Thursday, July 22, 2010

கதை எழுதுறாராம் கதை!

புதுசா ஏதாவது கதை எழுதனும்னு உக்காந்து யோசித்தான், மோஹன். அவன் என்ன யோசித்தாலும் ஏற்கனவே எங்கேயோ படித்ததாவோ அல்லது யாரோ எழுதியதாகவே இருந்தது. காதல், கல்யாணம், உறவுகள், உணர்ச்சிகள் எல்லாமே அந்தக்காலத்தில் இருந்து இப்போவரை அதேதானே? இதிலே என்னத்தை புதுமையை புகுத்துவது? பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம், துவேஷம், நன்றிமறத்தல், பழிவாங்குதல் போன்றவை காலங்காலமாக மனிதர்கள் அனுபவித்துக்கொண்டு வருவதுதானே? காதல் தோல்வி, நண்பன் துரோகியாவது, தகாத உறவு, திடீர் விபத்தில் சாவது இதெல்லாம் காலங்காலமா பல கதைகளில் எழுதிட்டாங்ளே. இதிலே என்ன புதுசா எழுதிக் கிழிக்கிறது? மோஹன் என்னத்தை புதிய கோணத்தில் யோசிச்சாலும் புதுசா எதுவும் அதிலே இல்லை! எல்லாமே ஏற்கனவே பலர் அனுபவித்து இவனைவிட நல்லாவே எழுதியதாகத்தான் இருந்தது. எல்லோரும் ஏற்கனவே சொன்னதை நம்மளும் புதுசா கதை எழுதுறோம்னு எதுக்கு திருப்பிச்சொல்லனும்?.

எழுதினால் ஏதாவது புதுசா கதை எழுதனும்! எதையாவது புதுமையாகச் சொல்லனும்! இதுவரை யாருமே சொல்லாதது. இதுவரை யாருமே எழுதாதது. இப்ப எல்லாம் விகடன் குமுததில் வருகிற எல்லாமே பழசாத்தான் தோனுது. பலவருடங்கள் முன்னால எங்கேயோ எப்போவோ படித்ததுபோல இருக்கு.
ஏதாவது ஆங்கிலக் கதை படிச்சு அதை இங்கே தமிழ்ல சொல்லலாமா? அதுபோல திருட்டுத்தனம் செய்வதில் எதுவும் திருப்தி கெடைக்கமாட்டேன்கிதே என்ன பண்றது?

சாமியார்களைப் பத்தி இல்லைனா பிச்சைக்காரர்களைப் பத்தி எழுதலாமா? அதுவும் பலர் எழுதிட்டாங்களே!

ஹோமோ செக்ஸுவல் காதல் பற்றி எழுதினால் புதுமையாக இருக்குமா? அவங்க காதல் மற்றும் காமவாழ்க்கை பத்தி எழுதினால் மட்டமான எண்ணங்கள்னு மக்கள் கண்டபடி திட்டுவானுகளோ? ஆனால் புதுமையாக இருக்குமே, இல்லையா?

இல்லை வில்லனை ஹீரோவாக்கி கதை எழுதிவிடலாமா? அதவாது கெட்டவன், அயோக்கியன் நல்லா வாழ்வதாகவும், நல்லவர்கள் ஒரு பாவமும் செய்யாதவங்க எல்லாக் கஷ்டமும் அனுபவிச்சு பரிதாபமாக சாவது போல எழுதினால் என்ன? உலகத்தில் இதுபோல நடக்கலையா என்ன? அப்படி எழுதினால் ஒருமாதிரியாக புதுமையா இருக்குமா? புதுமையாத்தான் இருக்கும் ஆனால் அப்படி ஒரு கதையை யார் படிப்பா? கதையின் நாயகன் நல்லவனாகத்தான் என்ன கதை எழுதினாலும் இருக்கனுமா? அப்படித்தானே காலங்காலமா எழுதுறாங்க? நம்ம மட்டும் அதை எப்படி மாற்றுவது? முடியாதா?

