.

இப்போ திடீர்னு இவர் தளம், ஆன்மீக உலா உயிர்ப்பித்துவிட்டது! அவரும் உயிரோட வந்து நிக்கிறார்!

இவர் பதிவுலகில் காணாமல்ப்போனபோது பதிவு  ஒண்ணு எழுதினேன். அது இங்கே கீழே கொடுக்கப் பட்டுள்ளது!..2014 மே மாதம் அவரும் அவர் தளமும் காணாமல்ப் போனபோது எழுதிய பதிவு இது!

********************


 நம்பள்கியின் ஆன்மீக உலா முடக்கப்பட்டதா?

இக்பால் செல்வன் என்கிற கோடங்கிச் செல்வன், தமிழ்மணத்தை புதிய தமிழ்தளங்களை திரட்டச் சொல்லி வேண்டிக் கேட்டுக்கொண்ட பதிவில், நம்பள்கியின் தளம் முடக்கப்பட்டு இருக்கலாம் என்பதுபோல் டிஸ்கஸ்ஸன் செய்யப்பட்டுள்ளது.

நாத்திக பதிவு எழுதி வந்த நம்பள்கி வலைப்பக்கம் சில நாட்களாக காணவில்லை.கடைசியாக கடுமையாக கடவுளை மறுத்தும் விமர்சித்தும் எழுதியிருன்(வந்)தார். அந்த பதிவுடன் அவரது வலைப்பக்கமும் காணக்கிடைக்கவில்லை. இது பற்றி ஏதேனும் விபரம் யாருக்காவது தெரியுமா? www.nambalki.com பக்கத்தை யாராவது களவாடி (hack செய்து) விட்டார்களா?

பூபதி துபை



நாத்திக பதிவுகளுக்கு நடக்கும் வழமையான துன்பம் இந்த இணைய களவாணித் தனம் ( Hacking ) . எனது கொடுக்கி என்ற பெயரில் இயங்கிய தளமும் Hack செய்யப்பட்டு நூற்றுக்கும் அதிகமான பதிவுகளை இழந்தேன். தற்சமயம் Backup செய்து பாதுகாப்பை அதிகரித்துள்ளேன். நம்பள்கியின் தளம் இருமுறை சூறையாடப்பட்டுள்ளது. தற்சமயம் அவரது டொமைன் சிக்கலோ என தோன்றுகின்றது. Blogspot முகவரி ஊடாக போய் பாருங்கள். அவரே வந்து பதிலளித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

இது உண்மையா?

உங்கள் தளம் முடக்கப் பட்டால் உங்களுக்கு மட்டுமே அவ்வலி தெரியும். நம்பள்கி, ஆத்திகரோ, நாத்திகரோ, தரமாக எழுதுகிறாரோ இல்லையோ என்பதெல்லாம் வேறு விடயம். ஆனால் திடீரென வாசகர்களை எட்டிப் பார்க்க வைப்பதுபோல் கவர்ச்சியான் தலைப்புகள் கொடுத்து பல வாசகர்களையும் சில வாசக நண்பர்களை சமீபத்தில் பெற்றார்.

அவர் தளம் முடக்கப் பட்டு இருந்தால், அது மிகவும் கண்டிக்கத் தக்க செயல். இன்று நம்பள்கி நாளை நீங்கள்! என்பதை நினைவில் கொள்ளவும்.

இது உண்மையா? என்பதை அவரே வந்து பின்னூட்டத்தில் சொல்ல வேண்டும். அதற்காகவே இப்பதிவு.

நன்றி.

************************

2014 மே மாதம் எழுதிய அந்தப் பதிவில் வந்த பின்னூட்டங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்!

நம்பள்கியின் ஆன்மீக உலா முடக்கப்பட்டதா?

Tuesday, November 11, 2014

நாம் எங்கே போகிறோம்? பெண் சுதந்திரம்னா இதுதானா?

