Wednesday, December 5, 2012

அடுத்தவீட்டுப்பெண்-விமர்சனம்


Add caption
 தமிழ் சினிமாவில் காதல்ப்படங்கள் இன்றைய தேதிக்கு என்ன நிலைமையில் இருக்கு? வசந்த மாளிகை, ஒருதலை ராகம், வாழ்வே மாயம், முதல் மரியாதை என்று வந்து இன்னைக்கு அரை டவுசர் எஸ் ஜே சூரியாவும், சைக்கோ செல்வராகவனும், அல்லது அவங்க அப்பா மரைகழண்ட கஸ்தூரி ராஜாவும் கழிவுபட்ட படங்களை எடுத்துவிட்டு அதை காதல்ப் படங்கள்னு சொல்லிப் பிழைப்பு நடத்துற நிலைமைனு சொல்றீங்களா?!

இருந்தாலும் கல்லூரி, ஏப்ரல் மாதத்தில், உன்னை நினைத்து போன்றவை பரவாயில்லைதான்.

சரி நம்ம இப்போ ஒரு 40 வருடங்கள் முன்னால போவோம். போய் அழகான வசீகரமான அடுத்த வீட்டுப்பெண்ணைக் கொஞ்சம் கவனிப்போம். சரியா?

ஐயோ ப்ளாக் அண்ட் வைட் படம்லாம் எனக்குப் பிடிக்காதுங்கனா தயவுசெய்து இடத்தை காலி பண்ணுங்க சார்/மேடம்! உங்களுக்காக இல்லை இந்தப்பட விமர்சனம்!

இது 60 ஸ்ல வந்த ஒரு அழகான காதல் கலந்த காமடிப் படம். இன்றும் இதை ரசித்துப்பார்க்க முடியும் - என்னைப் போல ஒரு சிலரால் மட்டுமே. அந்தக்காலத்தில் காதலை வலியுறுத்தி ஒரு படம் இவ்வளவு விரசம் இல்லாமல் எடுக்கவும் முடிஞ்சிருக்கு என்பது நம்ம ரொம்ப பெருமைப்பட வேண்டிய விசயம்தான்.

இந்தப்படத்தில் தடுக்கி விழுந்தால் பாடல்கள்! எல்லாம் தேனா இருக்கும்! (நெசம்மாத்தான் சொல்றேங்க)! அஞ்சலிதேவியின் கணவர்தான் இசையமைப்பு, டைரக்ஷன், தயாரிப்பு எல்லாமே!

* 1. கன்னித்தமிழ் மணம் வீசுதடி காவியத்தென்றலுடன் பேசுதடி

* 2. பிரேமையின் ஜோதியினால்

* 3. சங்கம் இது! கற்றார் நிறைந்த சங்கம் இது

* 4. மலர்க்கொடி நானே மகிழ்ந்திடுவேனே கவிக்குயில் போலே இன்ப கானம்பாடுவேனே

* 5. கையும் ஓடல காலும் ஓடல கண்ணே உன் ஆசையினாலே

* 6. மன்னவா வா வா மாசில்லா வா

* 7. வாடாத புஷ்பமே! வற்றாத செல்வமே! தறி நாடாவைப் போல் ஆடும் இதயத்திலே தினமும் உந்தன் தாபமே!

* 8. கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே!
காதாலே கேட்டுக் கேட்டு செல்லாதே!
காதல் தெய்வீகராணி! போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனசைவிட்டுத் துள்ளாதே!

* 9. எனக்கு ராஜா நீயே

* 10. கண்களும் கவி பாடுதே! கண்ணே உன் கண்களும் கவி பாடுதே! (இது ஒரு போட்டிப்பாட்டு)

* 11. மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே! (கடைசிப்பாட்டு)

சிரிப்பு நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் தான் ஹீரோ! ஆனால் உண்மையில் இதில் ஹீரோயின் அஞ்சலிதேவியும் (இவர் சொந்தப்படம்) , தங்கவேலும்தான் முக்கிய ஹீரோ பாத்திரங்கள்.

கதை:

மன்னார் (டி ஆர் ஆர்) பண்புள்ள தரமான ஒரு இளைஞன். தன் வயதான மாமாவுடன் (60 வயதில் இன்னொரு கல்யாணம் (அதுவும் ஒரு சின்னப் பெண்ணை) செய்ய ஆசைப்படுகிறார்) என்று அவருடன் கோபித்துக்கொண்டு அவருடன் சண்டை போட்டுவிட்டு தன் அத்தையிடம் (டி பி முத்துலட்சுமி) வந்து சேர்கிறார். கூறுகெட்ட மாமாவின் துணைவியான அத்தையும், அவளுக்கு உதவிக்கு ஒரு வேலைக்காரப் பையன் தனியாக வாழும் வீட்டில் மன்னாரும் வசிக்க வருகிறான்.

