Wednesday, November 19, 2014

மங்கை உள்ளம் பொங்கும்போதும் வேலிகள் உண்டு!

சுகன்யாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. காஃபி எடுத்து கொடுத்த அட்டண்டண்ட்க்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் காஃபியை வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் போய் அமர்ந்தாள். வெயில் அதிகமாக இருப்பதால் ஒரு சல்வார் காமிஸ் அணிந்து வந்திருந்தாள். இவளுடைய இந்திய அவுட்ஃபிட்டை வழக்கம்போல ஒரு சிலர் ஒரு மாதிரியாக பார்த்தார்கள். 46 வயதிலும் சுகன்யா அழகுதான். தன் அழகு  பல ஆண்களை கவர்வதை மற்றவர்களின் பார்வையிலேயே உணர்ந்தாள். மற்ற ஆண்கள் தன்னைப்பார்ப்பதை ரசிக்கும் அவள் அதே பார்வை இன்று தன்னை மணந்த கணவன் பார்த்தால் மட்டும் அவளுக்கு பிடிக்கவில்லை! அருவருப்பாக இருந்தது!

இப்போது சனிக்கிழமை காலை 11 மணி. இந்த விடுமுறை நாளில்கூட அவளுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. வீட்டில் இருந்தால் அந்த ஆளையும் அவர் செய்கிற நாலு மணிநேர பூஜையையும் பார்க்க வேண்டும். அவரைப்பார்த்தாலே பிடிக்கவில்லை! அவர் வாயை திறந்தால் கோபம் தலைக்கு ஏறியது! அவர் பூஜையும் அவர் வழிபாடும்! என்றுமே நிறுத்த முடியாத புகைபிடிக்கும் பழக்கம் வேற! இவரெல்லாம் என்ன விஞ்ஞானி? புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்னு தெரியாத பெரிய விஞ்ஞானி? இந்தாளு பேசுறதெல்லாம் வியாக்யானம் ஆனால் பண்ணுறதெல்லாம் அயோக்கியத்தனம்! அவர் செய்யும் எல்லாவற்றிலும் வடிகட்டிய சுயநலம் நிறைந்து வழிகிறது! இதில் கடவுளையும் தன் அயோக்கியத்தனத்திற்கு உதவிக்கு அழைக்கிறார் போலும்! ஆமாம், இப்படி மணிக்கணக்காக பகவானை வழிபட்டு வழிபட்டு, யாரை ஏமாற்றுகிறார் இந்த ஆளு? கடவுளையா? தன்னையேவா? இல்லை ரெண்டு பேரையும் சேர்த்தா? யாரை வேணா ஏமாற்றட்டும் என்னை விட்டால் போதும்!

மனுஷாளை மனுஷா புரிஞ்சுக்கணும்! அதற்குத்தான் ஆறாவது அறிவு! இல்லைனா மிருகத்துக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அடுத்தவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாத மிருக ஜென்மம் இது! கொஞ்சமாவது முயற்சியாவது செய்கிறாரா, புரிந்துகொள்ள? கடவுளின் தேவைகள்  மட்டும் இவருக்கு புரிகிறது! இல்லை, புரிந்துகொண்டதாக நம்புகிறார். இவர் குடும்பத்துக்கு செய்யவேண்டிய கடமையை செய்யாமல், எந்த விதமான கெட்ட பழக்கங்களையும் குறைக்காமல், முழுநேரமும் கடவுள் புகழ்பாடினால், அவரை துதித்தால்.. உடனே கடவுள் இவரை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொள்வார் என்று இவராகவே நம்புகிறார். என்ன ஒரு பரிதாபம்! அறியாமையின் உச்சம்!

மனைவி வேண்டும்! எதற்காக? விதவிதமாக சமைத்துப்போட! இவருக்குத் தேவையான நேரத்தில்  இவர் இஷ்டப்படி  இவரை இன்பத்தில ஆழ்த்த! ஆனால் இவரால் உடம்பை வளைத்து வேலை பார்க்க முடியாது! குடும்பத்திற்காக எந்தவித தியாகமும் செய்ய முடியாது! சம்பளம் இல்லாமல் எப்படி பில் மற்றும் மார்ட்கேஜ் கட்டுவது நான்? சம்பாரிக்காமல் எப்படி சாப்பிடுவது? இவர் இவரோட பகவானா வந்து கட்டுவான் வருகிற பில்லை எல்லாம்? இவர் கொடுக்கிற பூ வழிபாடு, புகழ்ச்சியெல்லாம் கேட்டு என்ன செய்வான் பகவான்? புகழுக்கு மயங்குகிற சாதாரண ஒருவர்தானா என்ன கடவுள்?