உலகம் வேகமாக முன்னேறுகிறது. நல் வழியில் மட்டுமல்ல! கெட்ட வழியிலும்தான். எல்லா ஆர்கனைசேஷன் களிலும் கட்டிடத்துக்குள்ளே சிகரெட் குடிக்கக்கூடாது என்பதை அமல்படுத்திவிட்டார்கள். அதனால் புகைபிடிப்பவர்கள் எல்லாம் அவங்களுக்குனு கொடுக்கப்பட்ட ஒரு இடத்தில் கூடி புகைபிடிப்பதைப் பார்க்கலாம்.


பெண் சுதந்திரம் அதிகமாக உள்ள மேலை நாட்டில் முதன்மையானது அமெரிக்கா. இங்கே வெளியில் நின்னு புகைபிடிப்பவர்களில் பெண்களே அதிகம்.

புகைபிடிக்கும் கல்லூரி மாணவிகள்



கல்லூரிக்குச் சொல்லும் அனைத்து மாணவிகளும் (எழுத்துப்பிழை இல்லை! ஆமாம், மாணவிகள்தான்) 18 வயதிலேயே மதுபானம் அருந்துகிறார்கள். அமெரிக்காவில் 21 வயதுதான் சட்டப்படி மது அருந்தலாம் என்கிற நிலை இருந்தும் இவர்கள் 18 வயதிலேயே  மதுபானம் அருந்துவது சாதாரணம். இதுதான் இன்றைய அமெரிக்க கல்லூரி நிலைமை!


மாணவிகள் வைன் குடிக்கிறாங்க..


என்ன? அமெரிக்காலதான் அப்படியெல்லாம் நடக்குதுனு சொல்றீங்களா?

 கலாச்சாரக்காவலர்களை நாம் முட்டாள்கள் என்கிறோம்! சாரு நிவேதிதா அடிவருடிகள் ஒரு பக்கம்! கமலஹாசன் அடிவருடிகள் இன்னொரு பக்கம்! இவர்கள் நாளைய இந்தியா எப்படி இருக்கணும்னு மேலை நாடுகளில் நடக்கும் இதுபோல் முன்னேற்றைத்தைக் காட்டி நாமும் "நாசமாகப் போவோம்" என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

நாம் எங்கே போகிறோம்?

இன்று ஒரு செய்தி, பால்ட்டிமோர் ரேவென்ஸ் என்கிற அமெரிக்க ஃபுட்பால் டீமில் ச்சியர் லீடராக இருந்ந்த 47 வயதுப் பெண்மணி இவர்.


molly shattuck
இன்று Molly Shattuck வயது 47, ஒரு தாய்



ஒரு காலத்தில் ச்சியர் லீடராக இருந்தவர் இவர்



சரி, ஒரு காலத்தில் ச்சியர் லீடர். இன்று இவர் 47 வயதான ஒரு தாய்!

 என்ன செய்தார்?

ஒரு 15 வயது பையனை வன்புணர்வு செய்துள்ளார்!!

அவனை எப்படித் தெரியும்?

இன்ஸ்டக்ராம் என்கிற சமூக வலைதளம் மூலம் பரிச்சயம்..

தன் மகனிடம் அவனுடைய அட்ரெஸ் வாங்கி தன் வீட்டிற்கு அவனை இன்வைட் பண்ணி, தனியாக இருக்கும்போது அவனை ஃபோர்ஸ் பண்ணி வன்புணர்வு செய்துள்ளார்.

தன் குழந்தைகளுடன் இவர்

 இது கதை எல்லாம் இல்லை!

நடந்த உண்மை!

முழுமையான பெண் சுதந்திரம் பெற்றவுடன் நாம் சாதித்தது என்ன? ஆண்களை விட நாங்க எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதே! ஏன் நாங்க சிறுவர்களை வன்புணர்வு செய்தால் என்ன? காலங்காலமா ஆண்கள் மட்டும்தான் செய்யணுமா என்ன? எங்களாலயும் முடியும்!

அதாவது, புகை பிடிப்பது, குடிப்பது, பால்ய பருவத்தில் உள்ள சிறுவனை வற்புறுத்தி "ஓரல் செக்ஸ்" கொடுப்பது!

உலகம் முன்னேறிவிட்டது!