மன்னார் ரொம்ப நற்பண்புகள் கொண்ட இளைஞன். அத்தையின் வீட்டில் அவனுக்கென்று மாடியில் ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குவருகிறான். ரொம்ப நாள் குடித்தனம்  இல்லாமல் இருந்த பக்கத்துவீட்டில் ஆட்கள் இருக்கும் அரவம் கேட்கிறது. அது ஒரு அழகான இளம்பெண் அங்கும் இங்கும் அலைவது இருப்பதுபோல இருக்கு. மன்னாருக்கு  ஒரே க்யூரியாஸிட்டி!

"காலியா இருந்த பக்கத்துவீட்டில் யாரு குடிவந்து இருக்கிறார்கள், அத்தை?" என்று கேட்கிறான்.

"நல்ல குடும்பம். அந்த குடுப்பத்தில் அப்பா அம்மா ஒரு பொண்ணு.அப்பாவும் அம்மாவும் குணத்தில் தங்ககம்பி, ஆனால் அந்தப்பொண்ணு இருக்கே அது ஒரு குரங்கு!" என்கிறாள் அத்தை.

"ஏன் அத்தை அப்படி சொல்றீங்க?'

"பொண்ணா அது! எந்நேரமும் ஒரே ஆட்டமும் பாட்டும், வயசுப்பொண்ணு ஒழுங்கா அடக்கமா இருக்க வேணாம்? எனக்கு சுத்தமாக பிடிக்கலை" என்கிறாள் அத்தை.

அத்தை மருமகனை, பலகாரம் சாப்பிட சொல்லிவிட்டு கீழே போவாள்.

இந்த ஒரு சூழ்நிலையில்..

 பக்கத்துவீட்டில் உள்ள "அழகான குரங்கு" லீலா (அஞ்சலிதேவி) ஒரு அமுதகீதம் பாடுகிறாள். ஆஹா!

அதுதான் இரண்டாவது பாடல் பிரேமையின் ஜோதியினால்னு ஆரம்மிக்கும். ஒரு அழகான அர்த்தமான க்ளாசிக் பாடல் (பி சுஷீலா) இது!

பிரேமையின் ஜோதியினால்...
பேரின்பம் எங்கும் பொங்கும்
இவ்வையம் தங்கும் மெய்யன்பினால்
பேதமெல்லாம் அழியும் - இப்புவிமேல்
அன்பு மழை பொழியும்.

பாரில் பிரேமை ஒன்றில்லையானால்
சீருலாவிடுமோ.. ஓ...
ஜீவன் வாழ்ந்திடுமோ.... - மெய்யன்பினால்
துன்பம் மறைந்தொழியும் - இப்புவிமேல்
இன்ப மழை பொழியும்.. ஓ..

மனத்தாலே நினைத்தாலும்
இனிப்பாகும் எண்ணம்
மாறாது வளர் காதல் கொண்டாலே திண்ணம்..ஓ..
ஆணும் பெண்ணும் அன்பாலே இணைந்தால்
அமர வாழ்வல்லவோ.. மெய்யன்பினால்
ஜாதி மறைந்தொழியும் - இப்புவிமேல்
நீதி மழை பொழியும் .. ஓ


இது ரொம்ப ரொம்ப நல்ல பாடல்!

யு-ட்யூப் தொடுப்பு இங்கே!

பாடல் வரிகளும் குரலும் இசையும் பிரம்மாதமாக இருக்கும் நம்ம மன்னார் ரொம்பவே ரசிப்பார்.மயங்கிவிடுவார் அஞ்சலிதேவியைப்பார்த்து. காதலும் கலப்புத் திருமணமும்தான் ஜாதியை ஒழிக்கமுடியும் என்பதை அழகா சொல்லி இருப்பாள் அந்த அருமையான பாடல் வரிகளில். எப்போ? 40 வருசத்துக்கு முன்னாலே! நம்ம திருந்திவிடுவோமா என்ன?

மன்னார் மட்டுமல்ல, அவன் அத்தையும் (டி பி முத்துலெட்சுமி) பாட்டை ரொம்பவே ரசித்துத்தான் கேட்பார்கள். ஆனால், பாட்டு முடிஞ்சதும், அத்தை மறுபடியும் மேலே வருவாள்.