இதென்ன இந்தியாவா? ஒரு அரசாங்க வேலையை வாங்கிக்கொண்டு எல்லோரையும் குறைசொல்லிக்கொண்டு காலம் முழுவதும் குப்பை கொட்ட? வேலை செய்ய முடியலைனா வண்டியைக்கட்ட வேண்டியதுதானே இந்தியாவிற்கு? கஷ்டப்பட்டு சம்பாதிக்க உடல் வளையமாட்டேன் என்கிறது. இதில் எனக்கு கை வலிக்குது, கால் வலிக்குது மூட்டு வலிக்குதுனு நாடகம் வேற! "எண்டெர்"னெட் பாக்க மட்டும் எப்படி முடியுது அப்போ?

இந்த ஆளோட எப்படி வாழ்வது? சரி உன்னைப்பிடிக்கவில்லைனு தெரிந்தால்  விட்டுவிட்டு போய் தொலைய வேண்டியதுதானே? கொஞ்சமாவது சுயமரியாதை வேணாம்? இதில் கேள்வி வேற! அப்போ  மட்டும் ஏன் என்னைப் பிடித்தது? இப்போ ஏன் பிடிக்கவில்லை?. இதை எல்லாம் பச்சையாக சொல்ல முடியுமா என்ன? அவங்கவங்களுக்கா புரியணும். ஒன்று மட்டும் புரிந்தது சுகன்யாவுக்கு! இந்த ஆளு இவளையும் நிம்மதியாக வாழ விட மாட்டான், அவனும் வாழ மாட்டான்! சுகன்யாவுக்கு கோபமும், அழுகையுமா வந்தது !

இதே கணவனைத்தான் 25 வருடங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டாள். அதிசயமாக இருந்தது இப்போது அதை நினைத்தால் அவளுக்கு! இவரையா காதலித்தோம் ? இன்று ஒரு இணுக்களவு காதல் கூட எஞ்சி இல்லை அவளிடம்! சுமார் 26 வருடங்கள் முன்பு! ஐ ஐ டி யில் பி எச் டி பண்ணுவதற்காக பயோ கெமிஸ்ட்ரி டிப்பார்மெண்டில் சேர்ந்தாள் சுகன்யா. இவள் சேர்ந்த ஆய்வகத்தில், 5 வருட சீனியர் ரிசேர்ச் ஸ்காலராக இருந்தார் ராகவன். அழகாக இருந்ந்த அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தார். இவளுக்கு கோர்ஸ் வொர்க் பண்ணும்போது எல்லாவிதமான சந்தேகங்கள், அசைன்மெண்ட் எல்லாவற்றுக்கும் ராகவன் வழியவே வந்து உதவி புரிந்தார். ராகவன், இவளைவிட நல்ல நிறம்! மேலும் அவரிடம் அழகு, நிதானம் எல்லாமே நல்லாத்தான் இருந்தது அன்று. அவரிடம் கெட்ட பழக்கம் என்று சொன்னால், கொஞ்சம் ஸ்மோக் பண்ணுவார்போல தெரிந்தது. அன்று அது பெரிய தவறாகத்தெரியவில்லை. காதலில் விழுந்தாள் சுகன்யா. அது காதலா? இல்லை என்னவோ ஒண்ணு! அந்த நேரத்தில் நன்றாகத்தான் இருந்தது.

