நடிகர் நாகேஷ், நம்மைவிட்டு பிரிந்து வேறொரு உலகத்திற்கு போனதாக திரு ராஜ நடராசன் பதிவிலிருந்து அறிந்தேன் :(
http://parvaiyil.blogspot.com/2009/01/blog-post_31.html
--------------------------------------------------------
நாகேஷ் பற்றி கொஞ்சம் எழுதலாம்னு தோன்றியது. அதனால் விளைந்தது இந்தப்பதிவு!
நாகேஷ், நம்மைவிட்டு பிரியும்போது இவருக்கு வயது 77. இந்த நகைச்சுவை மன்னன் மறைந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறார்.
இவர் செய்த நகைச்சுவையில் என்னை மிகவும் கவர்ந்தவை!
* திருவிளையாடல் "தருமி"
* காதலிக்க நேரமில்லை "செல்லப்பா"
* ஆயிரத்தில் ஒருவன் "அழகன்"
இவர் படங்களில், சமீபத்தில் டி வி டி இல் பார்த்த படங்களில் நான் ரசித்த சிலவற்றை சொல்கிறேன்.
* வசந்த மாளிகையில் இவர் பேசுற ஒரு வசனம், "பெரிய துரை" பாலாஜியிடம் சொல்லுவார்,
"ஒத்துக்கிறேன், ஊர் குடியை எல்லாம் கெடுத்தது நான் தான். ஆனா, நீ என் குடியையே கெடுக்கப் பார்க்கிறயே? "
ஊரையெல்லாம் கெடுத்தாலும் தான் மட்டும் நல்லா வாழனும்னு நெனைக்கிற "கீழ்வர்க்கம்" தான் மனிதன் என்பவன் என்ற உண்மைதான் எனக்கு ஞாபகம் வரும்!
* எதிர் நீச்சலில், "மாது" பாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒண்ணு. மனிதன் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பவன் அல்ல! சிலர் உணர்வுகளை மதிக்காத முட்டாளகத்தான் வாழ்கிறான் என்பதை "மாது" என்கிற நாகேஷ் பாத்திரம் மூலம் பாலசந்தர் அழகா சொல்லி இருப்பார்.
* "தில்லானா மோகனம்பாள்" படத்திலே "வைத்தி" என்கிற மட்டமான "ப்ரோக்கரா" வந்து கிளப்புவார் நாகேஷ். வைத்தி இல்லைனா அந்த படத்தில் பல திருப்பங்களை எ பி நாகராஜன் கொண்டு வந்திருக்க முடியாது. வில்லன் இல்லாத அந்தப்படத்தில் எல்லோரும் வெறுக்கும் ஒரே பாத்திரம் இச்த "வைத்தி" தான்.
* அதே போல் கெளரவத்தில், "கண்ணன்" (சின்ன சிவாஜி) னை தூண்டிவிட்டு "பாரிஸ்டர் ரஜினிகாந்து"க்கு (பெரிய சிவாஜி)எதிராக இயங்க வைப்பதுபோல் ஒரு மட்டமான வக்கீலாக நடித்து இருப்பார், நாகேஷ்.
* தில்லுமுல்லுப் படத்தில் ரஜினிக்கு இரட்டை வேஷத்திற்கு உதவி செய்வதுபோல் உண்மையான நடிகர் நாகேஷாகவே கேசுவலாக வந்து நடித்து இருப்பார். ரஜினியின் இரட்டை வேட நாடகத்தையும், நாகேஷின் சினிமாவில் அவர் நடிக்கும் இரட்டை வேடத்தையும் அழகாக இணைத்து இருப்பார் இயக்குனர் கே பாலசந்தர்.
* அபூர்வ சகோதரர்களில் வில்லன்னாகவும் நடித்து ஜொளித்தவர் நாகேஷ்.
இவர் மறைந்தாலும் நம்மைவிட்டு பிரியப்போவதில்லை. நம் நினைவில் மற்றும் இவர் நடித்த படங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார், இருப்பார்!
இவர் குடுப்பத்தினருக்கு என்னுடைய வருத்தங்கள்! :(