"பாட்டு ரொம்ப பிரமாதம் இல்லையா, அத்தை?" என்பார் மன்னார். அத்தையின் "ஒப்பீனியன்" கேட்பார். :)

"பாட்டா இது? ஒரு ராமாயணம், பாரதம் பாடாமல், இப்படி ஒரு வயசுப்பொண்ணு காதல் பாட்டா பாடுவாங்க! பொண்ணா அது! பொண்ணுனா அடக்கம் வேணும்" னு சான்றிதழ் கொடுப்பாள்.

இதை பக்கத்துவீட்டிலிருந்து ஒட்டுக்கேட்ட லீலா (அஞ்சலிதேவி), பயங்கரகோபத்துடன், ஒரு சவுக்கு, துடைப்பத்துடன் வந்து, ஜன்னல் வழியாக மன்னாரை அழைப்பாள்..

"ஏய் மிஸ்டர்!"

"ஏன்"

"அந்த கெழவி என் பாட்டைப்பத்தி கேவலமா பேசும்போது ரொம்பத்தான் ரசிச்சீங்களே?'

"பே பே"

"இனிமேல் நீயோ, அந்த கிழவியோ என் பாட்டை பத்தி ஏதாவது சொன்னீங்க, இந்த சவுக்கையும் விளக்குமாறையும் வச்சு விளாசு விளாசுனு விளாசிவிடுவேன்! இடியட்! ஸ்டுப்பிட்!" என்று கொடுப்பாள்.

மன்னார் லீலாவின் அழகையும், மிரட்டலையும் பார்த்து அரண்டு போய் தன் நண்பர்களிடம் உதவிக்காக ஓடுவார்.

யாரு நண்பர்கள்?

தங்கவேலு, கருணாநிதி, மற்றும் இரு காமடி நடிகர்கள்! இவர்கள் ஒரு சங்கம் நடத்துவார்கள்.

"கற்றார் நிறைந்த சங்கம் இது! காரியம் கைகூடும் சங்கம் இது! என்று ஒரு பாடல்.

நண்பர்களிடம் போய் மன்னார் தன் காதலை கைகூட உதவி செய்யச்சொல்லிக் கேட்ப்பார். அவர்கள் எல்லோரும் மான்னார் வீட்டு மாடிக்கு வருவார்கள், அந்த அழகான ராட்சசியைப் பார்க்க.

அப்பொழுது, மலர்க்கொடி நானே பாடல் காட்சி. நண்பர்கள் அனைவரும் பாட்லையும், பாடகரையும் பார்த்து மயங்கிவிடுவார்கள்! "நல்ல செலக்ஷன்டா மன்னாரு" என்று மன்னாரை பாராட்டுவாங்க!

இதிலே என்ன பிரச்சினைனா, மன்னாருக்கு சுட்டுப்போட்டாலும் பாட்டுப்பாட வராது. ஆனால், லீலாவை அடைய ஒரே வழி, நல்ல பாடகனாக இருக்கனும்.

இதற்கிடையில் ஒரு பாட்டு வாத்தியார் (மன்னாருக்கு வில்லன்), "புலவர் பூவரசன்" (நடிகர் பக்கிரிசாமி?) லீலாவுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பார். பாதி பாட்டு பாதி ஜொள்ளு. அவனையும் சமாளிச்சு அவளை வெல்லனும்.

"யார்டா இவன் புதுசா?" என்பான் மன்னார்

"இவந்தான் உன் சகலை! இவனைத் தெரியாதாடா மன்னாரு? பழைய பாட்டுப்புத்தகம் ப்ளாட்ஃபார்ம்ல வித்துக்கிட்டு இருந்தான்டா இவன். இப்போ புலவர் பூவரசன் னு பேரை மாத்திக்கிட்டு பாட்டு வாத்தியார் ஆகிட்டான்" என்பான் நண்பன் தங்கவேலு.

அந்த நேரத்தில அழகான பி பி எஸ் பாடல் வரும்,

லீலாவைப்பார்த்து "புலவர் பூவரசர்" வர்ணித்து ஜாடையாக பாடுவான்!

"வாடாத புஷ்பமே!
வற்றாத செல்வமே!
தேடாத தெய்வீக பிம்பமே!
தறி நாடாவைப்போல் ஆடும் இதயத்திலே தினமும் உந்தன் தாபமே!கோபமேன்?
வனிதாமணியே! நீ வாராய் அமுத கனியே!