இவள் தான் படிக்கபோன பி எச் டி யை முடிக்காமல், பாதியில் விட்டுவிட்டு இரண்டாம் வருடம் படிக்கும்போதே ராகவனைக் கல்யாணம் செய்துகொண்டாள். சுகன்யாமேல் அவள் அப்பாவுக்கு பயங்கர கோபம். இவள் பாதியில் படிப்பை நிறுத்தியது அவள் தந்தைக்கு சுத்தமாகப்பிடிக்கவில்லை. கல்யாணம் நடந்து எண்ணி ஒரு வருடத்தில் அங்கேயே ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொண்டாள். அழகாக மூக்கும் முழியுமாக இருந்தாள் காயத்ரி. பிறகு அவர் மேல்ப்படிப்புக்காக அமெரிக்கா வரும்போது, கணவருடன் சேர்ந்து வந்தாள். இங்கே வந்தவுடன் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ரமேஷ் என்றழைத்தார்கள். அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வாங்கிய பிறகு இவளும் வேலைக்குப்போனாள். நல்லவேளை பி எச் டியை பாதியில் நிறுத்தினாள்! எம் எஸ் க்கு, பி எச் டியை விட வேலை வாய்ப்பு அதிகமாக இருந்தது! வாழ்க்கை ஓரளவு நன்றாகத்தான் போனது ஒரு 15 வருடம். இப்போழுது வளர்ந்து, மூத்தவள் கல்லூரியில் சீனியராக இருக்கிறாள். பையன் ஹைஸ்கூலில் ஜூனியர். அவர்கள் ஓரளவுக்கு இண்டிப்பெண்டெண்ட் ஆக ஆகிவிட்டார்கள்!

பசங்கள் இருவருக்குமே சுகன்யாவைத்தான் ரொம்ப பிடிக்கும், ஆனால் அப்பா பிடிக்காது என்றில்லை. என்னதான் இருந்தாலும் அப்பா-அம்மா சேர்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு பிடிக்கிறது. அமெரிக்காவில் வளரும் வாழும் பசங்க எப்படி இருப்பார்கள்? சுயநலத்தின் முழு உருவம்! சுயநலமாக இருப்பது தவறு என்றெல்லாம் அமெரிக்காவில் மாரல்ஸ் சொல்லித் தருவதில்லை. ஒரு வேளை அப்படி அவர்களுக்கும் சொல்லித்தந்திருந்தால் அவர்களும் இன்னொரு தேர்ட்-வேர்ல்ட் நாடாக இருப்பார்களோ என்னவோ.

இங்கே வளரும் குழந்தைகளுக்கு என்ன மனநிலை? தனக்கு அப்பா அம்மா எல்லாமே தரணும், அவர்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளணும். சரி, அவர்களை படிக்கவைத்து மேலே கொண்டு வந்தாச்சு! அவர்கள் இப்போ அம்மா இவள் உணர்ச்சியை புரிந்து கொள்கிறார்களா? "அப்பாவை ஏன் வெறுக்கிறாய்?" என்று அவர்கள் கேட்கும்போது இவளுக்கு எரிச்சலாக வந்தது. குழந்தைகளுக்கு என்ன தெரியும், இவளுடைய தேவைகள்? அவர்களுக்கு தெரியுமா, அவருடன் படுப்பதே அருவருப்பாக உள்ளது என்று? மனைவிக்குத்தான் தெரியும் கணவனின் அந்தரங்கப்பகுதி.

அவர்களிடம் சொல்ல எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல முடியுமா?  இவர்கள் அப்பா ஊர் உலகத்தைப்போல், சம்பாதித்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்தால், நான் ஏன் அவரை வெறுக்கிறேன்? எனக்கு காதலிக்க தெரியாதா? இல்லை அன்பாக இருக்கத் தெரியாதா? தேவையே இல்லாமல் ஒருவரை அதுவும் கைப்பிடித்த கணவனை வெறுப்பேனா? பணம் இல்லைனா பிணம்னு தெரியாதா இந்த ஆளுக்கு?