முழுமையான பெண் சுதந்திரம் கிட்டிவிட்டது.

 பாவம் பாரதி இதையெல்லாம் பார்க்காமல் போயிட்டாரே!!

அவர் என்னவோ நினைக்க.. நடப்பது என்னவோ வேறமாதிரிதான் இருக்கு! ஒரு வேளை இதைத்தான் அவரும் எதிர்பார்த்தரோ? யாருக்குத் தெரியும் அவர் என்ன கனவு கண்டார் என்று?

Thursday, November 6, 2014

வருணின் உளறல்கள் (6)

மூத்த பதிவர் தருமிக்கு பதில் சொல்றேன்னு மதுரைத் தமிழன் கொடுத்த காணொளி மற்றும் பார்வையாளர்கள் "டேட்டா" பதிவர்களை ஊக்குவித்ததோ இல்லையோ, பல பதிவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையைத்தான்  உண்டாக்கியுள்ளது என்பதை அவர் அறிவாரா என்று தெரியவில்லை!

மதுரைத் தமிழர் தன்னுடைய ஒரு சில பதிவுகளை 30,000 முதல் 50,000 பேர் வாசிக்கிறார்கள்  என்று சொல்லி, அதற்கான ஆதாரத்தையும் கொடுத்து இருக்கிறார். வாழ்த்துக்கள்!

அவருடைய முயற்சி என்னவென்றால்.. பதிவுலகை குறைத்து மதிப்பிடாமல் முகநூல், ட்விட்டர் போன்றவைகளை புறக்கணித்துவிட்டு பதிவர்கள் பதிவுலகில் நெறைய ஆக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஊக்குவிப்பது.  அதாவது  பதிவர்கள் மனம் தளராமல் நீங்கள் பதிவு எழுத எழுத, வருடங்கள் கடக்கக் கடக்க அவருக்கு கிடைத்த வாசகர்கள்போல் உங்க பதிவுகளையும் குறைந்தது 10,000  வாசகர்களாவது  வாசிப்பாங்கனு சொல்ல முயன்றுள்ளார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? மதுரைத் தமிழரின் பார்வையாளர்கள் டேட்டா வைப் பார்த்துவிட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு  எழுதும் பதிவர்கள் பலரும் பயந்து பீதியடைந்துள்ளனர். தன் தளத்தில் வந்து வாசித்த  வாசகர்களை எண்ணிப் பார்த்த இவர்கள் ..மிகச்சிறிய பார்வையாளர் வட்டத்தையே தங்கள் பதிவு இப்போதும் அடைகிறது  என்பதை உணர்ந்து  "10 வருடம் எழுதும் நம்ம ஒவ்வொரு பதிவுக்கும் 1000 பார்வையாளர்கூட வரவில்லையே!  நம்ம எல்லாம் எதுக்கு பதிவு எழுதுறோம்?"  என்கிற ஒரு மனச் சோர்வுதான்  இப்பதிவால் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு சில நேரங்களில் நம்ம செய்கிற "ஊக்குவிப்பு" முயற்சி  தடம் மாறி,  "டிஸ்கரேஜ்மெண்ட்" ஆகத்தான் முடியும்! அதற்கு இது ஒரு நல்ல உதாரணம்! 

படைப்பாளிகள் கவனிக்கவும்!

நீங்க எத்தனை அழகாக எழுதினாலும், சிறந்த ஆக்கசக்தி உள்ளவராக இருந்தாலும் கவிதை, கட்டுரை, கதை போன்ற ஆக்கங்களுக்கு வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைக்காது. ஆக்கங்களுக்கு மிகவும் குறைவாகவே  வாசகர்கள் வருவார்கள். இது பதிவுலக அனுபவத்தில்  பலருக்குத் தெரியும். அதாவது தக்க  சமயத்தில் வம்பு, சினிமா, டி வி, அரசியல் போன்ற பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதினால், அல்லது கவர்ச்சியான வார்த்தைகளை தலைப்பில் மற்றும் குறிச்சொற்கள் போன்றவற்றில் இட்டு எழுதினால் மட்டுமே அதிக வாசகர்கள் வருவார்கள்.