யு-ட்யூப்ல இருக்கு இந்தப் பாடல்!

இதைப் பக்கத்துவீட்டிலுருந்து மன்னார் கோஷ்டி பார்த்து வயிறு எரியும்! இப்போ லீலாவை இம்ப்ரெஸ் பண்ண ஒரே வழி, நல்லா பாடுவது! மன்னாருக்கு பாட்டுப்பாட ட்ரயினிங் கொடுப்பாங்க, நண்பர்கள். ஆனா மன்னாருக்கு பாட்டு வரவே வராது!

மன்னாரை வாயசைக்க வைத்து தங்கவேலு பின்னால் இருந்து பாடுவார்.

என்ன பாடல்?

கண்ணாலே பேசிப் பேசிக்கொல்லாதே!
காதாலே கேட்டுக்கேட்டு செல்லாதே!
காதல்தெய்வீகராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனசைவிட்டுத் துள்ளாதே!

யு-ட்யூப்ல இருக்கு இந்தப் பாடல்! 

இந்த முதல் பாடல்லயே, மன்னார் மேலே மதிப்பும், மரியாதையும் காதலும் வந்துவிடும் லீலாவுக்கு. படம் இப்படியே ரொம்ப ஜாலியாப் போகும், கடைசிவரை.

கடைசியில் ரொம்ப நல்ல முடிவு!

இதுவரை அடுத்தவீட்டுப்பெண் லீலாவை பார்க்கவில்லைனா கட்டாயம் பாருங்க! ரசிக்கத்தக்க இருப்பாள்!

* இது ஒரு மீள் பதிவே!

4 comments:

இனியன் பாலாஜி said...

எது எதற்கோ பின்னூட்டம் போடும் அன்பர்கள் இதற்கு போடவில்லையே எனும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. மிகவும் அருமை
இது போன்ற நிறைய படங்களைப் பற்றி எழுதுங்கள். இன்னும் மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற மெல்லிய நகைச்சுவைப் படங்கள் இருக்கின்றன. இப்போதுள்ள நிலைமையில் அந்த படங்கள் என்றால் சோகம் என்று ஒதுக்கி விடுவது வழக்கம்.ஆனால் அந்தக்காலத்தில் கவலையை மறக்க இதுபோன்ற படங்கள் துணையாக இருந்திருக்கின்றன. ஒரு முறை கெயிட்டி தியேட்டரில் செல்வம் என்ற படத்திற்கு போயிருந்தேன். அடுத்த காட்சிக்காக வெளியில் காத்திருந்தேன். உள்ளே தொடர்ச்சியாக சிரிப்பலைகள்.அந்த கடைசி கிளைமாக்ஸ் காட்சி அத்தனை அருமையாக எடுத்திருந்தார்கள். இன்று மாறி வரும் உலகில் இன்றைய தலைமுறையோடு நாமும் போவது தான் நல்லது என்றாலும் பழைய படங்களும் பாடல்களும் மனதுக்கு இதம் தருபவை.இப்போது வேண்டுமானால் நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற படம் நீண்ட இடைவெளீக்கு பிறகு சிரிக்கும்படி இருந்தது.
நிறைய எழுதுங்கள்.
இனியன் பாலாஜி

வருண் said...

வாங்க பாலாஜி:

உங்களைமாரி ஒரு சிலராவது இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிங்க. :-)))

Good citizen said...

வழக்கமாய் நான் பின்னூட்டம் அதிகம் போடுவதில்லை, ஆனால் இனியன் பாலாஜி சொன்னது போல் ஒரு நல்ல படத்திற்கு பின்னூட்டங்கள் இல்லாத போது சற்று வருத்தமாகத் தான் இருக்கிறது,,அடுத்த வீட்டுபெப்பெண் ஒரு நான்ஸ்டாப் காமெடி ரகம்,பாடல்கள் தேன் சொட்டும்(எண்ணிக்கை அதிகம்)தற்போதிய ஜனரேசனுக்கு பொருமை இருக்காது,,குழம்பிய அல்லது களங்கிய மனநிலையில் உள்ளவர்களுக்கு பயப்படாமல் இந்த படத்தை பரிந்துரைக்கலாம் Relaxation is guarantied

வருண் said...

***இந்த படத்தை பரிந்துரைக்கலாம் Relaxation is guarantied***

வாங்க நல்ல குடிமகன்!

உண்மைதாங்க, ரிலாக்ஸேசன் உத்திரவாதம்! :)

தங்கள் கருத்துக்கு நன்றி :)