சுகன்யாவுக்கு இன்னொரு சந்தேகம். இந்த ஆள் இவளை பழி வாங்குகிறாரா? ஒரு மாதிரியான "சாடிஸ்டா" இவர்? யோசித்துப்பார்த்தால் இவர்களுக்குள் பிரச்சினை ஆரம்பித்ததே சுகன்யா, கணவன்  ராகவனைவிட அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன்தான். இவள் அதிகம் சம்பாதிக்கிறாள் என்கிறதால் தான் இப்படி இருக்கிறாரோ ? அதனால்தான் எந்த வேலையும் ஒழுங்காக பார்க்க மாட்டேன் என்கிறாரோ? சரி எது எப்படியோ போகட்டும், இருவருக்கும் ஒத்துவரலை என்றால் விவாகரத்துக்கு சரினு சொன்னால் என்ன? இரக்கமே இல்லாமல் நாந்தான் உனக்கு இந்த வாழ்க்கையே கொடுத்தது என்றல்லவா பேசுகிறானே பாவி! ஆமாம் இவர்தான் இந்த அமெரிக்க வாழ்க்கை கொடுத்தாரு! இவரால்தான் அமெரிக்கா வந்தேன். ஆனால் இவரை சந்திக்கலைனா நானா பி எச் டி முடித்து வந்து இருப்பேனே! மேலும் இவருக்கு நான் கொடுத்ததெல்லாம்? இப்படி எல்லாம் கணக்குப் பார்க்க முடியுமா என்ன?

சுகன்யாவின் தோழிகள் இவள் உணர்வுகளை புரிந்தாலும், அவர்களால் எதுவும் பெரிதாக உதவி செய்ய முடியவில்லை என்பதே உண்மை. "உன் வாழ்க்கை சுகன்யா, நீதான் முடிவு பண்ணணும்" என்று சொல்லாமல் சொன்னார்கள். இந்திய கலாச்சாரத்தை அமரிக்காவில் வந்து வாழ்ந்து காக்கும் இந்தியப் பெரியமனிதர்கள் சிலர், சுகன்யாவிடம் "இந்த வயதில் இதென்ன விளையாட்டு?" என்று இவள் ஏதோ தேவையே இல்லாமல் விவாகரத்து கேட்பதுபோல் பேசுகிறார்கள். அவளுக்கு கோபமாக வந்தது! யார் சொன்னா எனக்கு வயதாகிவிட்டது என்று? யாருடைய அட்வைஸைக் கேட்டாலும் எரிச்சலாக வந்தது அவளுக்கு.

ஒரு சில நலம்விரும்பிகள் நேரடியாகவே சுகன்யாவை பயமுறுத்தினார்கள், “இவள் விவாகாரத்துக்குப் போனால் தற்கொலை பண்ணிகொள்வார் ராகவன் என்று” ஆமாம், இரண்டு முறை அப்படி அவர் நாடகம் ஆடியதும் உண்டு. நான் சம்பாதிக்க மாட்டேன், தினமும் 4 மணி நேரம் பூஜை செய்வேன், என்னால் குடிப்பதையோ அல்லது ஸ்மோக் பண்ணுவதையோ, வேறு எதையுமே தியாகம் பண்ண முடியாது என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டியதுதானே?

 ராகவனுக்கு இவள் மேல் அளவில்லாத ஒருதலைக் காதலாம்! தன்னைக் காதலிக்காத, மேலும் அடியோட வெறுக்கும் மனைவியை இவர் எப்படி இன்னும் காதலிக்க முடியும்? புரியவே இல்லை அவளுக்கு! ஆனால் இவர் தற்கொலை பண்ணிக்கொள்வாரோ என்று சுகன்யாவே பயந்தாள். காரணம்? இவள் காதல் கிடைக்கவில்லையே என்ற விரக்திலாம் இல்லவே இல்லை! இவளை பழிவாங்க வேண்டும் என்கிற கேவலமான எண்ணம் ராகவனுக்கு இருக்கலாம். அப்படி ஏதாவது விபரீதம்  நடந்தால் ஊர் உலகம் ராகவனுக்கு சிலையும்,  சுகன்யாவுக்கு  கொடுமைக்காரி பட்டமும் கொடுக்கும் என்கிற கேவலமான எண்ணத்தினால் தற்கொலைகூட  செய்யலாம் என்று நம்பினாள், சுகன்யா.

எனக்கு என் வாழ்க்கையை என் இஷ்டம்போல் வாழ சுதந்திரம் இல்லையா? . இதுதான் உலகமா? இதுதான் வாழக்கையா? என்கிற பழைய பாடலுக்கு இன்று அர்த்தம் புரிந்தது அவளுக்கு. பிடிக்காத ஒருவருடன் வாழ்வது நரகம்தான் அவளைப் பொருத்தவரையில். எதற்காக இப்படி இவரோட அர்த்தமில்லாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழணும்? இந்த பாழாப்போன உலகத்திற்கு எனக்காக நான் வாழ ஆசைப்படுவது ஏன் பெரிய தப்பாத்தெரியுது? நான் நிம்மதியாக இருக்கணும் என்று நினைப்பது பேராசையா? சுகன்யாவுக்குப் புரியவில்லை!