நீங்க என்னதான் தலைகீழா  நின்னு தண்ணி குடிச்சாலும் ஒரு பதிவுக்கு 30,000 - 50,000 வாசகர்கள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கமாட்டாங்க. அப்படி ஏதாவது வேணும்னா நீங்க "அவர்கள் உண்மைகள்" தளத்தை ஹேக் பண்ணி உங்க தளமாக்கிக் கொண்டால் மட்டுமே சாத்தியம். :) நான் சொல்வதெல்லாம் உண்மை!

********************
சொந்தக்கதை:

அமெரிக்க நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்வதுண்டு. அவர் வீட்டில் இரண்டு பெரிய நாய்கள் வளர்க்கிறார்கள். அவைகள் மனிதருக்கு உதவி செய்யும் நாய்கள். ஹெல்ப்பர் டாக்ஸ் என்பார்கள்.

குறையுள்ள சிறுவனுக்கு உதவும் ஹெல்ப்பர் டாக்




வயதானவருக்கு ஷாப்பிங் செய்யும் ஹெல்ப்பர் டாக்


 அவைகளில்  ஒன்று கொஞ்சம் வயதானது. பெயர் பெத். 12 வயதாகிறது என்கிறார்கள். தன் வயதிற்கேற்றார்போல் நிதானமாக இருக்கும் பெத். இரண்டாவது ஒன்றுக்கு 4 வயதாகிறது. பெயர் ஜாஸ். முதலில் அன்னியமாகத் தெரிந்த நான் இப்போது ஜாஸ்க்கு நண்பனாகிவிட்டேன் . நண்பர் வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஜாஸுடன் ஒரு 10 நிமிடம் செலவழிக்காவிட்டால், (அதுக்கு உடம்பு சொறிந்துவிடணும், கொஞ்சணும்) என்னை வீட்டுக்கு உள்ளே போகவோ பேசவோ விட மாட்டான் ஜாஸ்! He demands me to give him attention FIRST!

மனிதர்கள் மட்டுமல்ல நாய்களும் அவைகள் மேல் அன்பாக இருந்தால் நம்மிடம் எல்லா நேரங்களிலும் தொடர்ந்து அன்பைக் கொடுக்கும்படி "டிமாண்ட்" பண்ணுகிறதுகள். வீட்டிற்குள் நுழைந்தவுடன் "மொதல்ல என்னைய கொஞ்சிட்டு அப்புறம் போய் உன் நண்பன் வில்லியமைப் பார்!"  என்கிறது ஜாஸ்!

 *************************
பதிவர் சந்திப்பு:

வழக்கம்போல பதிவர்கள் சந்திப்பு மதுரையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தவுடன், சிரத்தையுடன் அதை எடுத்து நடத்திய பதிவர்களுக்கு, சக பதிவர்கள் சிலருடைய விமர்சனங்களால் எரிச்சல், கோபம்!

கடந்த மூன்று  சந்திப்புகளில் ஒவ்வொரு பதிவர் சந்திப்பு நடந்த முடிந்த பிறகும் இதுபோல் ஒரு நிலையைத்தான் பார்க்கிறோம். இது பழகிப்போன விடயம் என்பதால் இந்த முறை இந்தச் சர்ச்சையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

அடுத்த பதிவர் சந்திப்பு முடிந்த பிறகும், அதை எடுத்து நடத்தியவர்களிடம் இருந்து  "இனிமேல் பதிவர் சந்திப்பு அவசியம்தானா?" என்று ஒரு பதிவு கட்டாயம்  வரத்தான் செய்யும் என்பதை இப்போதே சொல்வதற்கு உங்களுக்கு ஆரூடம் தெரியவோ, அல்லது நீங்கள் முக்காலமும் அறிந்த முனிவராக இருக்க வேண்டிய அவசியமோ  இல்லை! தமிழ் அன்பர்கள் எப்படி "அன்பு பாராட்டுவார்கள்" என்பது பற்றிக் கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதும்! :)

***********************

புதிர் மாதிரி!