பேசாமல் கடவுள் துன்பம் தாங்காமல் கஷ்டப்பட்டு மனம் உடைந்து அழுகிற மாதிரி. அவரை மனிதர்கள் காப்பாத்தி வாழ வைப்பது போல எழுதினால் என்ன? அப்படி எழுதினால் இதுவரைக்கும் யாரும் எழுதாத புதுமையான கதையா இருக்குமா? கதை படிக்கிறவன்ல 90% மேலே ஆத்திகனாத்தான் இருக்கான். கடவுளை எல்லாம் இப்படி ஆக்கினால், கதைக்கு படுகேவலம்னுதான் விமர்சனம் வரும். வாசகர்களை திருப்தி படத்துறவந்தான் எழுத்தாளனா? தன் எண்ணங்களை வெளிப்படுத்துபவன் இல்லையா? இப்படி மோஹன் லூசுத்தனமான யோசித்துக்கொண்டிருக்கும்போது..

"என்னங்க ஒரே யோசனையாயிருக்கு?" என்றாள் மனைவி ருக்மணி

"சும்மாதான்..ஏதாவது புதுமையா கதை எழுதலாம்னு ஒரு புது ப்ளாட் சீரியஸா யோசிக்கிறேன்."

"நீங்க இன்னும் இதை விடலையா?"

"எதை?"

"இந்த கதை எழுதுறதைத்தான்.. படு மட்டமா இருக்கு உங்க கதை எல்லாம்! இதுக்கு செலவழிக்கிற நேரத்தில் ஏதாவது ஓவர் டைம் வேலை பண்ணினால் இதைவிட பத்து மடங்கு சம்பாரிக்கலாம். உங்களுக்கு எதுக்கு இதெல்லாம்?"

"உன்னிடம் போய் சொன்னேன் பாரு! நான் எழுதுற எந்தக்கதையையும் உனக்குப் பிடிக்காது! உன்னிடம் கொடுத்து விமர்சனம் பண்னச்சொன்னால் மொதல்ல உனக்கு என் கதையில் வர்ற எந்த ஹீரோயினை பிடிக்கவே பிடிக்க மாட்டேங்கிது. அதுக்காகவே மனசாட்சி இல்லாமல் தாறுமாறா ஏதாவது விமர்சனம் பண்ணுற!"

"என்ன சொல்றீங்க இப்போ? உங்க ஹீரோயின் மேலே எல்லாம் எனக்கு பொறாமைனுதானே சொல்ல வர்றீங்க?"

"இல்லை. உன் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு ஹீரோயினை உருவாக்கினால், அந்த ஹீரோ என்னவோ நான் போலவும், அந்த ஹீரோயின் ஏதோ உன் சக்களத்தி போலவும் எதையோ கற்பனை பண்ணுறயே ஏன் அது? சும்மா ஒரு கற்பனைதானே இந்த கதை அதில் வருகிற கேரக்டர்கள் இதெல்லாம்? அப்படி யோசிக்க வேண்டியதுதானே? "

"ரசிச்சு ரசிச்சுத்தானே கதை எழுதுறீங்க? உங்க கதையிலே வர்றாளே அந்த ஹீரோயினை ரசிச்சுத்தானே வர்ணிச்சு எழுதுறீங்க?"

"சும்மா கற்பனை கதைதானே?"

"உங்க கற்பனையில் வரும் பொண்ணு நிஜம்தான்!"

"அதெப்படி கற்பனை நெஜமாகும்?"

"அது நெஜம்தான். கதையா இருந்தாலும் அதுவும் ஒரு உண்மையான பெண்தான். உங்களால நெஜத்தில் முடியாததை எல்லாம் கதையில் உருவாக்கி அவ கிட்ட ஜொள்ளு விடுறீங்க"

"நாசமாப் போச்சு போ!"

"அதனாலதான் உங்க கற்பனை நாயகியை எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. அதுவும் என் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் இருக்கிறாளே அது ஏன்?."

"எல்லாக்கதையிலுமே உன்னை மனசில் வச்சு ஹீரோயினா எழுதினால், எல்லா ஹீரோயினுமே ஒரே மாதிரி இல்ல இருப்பாங்க?"

"இருந்துட்டுப் போகட்டுமே?"

"அப்படி எழுதினால் யார் படிப்பா?"

"ஏன் படிக்க மாட்டாங்க?"

" சினிமாலகூட நடிகைகளுக்கு மார்க்கட் கொஞ்ச நாள்தான் இருக்கு. காலேஜ்ல முதல் வருடம் வந்து சேருற பெண்களுக்குத்தான் மார்க்கட்! ரெண்டாவது வருடம் போயிட்டா அவ பேரழகியா இருந்தாலும் எவனும் திரும்பிக்கூட பார்க்கமாட்டான்"

"அதனால?"