சுகன்யாவுக்கு வாழ்க்கை கசந்தது. நிம்மதி எல்லாம் போய்விட்டது. "மங்கை உள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது?" என்பதெல்லாம் ஆண்களே பெண்களை ஏய்க்க எழுதிய வெறும் அர்த்தமில்லாத பாடல் வரிகள்! சுகன்யாவைப் பொருத்தமட்டில். மங்கை உள்ளம் பொங்கும்போதும் வேலிகள் உண்டு! நாமாகப் போட்டுக்கொண்ட வேலிகள் சில!  நம்மைச் சுற்றியுள்ளோர் போட்டவைகள் பல!

சுகன்யா காஃபியை குடித்துவிட்டு புறப்பட்டாள் வீடு என்கிற நரகத்திற்கு! தன் உணர்வுகளை புரியாத மதிக்கத்தெரியாத, சுயமரியாதையே இல்லாத, அந்த சுயநலவாதியுடன் தொடர்ந்து வாழ!

diclaimer: கட்டுரைபோல் இருக்கும் இது ஒரு "கற்பனைக் கதை" தான்!

அந்தக்காலத்தில் எழுதிய ஒரு மீள்பதிவு!

15 comments:

கோமதி அரசு said...

மங்கை உள்ளம் பொங்கும்போதும் வேலிகள் உண்டு- நாமாகப் போட்டுக்கொண்டவேலிகள் சில, நம்மைச் சுற்றியுள்ளோர் போட்டவைகள் பல! //

உணமை.
மங்கையை போல பெண்கள் வாழந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நொந்த ஒரு பெண்ணின் மன ஓட்டங்கள்..தேவையற்ற பெருமை பேசும் சமூகத்தினால் இப்படி நொந்து வாழும் பல பெண்கள்!! என்னைக்கேட்டால் இவர்கள் பிரிந்து சென்று அர்த்தமுள்ள வாழ்வு வாழச் சொல்வேன்..என்ன, அப்படிச் சொன்னா திமிர் பிடித்தவள், அகராதின்னு சொல்வாங்க வருண், சொல்லிட்டுப் போகட்டும் :)

வருண் said...

***கோமதி அரசு said...

மங்கை உள்ளம் பொங்கும்போதும் வேலிகள் உண்டு- நாமாகப் போட்டுக்கொண்டவேலிகள் சில, நம்மைச் சுற்றியுள்ளோர் போட்டவைகள் பல! //

உணமை.
மங்கையை போல பெண்கள் வாழந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.***

வாங்க, கோமதியம்மா! குழந்தைகளுக்காக, இல்லைனா பெற்றோருக்காக, இல்லைனா சமூகத்துக்கு பயந்து, பெண்கள் இப்படியும் வாழத்தான் செய்றாங்க. :(

வருண் said...

***தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நொந்த ஒரு பெண்ணின் மன ஓட்டங்கள்..தேவையற்ற பெருமை பேசும் சமூகத்தினால் இப்படி நொந்து வாழும் பல பெண்கள்!! என்னைக்கேட்டால் இவர்கள் பிரிந்து சென்று அர்த்தமுள்ள வாழ்வு வாழச் சொல்வேன்..என்ன, அப்படிச் சொன்னா திமிர் பிடித்தவள், அகராதின்னு சொல்வாங்க வருண், சொல்லிட்டுப் போகட்டும் :)***

வாங்க கிரேஸ். சேர்ந்து அழகாக வாழமுடியலைனா பிரிந்து வாழ்வதில் தவறு ஏதும் இல்லை, கிரேஸ். ஒருவரை ஒருவர் முழுவதும் வெறுத்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது தேவையற்றது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு ஃபைனான்ஸியல் இண்டிபெண்டென்ஸ் இல்லை என்பதால் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள். இப்போது ஓரளவுக்கு மாறிக்கொண்டுதான் வருதுனு நினைக்கிறேன். :)

Avargal Unmaigal said...

பாஸ் உங்களது மீள் பதிவு கதைகள் எல்லாமே நன்றாக இருக்கிறது

G.M Balasubramaniam said...