என்ன முழிக்கிறீங்க? என்னடா இது இழவு னு நினைக்காதீங்க. மேலே உள்ள என் பெயர் என்ன தெரியுமா?


வயாகரானு சொல்லுவாங்க இல்லை? அது ஷாத்சாத் நானேதான்! :)

Saturday, November 1, 2014

மேதாவி ஜெயமோகன் தளத்தில் ஒரு சி னி மா விளம்பரம்!

நித்யானந்தாவுக்கு சாரு விளம்பரம் செய்து அவர் தலையில் அவரே  மண் அள்ளிப்போட்டுக் கொண்டது, பிறகு சாரு தன் தளத்தில் நித்யா பற்றி கட்டுரை என்று எழுதிய அந்த "பொய் மூட்டைகளை" வைரஸ் வந்து தின்றுவிட்டுப் போனது. அதற்கப்புறம் அக்கட்டுரைகளை சாரு, வைரசோட மல்லுக்கட்டி, "வேணும்னே" வைரஸிடம் தோற்று அந்தப் பொய்க்கட்டுரைகளை "ரெக்கவர்" பண்ண முடியாமல் போனது. கடைசியில் வைரஸால் அவைகள் அழிக்கப்பட்டதாக சாரு "கணக்குக் காட்டியது" எல்லாம் எல்லாருக்கும் தெரியும்.

அவர் புளுகும்போதே சாரு தளத்தில் உள்ள நந்தி சில்க்ஸ் கமெர்ஷியல் போல இதுவும் ஒரு நித்யானந்தா கமர்ஷியல்தான் என்பதைப் பலர் புரிந்துகொண்டாலும்,  நித்யா படுக்கையறை ரகசியங்கள் எல்லாம் "மீடியாவால்" அம்பலப் படுத்திய பிறகே  அந்த வைரஸ் வந்து "கவனமாக" அந்தக்கட்டுரைகளை முழுமையாக சாப்பிட்டுவிட்டுப் போனது. இதெல்லாம் பழைய கதை.

இப்போ புதுக்கதைக்கு வருவோம்..

இலக்கிய மேதாவி ஜெயமோகன்  ஒரு சினிமா கமர்ஷியல் கொடுக்கிறார்! யாருக்கு? இன்னுமொரு மேதைக்கு! அதான் இந்த சினிமா மேதை கமலஹாசன் நடிக்கும் "பாபநாசம்" என்கிற படத்துக்கு. மலையாளப் பட "ரீமேக்"க்கான இப்படத்திற்கு  "கட்டுரை வடிவில்" ஒரு கமர்ஷியல் கொடுக்கிறார்.

இந்தக் "கமர்ஷியல் கட்டுரை"யில் இவர் சினிமா கலைஞர்களைப்பற்றி சிலாகித்து  புகழோ புகழோனு புகழ்ந்து (புளுகித்) தள்ளியுள்ளதைப் பார்த்தால்..தன் தேவைக்காக, யாரை வேணா தூக்கி வச்சு காவடி ஆடும் மகா மட்டமான ஒரு ஆள் இந்த இலக்கிய மேதை என்று தெளிவுபடுகிறது.




ஜெமோ - காஷ்மீர்


இந்தக் கட்டுரையை வாசித்தவுடன் இலக்கிய மேதாவி ஜெயமோஹந்தான் இதை எழுதினதா? இல்லைனா யாரோ இவர் "சகா" எழுதியதை  இங்கே வெட்டி ஒட்டி வச்சிருக்காரா? னு அதை வாசித்துவிட்டு நான் குழம்பிக் கொண்டிருக்கும் போது வினவு தளத்தில் இதை விமர்சிச்சு ஒரு பதிவு வந்துள்ளது.