"அதனால் ஒண்ணுமில்ல. உன்னப்போயி என் கதையை விமர்சனம் பண்ண சொன்னேனே, என்னச் சொல்லனும்"

"ஆமா, உங்க கதையை வேறெப்படி விமர்சனம் பண்றது? மட்டமா இருந்தா மட்டம்னுதான் சொல்லமுடியும்?"

"பேசாமல் நான் எழுதுற குப்பையை படிக்காமல் இருந்துடுவேன்?"

"நான் ஒரு ஜீவனாவது படிக்கிறேனே உங்க கதையை ? அதுவும் இல்லாமல் போயிடப்போது!"

"அப்பப்போ இப்படி வேற காமெடி பண்னுற?"

"உண்மை அதுதான்!"

"பேசாமல், நியூமூன், ஹாரி பாட்டர் மாதிரி ஏதாவது புதுமாதிரியா எழுதலாம்னு இருக்கேன்!"

"ஆமா எழுதி உங்ககதையை வச்சு கோடி கோடியா சம்பாரிச்சு எனக்கு வைர நெக்லஸ் வாங்கி தரப்போறீங்களாக்கும்?".

"தமிழ்ல கதை எழுதி இன்னும் யாரும் கோடி சம்பாரிக்கவில்லையாம். தமிழ் எழுத்தாளர் எல்லாம் ஏழைகள்தான்."

"சுஜாதா எல்லாம் ஏழையாவா இருந்தார்?"

"அவர் சம்பாரிச்சது எழுதி இல்லையாம். அவருக்கு பி இ எல் ல ஒரு நிரந்தர வேலை இருந்துச்சு. அதை வச்சுத்தான் அவர் பொழைப்பு ஓடுச்சாம்! கதை எல்லாம் சும்மா பொழுதுபோக்குக்காக எழுதினாராம்"

"அப்போ, ஒரு நல்ல கதையா அர்த்தமா எழுதி, சுஜாதாவுக்கே கெடைக்காத "ஞானபீட பரிசு" (Jnanpith award) வாங்கி பணக்காரறாகுங்க"

"அந்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?'

"எவ்வளவு?"

"வெறும் ஏழு லட்சம்தான்! உனக்கு வேண்டிய வைர நெக்லஸ் வாங்க அந்தப்பணம் பத்தாது"

"சரி சரி, இதை விட்டுட்டு ஆகவேண்டியதைப் பாருங்க! கதை எழுதுறாராம் கதை!"

8 comments:

Chitra said...

வாசகர்களை திருப்தி படத்துறவந்தான் எழுத்தாளனா? தன் எண்ணங்களை வெளிப்படுத்துபவன் இல்லையா? இப்படி மோஹன் லூசுத்தனமான யோசித்துக்கொண்டிருக்கும்போது..

...... இந்த வரிகளில் - ஆழமான விஷயம் இருக்கிறது. யோசிக்க வைத்து விட்டீர்கள்....ம்ம்ம்ம்.....

ராஜவம்சம் said...

கதை இல்லை என்று சொல்லியே ஒரு கதை அதில் சில செய்திகள்.

நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

வருண் said...

நன்றி, சித்ரா & ராஜவம்சம்! :-)

வருண் said...

***வார்த்தை said...

nice

23 July 2010 2:15 AM***

நன்றிங்க வார்த்தை! :)

'பரிவை' சே.குமார் said...

நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

வருண் said...

நன்றிங்க, சே. குமார்! :)

ராமலக்ஷ்மி said...

புதுமையாய் எழுத எப்படியெல்லாம் தலையை பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கு:)? உண்மைதான்.

//கதையின் நாயகன் நல்லவனாகத்தான் என்ன கதை எழுதினாலும் இருக்கனுமா? அப்படித்தானே காலங்காலமா எழுதுறாங்க?//

இல்லையே! Anti hero படமெல்லாம் நிறைய வருதே. சக்கைப்போடும் போடுதே:)!

வருண் said...

***இல்லையே! Anti hero படமெல்லாம் நிறைய வருதே. சக்கைப்போடும் போடுதே:)!***

வாங்க ராமலக்ஷ்மி! வில்லனும், ஆண்ட்டிஹீரோவும் கொஞ்சம் வேற வேற தானங்க? இல்லையா? வில்லனை ஹீரோவாக்குவதுதான் ஆண்ட்டி ஹீரோவோ? :-)