சில கருத்துக்களைக் கட்டுரையாக வடிப்பதை விட கதையாகச் சொல்லிப் போகிறீர்களோ என்று தோன்றுகிறது. கதையிலும் ஒரு பக்கமே காட்டப் பட்டுள்ளதுபோல் தோன்றுகிறது.வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

என் தளத்தில் கீதை -எண்ணப் பகிர்வுகள் வருகைதர வேண்டுகிறேன் நன்றி

வருண் said...

***Avargal Unmaigal said...

பாஸ் உங்களது மீள் பதிவு கதைகள் எல்லாமே நன்றாக இருக்கிறது**

நன்றி, நண்பரே! :)

வருண் said...

சில கருத்துக்களைக் கட்டுரையாக வடிப்பதை விட கதையாகச் சொல்லிப் போகிறீர்களோ என்று தோன்றுகிறது. கதையிலும் ஒரு பக்கமே காட்டப் பட்டுள்ளதுபோல் தோன்றுகிறது.வாழ்த்துக்கள். ***

வாங்க ஜி எம் பி சார்! :)

நீங்க சொல்வதுபோல் எதிர்பக்கம் உள்ளவரை பேசவிட்டால், ராகவன் அப்பாவியாகவும், சுகன்யா பாவியாகவும் ஆக்கிவிடுவார் என்பதென்னவோ உண்மைதான். :)))

கதைகளில் சுகன்யாக்களை உருவாக்குவதும், இதுபோல் அவள் உணர்ச்சிகளை வார்த்தைகளால் அள்ளிக்கொட்டி பேச விடுவதும், கடைசியில் கதை எழுதும் ஆண், தன்னையே அறியாமல், ராகவந்தான் அப்பாவி என்பதுபோல் கோடிட்டுக்காட்டி கதையை முடிப்பதும், காலங்காலமாக நம் "பெண்ணியவாதி ஆசிரியர்கள்" எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாமும் அதற்கே பழக்கப் பட்டுவிட்டோம் என்று நினைக்கிறேன். இங்கே அதுபோல் முடிப்பதை நான் தவிர்த்து இருக்கிறேன், சார். :)

வருண் said...

***G.M Balasubramaniam said...

என் தளத்தில் கீதை -எண்ணப் பகிர்வுகள் வருகைதர வேண்டுகிறேன் நன்றி**

என்னை அழைத்தமைக்கு நன்றி சார். உங்கள் தளம் சென்று அப்பதிவில் என் சிந்ந்தனைகளை சொல்லியிருக்கேன்.:)

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அதே.. :)
ஆமாம், மாறிக்கொண்டுதான் வருகிறது வருண், ஆனால் சமூகம் நியாயம் புரிந்துகொள்வதைவிட, இன்னும் அதைத் தவறாகத் தான் பார்க்கிறது

Kasthuri Rengan said...

கதையை இன்னும் சிலமுறை திரும்ப டிராப்ட் அடித்தால் அசத்தும் ...
இப்பவெ நல்லாத்தான் இருக்கு ...

வருண் said...

***தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அதே.. :)
ஆமாம், மாறிக்கொண்டுதான் வருகிறது வருண், ஆனால் சமூகம் நியாயம் புரிந்துகொள்வதைவிட, இன்னும் அதைத் தவறாகத் தான் பார்க்கிறது.***

அப்படி ஒரு கலாச்சாரத்தில் நாம் பிறந்து வளர்ந்துவிட்டோம், கிரேஸ். நியாயமான தீர்வுகளைக் கூட தப்பான தீர்வு என்று சொல்லும் "ஜூரிக்கள்" நிறைந்ததுதான் நம் சமூகம். :)

வருண் said...

*** Mathu S said...

கதையை இன்னும் சிலமுறை திரும்ப டிராப்ட் அடித்தால் அசத்தும் ...
இப்பவெ நல்லாத்தான் இருக்கு ...**

ஆமாம் மது, இன்னும் கதையை "செப்பனிடணும்"தான். கருத்துரைக்கு நன்றி மது! :)

ஆரூர் பாஸ்கர் said...

அருமை வருண்! உங்கள் ஈமெயில் சொலுங்களேன்- ஆரூர் பாஸ்கர்