அதுக்கப்புறம்தான் இந்த முழு உளறலுக்கு ம் சொந்தக்காரன் மேதாவி ஜெயமோவன் தான்னு இந்த மரமண்டைக்குப்புரிஞ்சது. உளறலில் ஒரு பகுதி, கீழே!!
ஆனால் டீக்கடைக் கிசுகிசுப்பேச்சாளர் முதல் வணிகசினிமாவை கரைத்துக்குடித்து அலசும் அறிவுஜீவி வரை எவருக்கும் தமிழ்சினிமாவைப்பற்றி அனேகமாக ஒன்றுமே தெரியாது! (இந்த எழவும் இந்தாளுக்கு மட்டும்தான்  தெரியும்!)

தமிழ் சினிமாவுலகம் உண்மையில் சிரித்துக்கொண்டே இருக்கிறது என எப்போதும் நினைப்பேன். தமிழ் அரசியலை, பண்பாட்டை, அறிவுஜீவிகளை தமிழ் சினிமா உலகம் பகடிசெய்துகொண்டே இருக்கிறது. வணிக சினிமாவை மிகமிக அதிகமாக கிண்டல்செய்வது சினிமாக்காரர்கள்தான். 
அப்படி பேசப்பட்ட சில பகடிகள் சினிமாவுக்குள்ளும் வந்துள்ளன. எப்படியும் ஒருலட்சம் நகைச்சுவைகளாவது இருக்கும். நாட்கணக்கில் ஒவ்வொரு நிமிடமும் சிரித்தால் தீராது. சினிமாக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு உயர்ந்த இலக்கிய ரசனை உண்டு, நல்ல சினிமா தெரியும். ஆனால் தமிழ் ரசனையின் ஒரு சரியான சராசரியை தொடுவதே அவர்களுடைய சவால். அதற்காகவே முயல்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியை இடைவெளியில்லாமல் பகடி செய்துகொண்டும் இருப்பார்கள்.
கட்டுரை கமர்ஷியல் புரிந்ததா?

ஆனால் ஒன்னு, என்ன எழவைப்பத்தி எழுதினாலும் அதில் தான் ஒரு "மேதை" என்பதுபோல்தான் எழுதும்  இந்தாளு. சினிமாவைப்பத்தி இவர் "சிலாகித்து உளறித் தள்ளுவது" பிறந்ததிலிருந்து சினிமாக்காரனா இருந்த சிவாஜி அல்லது எம் ஜி ஆர் கூட செய்ய முடியாது. சினிமா கலைஞர்கள் பத்தி இயக்குனர் சிகரமோ, அல்லது இலக்கிய திலகமோகூட  கூச்சமே இல்லாமல்  இப்படி   பொய்யும் பிரகடமுமா பீத்து பீத்துனு பீத்தி இருக்க மாட்டாங்க.

சினிமா என்பது ஒரு சொர்க்க பூமி என்றால்..சினிமா கலைஞர்கள் எல்லாருமே, எல்லா நிமிடங்களும் ஜாலியாக இருக்கிறார்கள் என்றால்..ஷோபா, படாப்பட் ஜெயலட்சுமி, லக்ஷ்மி ஸ்ரீ, சில்க் ஸ்மிதா என்று இவ்வளவு பேர் ஏன் தற்கொலை பண்ணி சாகிறாங்க? இந்தாளு சினிமா கலைஞர்கள்னு பிதற்றுவது முழுக்க முழுக்க "கீழ்த் தரமான ஆம்பளைகளை" மட்டுமேவா?

சினிமாவையும் சினிமாக் கலைஞர்களையும் உயர்தரமாக்கி எழுதுகிறேன் என்று இவ்வளவு கேவலமாக ஏன் இந்தாளு புளுகிறான்னு தெரியலை. அருவருப்பா இருக்கு இந்த ஆளை நெனச்சா!

ஒருவரை அநாகரிகமாக, கடுமையாக இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி விமர்சித்தால் அப்படி விமர்சிப்பவரைப் பார்த்தால் அருவருப்பாத்தான் இருக்கும். அதேபோல் ஒரு விசயத்தை, தமிழ் சினிமா கலைஞர்களை தன் தேவைக்காக இப்படி புகழோ புகழ்னு கூச்சமே இல்லாமல் புகழ்ந்து தள்ளியிருக்கான் இந்தாளு. இதுவும்  அருவருக்கத் தக்கவே இருக்கு!