Monday, February 15, 2010

மனுஷியும் தெய்வமாகலாம்!

"இங்கே பாரு வேடிக்கையை! நம்ம வசந்தாக்காவும், வள்ளி அத்தையும் ராசியா இன்னைக்கு சினிமாவுக்குப் போறாங்க!" என்றான் முனியசாமி.

"நீ சும்மா இருக்க மாட்டியா முனியசாமி?" என்றாள் வசந்தா சிரிப்புடன்.

"சரி சரி, ரெண்டு பேரும் ஒழுங்கா படத்தை பார்த்துட்டு வாங்க. தியேட்டர்ல சண்டைய ஆரம்பிச்சுடாதீங்க!"

"சும்மா இருடா முனி! நல்லா வாயில வந்துடப்போது!" என்றாள் வள்ளி அத்தை சிரிச்சுக்கிட்டே!

"என்னைப்போட்டு கிழிச்சுடாதே அத்தை! நான் வாயைத் திறக்கல"

******************************

"உங்க அத்தையாடா அது, முனி?"

"இல்லடா சும்மா அத்தைனு கூப்பிடுவேன்."

"எப்படிடா ரெண்டு பேரும் திடீர்னு ஒண்ணு சேர்ந்துக்கிட்டாங்க?"

"நீ அன்னைக்கு இவங்க போட்ட சண்டை பார்த்தியாடா, முத்து?"

"இது மாதிரி ஒரு சண்டை நான் வாழ்நாள்ல பார்த்ததே இல்லைடா!"

"ஆமடா அசிங்க அசிங்கமா புழுத்த வார்த்தையா சொல்லி திட்டி சண்டை போடுவாங்க! கொஞ்ச நாள்ல திடீர்னு ஏதாவது ஒரு கோயில் திருவிழால ஒண்ணு சேர்ந்துடுவாங்க!"

"அய்யோ போன மாசம் போட்ட சண்டையை நீ பார்த்திருந்தா!"

"முதல் தடவையா? ஆமாடா, வடக்குத் தெருல இருந்து நீ ஆறுமாதம் முன்னாலதான் இங்கே வந்த?. மறந்தே போச்சு எனக்கு! அதானாக்கும்?"

"உலகத்தில் உள்ள எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி ரெண்டு பொம்பளைங்க சண்டை போடுறதை இந்தத் தெருவிலேதாண்டா முதல் முறை பார்த்தேன்!"

"எங்க தெருல தாய்க்குலம் எல்லாம் அப்படித்தாங்க! பெரிய பெரிய சண்டியர்களே மூடிக்கிட்டுப் போயிடுவானுக. இவ்னக்ககிட்ட எதுக்கு வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டனு"


"அதுக்காக இப்படியா? உலகத்தில் உள்ள எல்லாவிதமான அசிங்கமான கெட்டவார்த்தைகளும் அவர்கள் சண்டைபோடும்போது வந்தது"

"அதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுதோ இல்லையோ, அதைச் சொல்லி ஒருத்தை ஒருத்தர் திட்டுவதிலே அவங்களுக்கு ஒரு இன்பம்! அதைவிட இத வேடிக்கை பார்க்க எத்தனை பேர் அலையிறானுக தெரியுமா? உன்னையும் சேர்த்துத்தான். சண்டையே அதுக்குத்தான்டா. எல்லாம் அட்டென்ஷன் தேவைப்படுது!"

"ஆமா, உங்க வள்ளி அத்தைக்கு சாமியெல்லாம் வருமாமில்லை?! அது உண்மையா?"

"ஆமா முளைக்கொட்டு சமயத்திலே எதோ சாமி ஆடும். மாரியாத்தா வந்திருக்கேணன்டா னு என்னத்தையாவது செய்யனும் சொல்லும்! அப்புறம் விபூதியைத் தலையில் அடிச்சு அடங்க வைப்பார் பூசாரி. வருசத்துக்கு ரெண்டு முறையாவது சாமி வரும்."

"இதெல்லாம் உண்மையா? "

"என்னைக்கேட்டால்? நானா சாமி வந்து ஆடினேன்?

"ஒரு நாள், "ஹோர்", "ஸ்லட்" னு வெளியிலே சொல்ல முடியாத எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி அசிங்க அசிங்கமா திட்டுறாங்க. இன்னொரு நாள் தெய்வமாயிடுறாங்க!"

"நான் வேணா வள்ளி அத்தைட்ட கூட்டிப்போறேன். நீ வேணா கேளேன் அதுட்ட!"

"என்ன ஆளவிடுப்பா!"

No comments: